ஆனித் திருமஞ்சனம் பற்றிய சிறப்புகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆனித் திருமஞ்சனம் பற்றிய சிறப்பு பதிவுகள்

சிதம்பரம் கயிலாய நாதன் சிவபெருமானுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் அபிஷேகத்திற்கும் சிவதரிசனம் செய்யவும் உகந்த நாட்களாக போற்றப்படுகிறது.

ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆனி மாதம் ஷஷ்டி திதியும் சேர்ந்த ஆனி உத்திர தரிசனம் மிக சிறப்பு வாய்ந்தது. பூலோகக் கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது..

சிவபெருமானின் பஞ்சசபைகளில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். சிதம்பரம் கோயில் ஐந்து சுற்று பிராகாரங்களைக் கொண்டது.

இக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை நேர் எதிரே அமையப் பெறாமல் சிறிது இடப்புறம் தள்ளி அமைந்துள்ளது. இது மனித உடலில் இதயம் இடப்பு றம் அமைந்துள்ளதை ஒத்து இருக்கிறது என்கிறது தல புராணம்.

மனித உடலை ஒத்து அமைந்துள்ளதாகக் கூறப்படும் இக்கோயிலின் கூரை, மனிதன் நாள் ஒன்றுக்கு மூச்சுவிடும் எண்ணிக்கையான 21,000 முறையைக் கணக்கில் கொண்டு அதே அளவு ஓடுகளால் வேயப் பட்டுள்ளன. மனித உடலில் ஓடும் நாடிகள் 72,000. இதே எண்ணிக்கையில் ஓடுகளைப் பதியச் செய்ய ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.

ஆனித்திருமஞ்சனம் திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். ஆடலரசரான நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.

பிற திருமஞ்சன நாட்களான சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.

பதஞ்சலி மகரிஷி சிதம்பரம் நடராஜ பெருமானை திருமூலர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோர் வணங்கியுள்ளனர்.

பொன்னம்பல நாதர் அருள்புரியும் சிதம்பரத்தில் ஆனி உத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.

அன்று பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர்.

ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. இவர் ஆதிசேஷனின் அம்சம்.

நடராஜருக்கு அபிஷேகம் அன்றைய தினத்தில் சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும்.

அப்போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும்.

பத்துநாட்கள் நடைபெறும் ஆனித்திருமஞ்சன விழாவில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது. பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் தேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி.

மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது.

தேர் வீதியுலா ஆயிரம் கால் மண்டபம் வந்தடைய நள்ளிரவாகி விடுவதால் இரவு முழுவதும் நடராஜரும் சிவகாமியம்மையும் இம்மண்டபத்தில்தான் தங்குவார்கள். மறுநாள் திருமஞ்சனம் நடைபெறும்.

அபிஷேகம், அலங்காரம் முடிந்தபின் இருவரும் ஆனந்தத் தாண்டவம் ஆடியபடி ஞானசபையான சிற்சபையில் எழுந்தருளுவார்கள். அங்கு கடாபிஷேகம் நடைபெறும்.

தீர்க்க சுமங்கலி பாக்கியம் உலக இயக்கத்தையே தனது உடலுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு ஆனந்த நடனமாடும் நடராஜரைப் பார்த்தாலே பக்தர்களுக்குப் பரவசம்தான்.

ஆனித்திருமஞ்சன நாளில் தில்லை காளி அம்மனுக்காகக் காத்திருந்து தரிசனம் தந்து திரும்புவார் நடராஜர். இதில் குளிர்ந்து கோபம் தணிவாள் தேவி என்பதும் ஐதீகம்.

இந்தத் திருமஞ்சன நிகழ்ச்சியில் சுமங்கலிகள் கலந்துகொண்டால், நீடூழி வாழுகின்ற சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள்.

கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல்பலமும் வளமும் கூடும் என்பது ஐதீகம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top