மஹா சிவராத்திரியன்று நான்கு கால பூஜை முறைகளும் வழிபட வேண்டிய மூர்த்திகளின் மகிமையும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹா சிவராத்திரியன்று நான்கு கால பூஜை முறைகளும் வழிபட வேண்டிய மூர்த்திகளின் மகிமையும் பற்றிய பதிவுகள் :

சூரிய பகவான் கும்பராசியில் சஞ்சரிக்கும் மாசி மாதம் புண்ணியமான மாதமாகவும் சுபநிகழ்ச்சிகள் செய்ய உகந்த மாதமாகவும் சொல்லப்படுகிறது. 'மாசிக்கயிறு பாசிபடியும்' என்பது பழமொழி. இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவது சிறப்பு. காரணம் அமிர்தமான கங்கை இந்த மாதத்தில் ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நிறைந்திருப்பதாகக் கூறுவார்கள். மாசி மாத சிறப்புகளின் மகுடம் மஹாசிவராத்திரி. 

சிவராத்திரி என்பது தேய்பிறை சதுர்தசி திதி நாளையே குறிக்கும். என்றாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மஹா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. சாந்திராயனம் எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியின் படி இந்த மாதத்தை `மஹா' மாதம் என்று கூறுவர். எனவே இந்த மாதம் வரும் சிவராத்திரி இயல்பிலேயே மஹாசிவராத்திரி என்று கூறப்படுகிறது.

பார்வதி தேவி சிவபெருமானைக் குறித்து பூஜை செய்த நாள் மஹாசிவராத்திரி. அந்த பூஜையினால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் மஹாநிசி காலத்தில் ஆவிர்பவித்து அருளியதை நமது ஆகமங்களும் புராணங்களும் சொல்கின்றன. மாசி மாதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் மாசி மாதம் வரும் சிவராத்திரி, மஹா சிவராத்திரி எனவும் போற்றப்படுகிறது.

'ராத்திரி' என்பதற்கு 'இரவு' என்று பொதுவான அர்த்தம் கூறினாலும் 'ராத்ரம்' என்பதற்கு 'அறிவு' என்னும் பொருளும் உண்டு என்பர். சிவராத்திரியானது இந்த உலகின் தலைவனான எம்பெருமான் சிவபெருமானை நமக்கு உணர்த்தி அனுபவிக்கச் செய்வதினால் அனைத்து வழிபாடுகளிலும் சிவராத்திரி அன்று செய்யப்படும் சிவ வழிபாடு மிகுந்த பலன்களை அளிக்க வல்லது என்கின்றன சாஸ்திரங்கள்.

மற்ற மாதங்களில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்களும் மாசி மாதத்தின் மஹா சிவராத்திரி விரதமிருந்து வழிபாடு செய்தால் ஓர் ஆண்டின் அனைத்து சிவராத்திரிகளிலும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். எனவே தவறாமல் மஹாசிவராத்திரி நாளில் நாம் வழிபாடுகள் செய்து பலன்பெறலாம்.

மஹாசிவராத்திரி நன்னாளில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இரவு முழுவதும் விழித்திருந்து நான்கு கால பூஜைகள் செய்து சிவபெருமானை வழிபட வேண்டும். 

முதல் கால பூஜை

சிவபெருமானை ஶ்ரீசோமாஸ்கந்தராக வழிபட வேண்டும். 'ஸ + உமா + ஸ்கந்தர்' என்பதே இணைந்து சோமாஸ்கந்தராக மாறியது. அதாவது உமை மற்றும் கந்தனுடன் விளங்கும் சிவபிரான் என்பது இதன் பொருள். இறைவன், இல்லறத்தானாக - இனிய கணவனாக - பாசமுள்ள தந்தையாக தனயனுடன் காட்சியளிக்கும் இந்தக் கருணை வடிவம், தரிசித்து மகிழ வேண்டியது ஒன்று. சச்சிதானந்தம் என்பதை சத்து - இறைவன்; சித்து - இறைவி; ஆனந்தம் - முருகன் எனலாம். இந்த மூன்று இயல்புகளின் அழகிய வடிவே சோமாஸ்கந்தம் என்று தத்துவ நூல்கள் விளக்குகின்றன. இல்லறம் நல்லறமாக விளங்க விரும்புகிறவர்கள், மழலை வரம் எதிர்பார்த்துக்காத்திருப்பவர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய காலம் முதற்காலம்.

இரண்டாம் கால பூஜை

மஹா சிவராத்திரி இரண்டாம் கால பூஜை
தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த வடிவம் சோமாஸ்கந்த மூர்த்தி. நமது நாட்டில் வேறெங்கும் இந்த வடிவம் காணப்படுவதில்லை. சிவன் - சக்தி - முருகன் ஆகிய வழிபாட்டை ஒருங்கிணைத்து பல்லவர் காலத்தில் பிரபலமான வடிவம் இது.

கல்விச் செல்வம் அருளும் இரண்டாம் கால பூஜையில் நாம் ஈசனை ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக வழிபடுவது சிறந்தது. கல்வி, யோகக்கலை, இசை மற்றும் கலைகளைக் கற்பிக்கும் ஞானாசாரியத் திருக்கோலமே ஸ்ரீதட்சிணாமூர்த்தித் திருவடிவம். ‘தட்சிணம்’ என்பதற்கு தெற்கு, ஞானம், சாமர்த்தியம், ஆற்றல், ஆளுமை, யோகம் மற்றும் வீரம் என்று பல பொருள்கள் உண்டு. இவை யாவற்றையும் உடையவர் ஆதலால் ஸ்ரீதட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். இவர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர்.

சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் மௌனமாக உபதேசிக்கும் ஞான வடிவம் இது. இந்தத் திருவுருவை மஹாசிவராத்திரி நாளில் வழிபாடு செய்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

மூன்றாம் கால பூஜை 

‘லிங்கம்’ என்றால் உருவம். ‘உற்பவம்’ என்றால் வெளிப்படுதல் என்று பொருள். லிங்கோற்பவம் என்ற சொல்லுக்கு, ‘உருவமற்ற இறைவன் வடிவம் கொள்ளுதல்’ என்று பொருள். லிங்க பாணத்தின் நடுவில், சந்திரசேகர் திருமேனிபோல் அமைந்திருப்பதே லிங்கோத்பவ வடிவம். இரண்டு, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடன் சிவபெருமான் திகழ, பிரம்மாவும் திருமாலும் இருபுறமும் வணங்கிய நிலையில் இருப்பர். 

சிவாலயங்களில் கருவறைக்குப் பின்புறச் சுவரில், லிங்கோத்பவ மூர்த்தியை அமைக்கும் வழக்கம், முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே இருந்துள்ளது. இறைவனின் இத்திருக்கோலத்தை மூன்றாம் கால பூஜையின் போது நினைத்து வழிபட சகல செல்வங்களும் கிடைப்பதோடு இறைவனின் பரிபூரண ஆசியும் கிட்டும். ஞானமும் மோட்சமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

நான்காம் கால பூஜை

சிவபெருமானின் திருக்கோலங்களுள் உன்னத வடிவாகத் திகழ்வது ரிஷபாரூட மூர்த்தி. திருக்கோயில் திருவிழாக்களில் பெருமானின் ரிஷப வாகனக் காட்சி காண அடியார்கள் காத்து நிற்பர். சிவபெருமான், தன் அடியார்களுக்கு ரிஷப வாகனராகத் திருக்கோலம் காட்டி ஆட்கொண்டு அருளியதை பெரிய புராணத்தில் பல அடியார்களின் வரலாற்றின் மூலம் அறிய முடியும். ‘உலகமும் அதன் உயிர்களும் ஒடுங்கி அழியும் ஊழிக் காலத்தில் தாமும் அழிய நேரிடுமே!’ என்று அஞ்சிய தரும தேவதை, என்ன செய்வதென்று ஆராய்ந்து ரிஷப வடிவம் கொண்டு சிவபெருமானைத் தஞ்சமடைய சிவபெருமான் அதன் மீது ஏறிக் கொண்டு, அருள்புரிந்த நிலையே ரிஷப வாகனராகக் காட்சி கொடுத்தார். இந்தத் திருக்கோலத்தில் இறைவனை வழிபட்டுப் பூஜை செய்ய வேண்டியது நான்காம் காலம். நான்காம் கால பூஜையில் கலந்துகொண்டு வழிபாடுகள் செய்தால் அவர்களுக்கு வேண்டும் சௌபாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top