பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள் பற்றிய பதிவுகள் :

1. மயிலாடுதுறை- திருவாரூர் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது திலதர்ப்பணபுரி. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல் காட்சி தருகிறார்!

2. ராமேஸ்வரம் கோயிலின் நுழைவாயிலில் தரிசனம் தரும் இரட்டைப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே கோயிலுக்குள் செல்லவேண்டும்.

3. மருதமலையில் ஆலமரம் முதலான ஐந்து விருட்சங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இடத்தருகில் அருள்கிறார் பஞ்சவிருட்ச கணபதி. பஞ்ச விருட்சத்தின் அடியில், முனிவர்கள் அருவமாக தவம் செய்வதாக ஐதீகம்!

4. தாமரை மலரில் அமர்ந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக கையில் கரும்புடன் காட்சி தருகிறார் திருப்பரங்குன்றம் கற்பக விநாயகர்.

5. கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரம் மகாதேவர் கோயிலில் அருளும் விநாயகர் ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனும், மாசி முதல் ஆடி வரை கறுப்பு நிற மேனியராகவும் காட்சி தருவார். நிறம் மாறுவதால் இவரை, பச்சோந்தி விநாயகர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.

6. சென்னை- மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப் பாளையம். இங்குள்ள விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம். இவரை, வலஞ்சை விநாயகர் என்கின்றனர்.

7. நவநீத கிருஷ்ணரைப் போன்று அழகிய குழந்தை வடிவில் உள்ள விநாயகரை, வேலூர் கோட்டையில் சிற்பக் கலை நிறைந்த கல்யாண மண்டபத்தில் தரிசிக்கலாம்.

8. அரியலூர்- ஜெயங்கொண்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள வைரவனீஸ்வரர் ஆலயத்தில், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப்பயிற்சி தந்த வில்லேந்திய விநாயகரை தரிசிக்கலாம்.

9. ஐங்கரனான விநாயகர் மூன்றுகரத்தோனாக எழுந்தருளும் தலம் பிள்ளையார்பட்டி. இங்கே, விநாயகருக்கு வெள்ளை ஆடை மட்டுமே அணிவிக்கின்றனர். சகஸ்ரநாம அர்ச்சனைக்காக, தினமும் 108 மோதகம் படைப்பதும் இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு.

10. திருவையாறு கோயிலில் அருள்கிறார் ஓலமிட்ட விநாயகர். நள்ளிரவில் ஓலமிட்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டிருப்பதை ஊர்மக்களுக்கு உணர்த்திக் காப்பாற்றியதால் இவருக்கு இந்தத் திருநாமம்! இதே தலத்தில் லிங்கத்தின் ஆவுடைப் பகுதியின் மீது அமர்ந்தருளும் ஆவுடைப்பிள்ளையாரை தரிசிக்கலாம்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top