நவகிரக வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவகிரக வழிபாடு பற்றிய பதிவுகள் : 

ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி, அவரவர் ஜாதகத்தில் கிரகநிலை அமைந்திருக்கும். எல்லாருக்கும் ஜாதகத்தில் நவகிரகங்கள் எல்லாமே சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை.

இதனால் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபட கோயிலை நோக்கி புறப்படுகிறோம். அங்கு சென்று வழிபட்டு திரும்பும்போது, மன நிம்மதி கிடைக்கிறது. ஆனால் அப்படி கோயிலுக்குச் சென்று நவகிரகங்களை வழிபடுவதில் இன்னமும் பல்வேறு விதமான குழப்பங்களும், சந்தேகங்களும் பக்தர்களிடையே நிலவி வருகிறது. 

குறிப்பாக நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்ற தவறான கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது.  

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாகச் சுற்ற வேண்டும் என்றும் ராகுவும் கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்ற வேண்டும் என்றும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இது தவறான கருத்து.

இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும். அதேபோல எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். 

எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது. இது கிரகங்களுக்கு மட்டும் அல்ல, ஆலயத்திலுள்ள அனைத்து சிலைகளுக்கும் தான்.

கிரக வழிபாடும் பலன்களும் :

சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும். 

சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.   

செவ்வாயை (அங்காரன்) வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும். 

புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.

குரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும். 

ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும். 

கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும். 

திருஞானசம்பந்தரின் 'கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடல் : 

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. 

இந்தப்பாடலை நவகிரகங்களை சுற்றிய பிறகு கோயில் பிராகாரத்தில் அமர்ந்து, மனதிற்குள் பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top