ஆடி மாத சிறப்புகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி மாத சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

1. கடக சூரியன் :

ஆடி மாதம் முழுவதும் சூரிய பகவான் சந்திர பகவான் ராசியான கடக ராசியில் சஞ்சரிப்பார்.
இது கடக மாதம் என்றும் பெயர் பெறும்.

2. தக்ஷிணாயன புண்ணிய காலம் :

ஆடி மாதம் முதல் தக்ஷிணாயன புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரையிலுமுள்ள ஆறு மாதங்களும் தக்ஷிணாயன புண்ணிய காலம் ஆகும்.

3. அம்மன் வழிபாடு :

இறைவழிபாட்டில் சிறப்புடையது ஆடி மாதம். அம்மனுக்குரிய மாதமாக இந்த மாதம் போற்றப்படுகிறது. ஆடி மாதம் என்றாலே அது அம்மன் மாதம் தான். எல்லா அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு வேண்டி கூழ் ஊற்றுதல், மற்றும் அம்மன் திருவிழா கொண்டாட்டம் நடைபெறும்.

4. புற்றுக்கு பால் தெளித்தல் :

ஆடி வெள்ளிக் கிழமைகளில் 
பல குடும்பங்களில் சுமங்கலிப் பெண்கள், கன்னிப்பெண்கள் கோவில்களில் அமைந்துள்ள பாம்பு புற்றுக்கு பால் தெளிக்கும் (பால் ஊற்றுதல்)
வழக்கம் கொண்டிருப்பார்கள் அவரவர்கள் குல வழக்கப்படி.

5. தேங்காயை சுடுதல் :

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கரூர் பகுதியில் தேங்காய்களை மேற்புறம் துளையிட்டு அதில் பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் நெய் போன்றவற்றை ஊற்றி நீண்டகுச்சியில் செருகி நெருப்பில் சுடுகின்றனர். பின்னர் சாமி கும்பிட்டு அதை ஸ்வாமிக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுவது வழக்கம். 

6. ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு :

ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பார்கள். ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. 

கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.

ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர்.
ஆடி ஞாயிறன்று அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வணங்குவார்கள்.
 
7. ஆடிப்பெருக்கு /ஆடி பதினெட்டு :

ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். 

காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடி பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி பதினெட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது.

8. ஆடிக்கிருத்திகை :

கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மிக மிக சிறப்பு வாய்ந்தது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். 

ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

9. ஆடி அமாவாசை :

ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாக வழிபட வேண்டும். அன்று, இறைவனடி சேர்ந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். 

இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும். மேலும், தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

10. திருவாடிப்பூரம் :

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது.

ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.

11. ஆடி பௌர்ணமி, ஆடி தபசு :

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடித்தபசு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள். அதற்கு ஈசன் பொதிகை மலையில் புன்னைவனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி காணக்கிடைக்கும் என்றார். 

அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் செய்தாள். இறைவன் ஆடி பெளர்ணமி அன்று பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றி சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார். அம்பிகை கோமதி அம்மனாக வடிவம் கொண்டு அந்தக் காட்சியைக் கண்டு தரிசனம் செய்தார். இன்றைக்கும் பாரம்பரியமாக இந்த விழா சங்கரன் கோவிலில் கொண்டாடப்படுகிறது.

12. ஆடி மாத வளர்பிறையில் நாகபஞ்சமி, கருட பஞ்சமி வழிபாடு நடத்தப்படுகிறது.

13. ஆடி வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி பூஜை விரதம் கடைபிடிக்கப்படும். வீட்டில் உள்ள சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னி பெண்கள் கலந்து கொண்டு இப்பூஜையினை மந்திரங்கள் தெரிந்த ஒரு கோவில் வாத்தியாரை அழைத்து முறைப்படி செய்ய வேண்டும் அவரவர்கள் குடும்பகுல வழக்கப்படி.

14. ஆடி மாத ஸ்வாதி நட்சத்திரத்தில் பெரிய திருவடி ஸ்ரீ கருடாழ்வார் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இவரை கோவிலில் சென்று வழிபட பில்லி, செய்வினை, நாகதோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் நீங்கப்பெறுகிறது.

கல்கருட நாச்சியார் கோவில் , கும்பகோணம் திருமண தடை நீக்கும் தலமாக விளங்குகிறது.

15. ஆடி இறுதி / ஆடி 31 :

ஆடி மாதம் கடைசி நாளில் நம் முன்னோர்களுக்குப் பிடித்தமானவற்றை வைத்து வணங்கி, நம் கோரிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டும். ஆடி மாதம் கடைசி நாளில் மாலை வேளையில் இந்த பூஜையை செய்ய வேண்டும். முன்னோர்கள் நம் படையலை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது நம்பிக்கை.

ஆடி கடைசி நாள், 31 ம் நாள் தான் , ஆடி அறுதி. அன்று தான் விவசாயிகள் நாற்று நடுவார்கள். ஆடி பிறக்கும் போது விதை விதைப்பதும் , ஆடி முடிவில் நாற்று நடுவதும் வழக்கம்.

16. ஆடி மாதத்தை பற்றி பல பழமொழிகள் உண்டு : 

அவற்றில் சில: 

 1. ஆடிப் பட்டம் தேடி விதை

2. ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.

3. ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை

4. ஆடிக் கூழ் அமிர்தமாகும்

5. ஆடிச்செவ்வாய் தேடிக் குளி , அரைத்த மஞ்சள் பூசி குளி.

17. ஸ்லோகம் மற்றும் பக்தி பாடல்கள் பாராயணம் :

பெண்கள், ஆடிச் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்பிகை, துர்க்கை, ஆண்டாள் நாச்சியார் தெய்வங்களுக்குரிய ஸ்லோகங்கள், துதிப் பாடல்கள், திருப்பாவை முதலானவை பாராயணம் செய்வது நல்லது. ஆடி மாதம் முழுவதுமே பாராயணம் பண்ணுவது நல்லது. தினமும் கோவில்களுக்கு சென்று வருவது சாலச்சிறந்தது.

ஆண்டாள் தாயாரை, முறையாக திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாராயணம் பண்ணி பிரார்த்திப்பதின் பயனாக கன்னிப் பெண்கள் திருமணம் விரைவில் கைகூடும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top