சிவபெருமானுக்கு ஆதிரை நாளில் களி படையல்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவபெருமானுக்கு ஆதிரை நாளில் களி படையல் பற்றிய பதிவுகள் :

மார்கழி மாத திருவாதிரை தினத்தில் சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல துணை கிடைப்பர். மாங்கல்ய பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது. இதை மாங்கல்ய நோன்பு என்று அழைக்கின்றனர். 

மார்கழி திருவாதிரை நாளில், சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்கலாம். நாள் முழுவதும் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று வடிவம் கொண்டவர். இம்மூன்று வடிவங்களிலும் சிவபெருமான் அருள்புரியும் தலம் சிதம்பரம்தான். 

தில்லை நடராஜருக்குக் களி படைக்க காரணம் :

முன்னொரு காலத்தில் தில்லையில் சேந்தனார் என்னும் சிவபக்தர் வாழ்ந்து வந்தார். அவர் விறகு வெட்டி, விற்று தன் குடும்பத்தை நடத்தி வந்தாலும், தினமும் சிவபூஜை செய்ய தவறமாட்டார். அதுமட்டுமல்லாமல் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு விருந்தளித்து மகிழ்வார். சிவனடியார்கள் உணவு உண்பது சிவபெருமானே நேரில் வந்து உண்பதாக நினைத்து மகிழ்வார். 

ஒருநாள் திருவாதிரைத் திருநாளுக்கு முதல் நாள் இரவிலிருந்து கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது, தொடர் மழையால் எங்கும் வெளியில் விறகு வெட்டச் செல்ல முடியாமல் சேந்தனார் தவித்தார். அதனால் வீட்டில் சமைப்பதற்கு எந்த பொருளும் இல்லை. காட்டிற்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு அதை விற்று வந்தால்தான் அன்றைக்கு உணவு. 

இச்சமயத்தில் சிவனடியார் யாராவது வந்தால் என்ன செய்வது? அவர்களை எப்படி உபசரிப்பது? என்று சேந்தனாரும், அவரது மனைவியும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அவர்கள் வீட்டின் வாசல் முன், திருச்சிற்றம்பலம்! சம்போ மகா தேவா... என்ற குரல் கேட்டது. வெளியில் சிவனடியாரை பார்த்ததும் அவரை மகிழ்வுடன் வீட்டிற்குள் அழைத்து, அவருக்கு ஆசனம் அளித்து பணிவிடை செய்தார்கள். 

சிவனடியாரின் பசியைப் போக்க வீட்டில் சமைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால், சேந்தனாரின் மனைவி, வீட்டில் இருந்த சிறிதளவு அரிசிமாவில் வெல்லப்பாகு தயாரித்து கலந்து களி கிளறினாள். சிவனடியாரும் அவர்கள் கொடுத்த களியை உண்டு, மகிழ்வுடன் அவர்களை வாழ்த்தி, விடைபெற்றுச் சென்றார்.

மறுநாள் காலை சேந்தனாரும், அவரது மனைவியும் ஸ்ரீநடராஜப் பெருமானைத் தரிசிக்க சிவாலயம் சென்றார்கள். அங்கு கோவிலைத் திறந்த தில்லை வாழ் அந்தணர்கள், இறைவன் சன்னதியில் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு வியந்தார்கள். 

சேந்தனாரும், அவரது மனைவியும் இறைவன் முன் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். சேந்தனாரும், தமது வீட்டிற்கு சிவனடியார் வந்ததையும், அவருக்குக் களி கொடுத்து உபசரித்ததையும் அந்தணர்களிடம் கூற, இது நடராஜப் பெருமானின் திருவிளையாடல் என்பதை அறிந்து, சேந்தனாரையும் அவரது மனைவியையும் போற்றி மகிழ்ந்தார்கள். 

அன்றிலிருந்து மார்கழி திருவாதிரைத் திருநாளில் களி செய்து ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது என்று புராணம் கூறுகிறது. 

எனவே திருவாதிரை விரதம் மேற்கொண்டு திருவாதிரைக் களியை உண்பவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்பது நம்பிக்கை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top