ஜென்மாந்திர பாபங்களை நீக்கும் அஜா ஏகாதசி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஜென்மாந்திர பாபங்களை நீக்கும் அஜா ஏகாதசி பற்றிய பதிவுகள் :

இன்று செப்டம்பர் 21-09-2022, சுபகிருது வருடம், புரட்டாசி 04, புதன்கிழமை, ஏகாதசி திதி இரவு 11.35 வரை 

அஜா ஏகாதசி விரதம், அரிச்சந்திரன், கௌதம முனிவரின் வழிகாட்டுதலின் படி, அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி, மீண்டும் நாடு, நகரத்தைப் பெற்று சிறந்த ஆட்சி செய்தான். உயிரிழந்த மகனை மீண்டும் அடைந்ததோடு, மனைவியுடன் ஒன்று சேர்ந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்தான்.

வழிபாடு

பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

ஏகாதசி விரதம் என்பது பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது என்றும் பகவான் விஷ்ணுவின் பரிபூரண அருளைப் பெற்றுத்தருவது என்றும் அறிவோம். அவற்றோடு ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவமான பலன்களையும் நமக்கு அருள வல்லது. 

நம் முன்வினைகளைப் போக்கி நல்வினைகளைத் தரக் கூடியது. இப்பிறப்பில் நாம் படும் துன்பங்களின் காரணம் முன்வினைகளே. அவற்றை நீக்கி, இப்பிறப்பில் நாம் நலமுடன் வாழ அருள்வது ஏகாதசி விரதம். அத்தகையதொரு ஏகாதசி விரதம் அஜா அல்லது அன்னதா ஏகாதசி. அஜா ஏகாதசி நம் தீவினைகளை நீக்கியருள்வது. அஜாஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். 

பொதுவாக விரதமுறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத முறையையும் ஆச்ரயித்த பலன்களைப் பெறுவார்கள்.

அஜா ஏகாதசி விரதத்தின் பெருமைகளைத் தமக்கு விளக்கி அருளுமாறு யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணனிடம் கேட்கிறார். கிருஷ்ணரும் அஜா ஏகாதசி விரதத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.

“தர்ம புத்திரரே, அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர் களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத முறையையும் ஆச்ரயித்த பலன்களைப் பெறுவார்கள். மேலும் ரகுவம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து தன் துன்பம் நீங்கப் பெற்றான்” என்று ஹரிச்சந்திரனின் கதையினை எடுத்துக்கூறினார்.

உலகம் போற்றும் சத்தியசந்தனாக விளங்கிய ஹரிச்சந்திர மகாராஜா தன் முன்வினைப்பயன்களால் தன் நாட்டை இழந்தான். மேலும் தன் மனைவி, மகனையும் பிரியும் நிலை வந்தது. ஆனாலும் தன் இயல்பில் மாறாது சுடுகாட்டைக் காக்கும் வேலையைச் செய்து சத்தியத்தையே கடைப்பிடித்து வந்தான். ஒருநாள் ரிஷி கௌதமரை சந்தித்தான். ரிஷியின் பாதங்களைப் பணிந்த ஹரிச்சந்திரன் தன் வாழ்க்கை யில் நடந்த துயரங்களை எடுத்துக்கூறினான். அவற்றைக் கேட்ட முனிவர் மிகவும் மனம் வருந்தி, “நல்லவர்களும் துன்பப்படுகிறார்கள் என்றால் அதன்காரணம் அவர்களின் முன்வினைப்பயன்தான். அதை அழிக்கும் சக்தியுடைய விரதம் அஜா ஏகாதசி விரதம். அடுத்து வரும் ஏகாதசி அஜா ஏகாதசிதான். 

அந்த நாளில் நீ முழு உபவாசம் இருந்து, ஹரியை நாள் முழுவதும் மனதாலும் வாக்காலும் துதிப்பாயாக. அப்படிச் செய்வதன் மூலம் ஹரி மகிழ்ந்து உன் வினைப் பயன்களை நீக்குவார். மேலும் நீ விரைவில் நன்னிலை அடைவாய். நீ அடையும் நன்னிலையே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும்” என்று உபதேசித்தார்.

ஹரிச்சந்திரனும் அதன்படி விரதமிருந்து உபவாசம் அனுஷ்டிக்க விரைவில் அவன் வினைப்பயன்கள் நீங்கின. அவனோடு வாதம் செய்தவர் தோற்றார். அவன் துன்பங்கள் யாவும் நீங்கின. தன் பிள்ளையோடும் மனைவியோடும் இணைந்தான். அவன் ராஜ்ஜியம் மீண்டது என்று பகவான் கிருஷ்ணர் அவற்றை எடுத்துரைத்தார். மேலும் அஜா ஏகாதசியின் சிறப்புகளை மற்றவர்களுக் கு எடுத்துக் கூறினாலும் அதைக் கேட்டாலும் சகல நன்மைகளும் உண்டாகும். 

கலியுகத்தில் சில யாகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட யாகங்களில் ஒன்று அஸ்வமேத யாகம். அந்த யாகம் செய்வதால் உண்டாகும் புண்ணிய பலனை நாம் அஜா ஏகாதசி விரத்தைக் கடைப்பிடித்து, அதன் பலனை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் பெறலாம் என்கிறது ஏகாதசி புராணம்.

இத்தகைய சிறப்புகளையுடைய அஜா ஏகாதசி செப்டம்பர் 21-09-2022, சுபகிருது வருடம், புரட்டாசி 04, புதன்கிழமை, ஏகாதசி திதி இரவு 11.35 வரை. எனவே தவறாமல் இந்த நாளில் உபவாசம் இருந்து ஹரியை வழிபட வேண்டும். புதன்கிழமைகள் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. புதன்கிழமையும் ஏகாதசியும் இணைந்துவருவது மிகவும் சிறப்புக்குரியது. எனவே இந்த நாளைத் தவறவிடாமல் பகவான் விஷ்ணுவை வழிபட்டு சகல நலன்களையும் பெறுவோம்.

விரதமுறை

வீடு முழுவதும் சுத்தம் செய்து, பூஜை அறையில் பெருமாளுக்கு அலங்காரங்கள் செய்து, தூப, தீப ஆராதனைகள் காட்ட வேண்டும்.

இன்று முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள், பாலும், பழமும் அருந்தலாம்.

விரதமிருந்து, பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபாடுகள் செய்து, தரிசனம் செய்து வர, வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கும்.

ஏகாதசி அன்று விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பது மோட்சத்தை கொடுக்கவல்லது.

ஏகாதசி அன்று இதனைப் படிப்பவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது. படிக்கத் தெரியாதவர்கள் இதனை ஒலி வடிவமாக வீட்டில் கேட்கலாம்.

பெருமாளுக்கு பிடித்த நைவேத்தியங்கள் படைத்து, பூஜைகள் செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

பலன்கள்

அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும். ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால், இந்தப் பிறவியில் நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார். மறுமையில் வைகுண்ட வாசத்தையும் இறைவன் அருள்வார் என்பதே ஐதீகம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top