புரட்டாசி சுக்ரவார வளர்பிறை பிரதோஷம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து புரட்டாசி சுக்ரவார வளர்பிறை பிரதோஷம் பற்றிய பதிவுகள் :

பொதுவாக பிரதோஷ காலம் சிவ வழிபாட்டுக்குரியது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் திரயோதசி திதி வரும் மாலையே பிரதோஷ தினமாக கருதப்படுகிறது. 

வளர்பிறை பிரதோஷத்தின்போது தேவர்களும், தேய்பிறை பிரதோஷத்தின்போது மனிதர்களும் கட்டாயம் சிவனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷ காலமும் மிக மிக முக்கியமானது. இந்த மாதத்தில் மஹாவிஷ்ணு வழிபாடு எப்படி முக்கியமோ அதேபோல் சிவ வழிபாடும் அதிகளவு நன்மையை கொடுக்கக்கூடியது. 

அதன்படி புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷம் அக்டோபர் 07ஆம் தேதி இன்று வெள்ளிக்கிழமை வருகிறது.

சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த வெள்ளிக்கிழமை பிரதோஷ நன்னாளில் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டால் சுக்கிர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

மேலும் சிவனாரையும், நந்திதேவரையும் வணங்கி அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. இந்த நாளில் வரும் பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால் கடன், தரித்திரம் முதலான பொருளாதார சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் நீங்கி, சுக்கிர யோகம் கிடைக்கப் பெற்று, செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

சிவனுக்கு சங்குப்பூ, வில்வ இலை கொண்டு பூஜை செய்வது விசேஷம் ஆகும். பிரதோஷ தினத்தன்று மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோவிலுக்கு சென்று, பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோமசூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேசுவரரையும் வணங்க வேண்டும்.

பிரதோஷ வேளையில் தேவர்கள் சிவன் சன்னதியில் இருப்பார்கள். எனவே, இந்த நாளில் பிரதோஷ வேளையில் சிவ தரிசனம் செய்ய வேண்டியது அவசியம். 

நிவேதனம் :

புரட்டாசி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தன்று சிவனுக்கு புளியோதரையும், சர்க்கரை பொங்கலும் நிவேதன பொருளாக படைத்து வழிபட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட அத்தனை நோய்களும் நீங்கப்பெற்று ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம்.

பலன்கள்

பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், வறுமை விலகும், தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனைகள் தீரும், பகைகள் விலகும், நோய்கள் நீங்கும் மற்றும் போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.

பிரதோஷ நாட்களில் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வழங்கலாம். வில்வ இலைகளை கொண்டு சிவனை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.

பிரதோஷ நாட்களில் அன்னதானமாக தயிர்சாதம் வழங்குவது இன்னும் பலம் சேர்க்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top