குரு பகவான் மற்றும் தட்சிணாமூர்த்தி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து குரு பகவான் மற்றும் தட்சிணாமூர்த்தி பற்றிய பதிவுகள் :

தட்சிணாமூர்த்தி என்பவர் யார், குரு பகவான் என்பவர் யார் என்பது பலருக்கு வேறுபாடு தெரிவதில்லை. இந்த தெய்வங்களை எப்படி வணங்குவது, அவர்களுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம், அணிவிக்க வேண்டிய வஸ்திரம் என்ன, அவர்களுக்கிடையே உள்ள தனித்துவம் என்ன என்பதைப் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவில் மூலம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

நம்மில் பெரும்பாலானோர் தட்சிணாமூர்த்தியும், குரு பகவானும் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் ஞான குரு, மற்றொருவர் நவகிரக குரு என்பது பலருக்கும் தெரிவதில்லை.

இதன் காரணமாக கோயில்களில் வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குவதற்காக அல்லது பரிகாரம் செய்வதற்கு என நினைத்து தட்சிணாமூர்த்தி முன் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

அதே சமயம் உண்மையான குரு முன் வழிபடச் செல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக குரு பகவானுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை தட்சிணாமூர்த்தி முன் செய்து வருகின்றனர்.

குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: 
குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம 
தஸ்மைஸீ குருவே நம:

என்ற ஸ்லோகத்தில் குரு என்ற வார்த்தைக்கு தட்சிணாமூர்த்தி என்று அர்த்தம். ஆனால் குரு என குறிப்பிடப்படுவதால் குரு பகவானும், தட்சிணாமூர்த்தியும் ஒன்று என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நவகிரகங்கள் என்பது இறைவன் இட்ட கட்டளையை, கடமையைச் செய்யக் கூடிய ஒன்பது கோள்களாகும். அவற்றில் ஒருவர் தான் குரு பகவான் எனும் ப்ரஹஸ்பதி.

சிவன் கோயிலில் தென்முகம் பார்த்து அருள்பாலிப்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் எப்போது தியானத்தில் ஆழ்ந்திருப்பார். தட்சிணாமூர்த்தி என்பவர் ஞான குரு. அவருக்கு விருப்பமான நிறம் வெண்மை. அதனால் அவர் வெண்ணிற ஆடையில் அருள்பாலிப்பார். (ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம் என வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. அதாவது ஸ்வேதம் என்றால் வெண்மை என்று பொருள்.

இவர் சிவ பெருமானின் ரூபம். ஸ்நகாதி முனிவர்களுக்கு வேத ஆகமத்தை உபதேசிக்கும் குருவின் உருவமாக தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் அடியில் அமர்ந்திருக்கக் கூடியவர். இவரை ஞான குரு அல்லது ஆதி குரு என அழைக்கப்படுகிறார்.

ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தி முன் நாம் தியானத்தில் அமர்ந்து வழிபடலாம். அதே சமயம் ஞானத்தை வேண்டுபவர்களுக்கு வியாழக்கிழமை தான் உகந்தது என்று இல்லை. எந்த கிழமையானாலும் அவருக்கு உகந்ததே.

நவகிரகங்களில் இருக்கக் கூடிய குரு பகவானோ வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பார். இவருக்கு உகந்த நிறம் மஞ்சள். அதே போல் அவருக்கு விருப்பமான நைவேத்தியம் கொண்டைக் கடலை. இவருக்கு மஞ்சள் வஸ்திரத்தைச் சாற்றுவதும். கொண்டைக்கடலை மாலை அணிவிப்பதும் உகந்தது.

ஆனால் குரு என்பவர் இந்திர லோகத்தில், தேவர்களுக்கெல்லாம் குருவாக, ஆலோசனை வழங்கக் கூடியவராக அதாவது ஆசிரியர் பணியை செய்யக் கூடியவர். ஆசிரியர் தொழிலைச் செய்வதால் இவரை பொதுவாக குரு என அழைக்கப்படுகின்றார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top