பௌர்ணமி விரதங்களும் அவற்றின் சிறப்பும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து முக்கிய பௌர்ணமி விரதங்களும் அவற்றின் சிறப்பும் பற்றிய பதிவுகள் :

மாதம்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும்.

சித்ரா பௌர்ணமி : (சித்திரை) அனைவரின் செயல்களையும் பதிவு செய்யும் சித்ரகுப்தனின் பிறந்த நாள். அவரை நினைவதன் மூலம் நம் கடந்த வருட செயல்பாட்டை நாமே மதிப்பிடும் தினம். மதுரையில் மிகு சிறப்பு.

வைகாசி பௌர்ணமி : (விசாகம்) நல்லோரையும், நலிந்தோரையும் துன்புறுத்திய சூரனை அடக்கிட முருகன் அவதரித்த நாள். தீது அழிந்து, நன்மை நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தினம். திருச்செந்தூரின் தென்மேற்கே 30 கி.மீ. கடற்கரைத்தலமான உவரியில் மிகு சிறப்பு.

ஆனிப் பௌர்ணமி : (மூலம்) தாயினும் மேலான இறைவனுக்கு தித்திக்கும் நல்கனிகளையெல்லாம் (குறிப்பாக மா, பலா, வாழை) படைக்கும் நாள். திருவையாற்றில் மிகு சிறப்பு.

ஆடிப் பௌர்ணமி: (பூராடம்/உத்ராடம்) விஷ்ணு விரத வழிபாட்டுக்கு உகந்த நாள். காஞ்சியில் மிகு சிறப்பு.

ஆவணிப் பௌர்ணமி: (அவிட்டம்) வட பாரதத்தில் ரட்சாபந்தனம் என்று மிகக் கோலாகலமாக அனைவரிடமும் நல்லுறவை வளர்க்கும் திருநாள். 

புரட்டாசி பௌர்ணமி: (பூரட்டாதி/உத்ரட்டாதி) சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வர விரத பூஜை நாள். வட நாட்டில் பிரபலம்.

ஐப்பசி பௌர்ணமி: (அசுவதி) வடநாட்டில் லட்சுமி விரதமும், தென்னாட்டில் சிவனுக்கு அன்னாபிஷேகமும் விசேஷம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மிகு சிறப்பு.

கார்த்திகைப் பௌர்ணமி: (கார்த்திகை) பரம்பொருள் அளத்தற்கரியது என்பதை நமக்கு உணர்த்துவதற்காக மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள். நம்முடைய நிலை கருதி பெருஞ்சோதி அண்ணாமலையில் மலையாகி அருளுகிறது. திருவண்ணாமலையில் மிகு சிறப்பு.

மார்கழிப் பௌர்ணமி: (திருவாதிரை) இக்காலம் பலரும் பணிப்பித்தராய் இருப்பது போல, முன்பும் சில முனிவர்கள் கர்மாவே பெரிது என்ற எண்ணியபோது, எல்லாவற்றையும் ஆட்டுவிப்பவராக இறைவன் நடராஜனாய் காட்சியளித்த திருநாள். சிதம்பரத்திலும், திரு உத்தர கோசமங்கையிலும் மிகு சிறப்பு.

தைப் பௌர்ணமி: (பூசம்) மிகு சிறப்புடைய பூச நட்சத்திரத்தன்று பரம்பொருளுக்கு பெருவிழா நடத்தும் நாள். மதுரையிலும், பழனியிலும் மிகு சிறப்பு.

மாசிப் பௌர்ணமி: (மகம்) ஒரு முறை படைப்பு துவங்கிய நாளில், அனைவரும் புனித நீராடி விரதமிருந்து பரமனை வழிபடும் நாள். தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிகு சிறப்பு.

பங்குனிப் பௌர்ணமி: (உத்திரம்) இல்லறமே நல்லறம் என்று உணர்த்துவதற்காக, சிவன் உமையை மணக்கும் திருவிளையாடல் நிகழ்ந்த நாள். பழனியில் சிறப்பு. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top