விளக்கேற்ற உகந்த நேரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வீட்டில் விளக்கேற்ற உகந்த நேரம் பற்றிய பதிவுகள் :



பொதுவாகவே பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து ஸ்நானம் செய்து விட்டு வீட்டில் விளக்கேற்றுவது மிகவும் அதிர்ஷ்டமான பலன்களை கொடுக்கும் என்பது சாஸ்திரம்.

 எல்லோராலும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கு ஏற்றுவது என்பது கடினமான காரியம். ஆனால் இதை செய்பவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது உறுதி. 

பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை மூன்றிலிருந்து நான்கரை மணியை குறிக்கிறது. இந்த நேரத்தில் விளக்கு ஏற்றுபவர்களுக்கு தேவர்களின் ஆசீர்வாதமும், தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

சுத்தமான காற்றும் முழு அமைதியும் நிரம்பி இருக்கும் இந்த பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த சக்தியும் அந்த நேரத்தில் நமக்கு கிடைக்கின்றன. அந்த நேரத்தில் சாதாரணமாக எழுந்து விட்டு நமஸ்காரம் செய்து கொண்டாலே யோகம் உண்டாகும். தியானம், யோகா போன்றவை அந்த நேரத்தில் 10 நிமிடம் செய்தாலே அன்றைய நாள் முழுவதும் நல்ல ஆற்றல்களும், உற்சாகமும் கொண்டு விளங்கலாம். 

நம் அனைவராலும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கொள்ள முடியாது. அதற்கு பதிலாக வேறு என்ன செய்யலாம் என்பதைப் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு இணையாக இருப்பது சூரியன் மறையும் நேரமாக இருக்கும் சந்தியா காலம் ஆகும். கிட்டத்தட்ட சந்தியா காலமும், பிரம்ம முகூர்த்தத்துக்கு இணையானது தான். சந்தியா காலம் என்பது மாலை வேளையில் மூன்றில் இருந்து ஆறு மணி வரை கொண்ட காலம் ஆகும். இதில் இறுதியாக இருக்கும் ஒரு மணி நேரம் மிகவும் விசேஷமானது. மாலையில் தினமும் 5 லிருந்து 6 மணிக்குள்ளாக விளக்கேற்றுவது சாஸ்திர நியதி. வெள்ளிக் கிழமைகளில் 6 மணிக்கு மேல் தான் சிலர் விளக்கு ஏற்றுவார்கள். இப்படி செய்வதை விட 6 மணிக்குள்ளாகவே நாம் விளக்கு ஏற்றி விடுவது மிக மிக நல்லது. ஐந்திலிருந்து ஆறு மணிக்குள் தினமும் பூஜை அறையில் 3 விளக்குகளை வைத்து வழிபடுவது ராஜ யோகத்தைக் கொடுக்கும். 

சந்தியா கால நேரத்தில் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் அத்தனை தெய்வங்களின் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தினமும் மாலை வேளையில் ஐந்திலிருந்து இறை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தால் உங்களுக்கு இருக்கும் அத்தனை கஷ்டங்களும் நீங்கி நல்ல விஷயங்கள் நடக்க துவங்கும். நீங்கள் செய்ய செய்ய உங்களுக்கு அவற்றின் மகத்துவத்தை உணர கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இப்படி சந்தியா கால வேளையில் ஏற்றும் விளக்கானது மஞ்சள் திரியை கொண்டு ஏற்றுவது மிக மிக நல்ல பலன்களைக் கொடுக்க வல்லது. 

ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் ஒவ்வொரு நிறத்தில் திரியை ஏற்றுவது வழக்கம். அவ்வகையில் மஞ்சள் நிற திரியானது துன்பங்களைப் போக்க கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. சாதாரண திரியில் மஞ்சள் தோய்த்து காய வைத்து பின்னர் பயன்படுத்தினால் கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகம். 

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுபவர்கள் 5 விளக்கில் இது போல் மஞ்சள் திரியை கொண்டு தீபம் ஏற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த இரண்டு வேளைகளும் இறை வழிபாட்டிற்குரிய மிக மிக விசேஷமான காலம் ஆகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top