புகழ்பெற்ற மஹாசிவராத்திரி சிவாலய ஓட்டம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து புகழ்பெற்ற மஹாசிவராத்திரி சிவாலய ஓட்டம் பற்றிய பதிவுகள் :

குமரியில் சிவாலய ஓட்டம் 18-ம் நூற்றாண்டில் இருந்தே நடைபெற்று வருவதாக ஓலைச்சுவடியில் கூறப்பட்டுள்ளன. முன்சிறை திருமலை மஹாதேவர் கோவிலில் இருந்து தொடங்கும் இந்த சிவாலய ஓட்டம் திக்குறிச்சி மஹாதேவர் கோவில், திற்பரப்பு மஹாதேவர் கோவில், திருநந்திக்கரை திருநந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மஹாதேவர் கோவில், திருப்பன்னிபாகம் கிராதமூர்த்தி கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு காலகாலர் கோவில், திருவிடைக்கோடு சடையப்ப மஹாதேவர் கோவில், திருவிதாங்கோடு மஹாதேவர் கோவில், திருப்பன்றிக்கோடு மஹாதேவர் கோவில் ஆகியவை வழியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் நிறைவு பெறும். முதல் கோவிலில் இருந்து கடைசி கோவில் வரை உள்ள தூரம் 102 கி.மீ ஆகும். 

முன்சிறை திருமலை மஹாதேவர் கோவில்:- 

மார்த்தாண்டத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது மதுரை திருமலை நாயக்கரின் தாய் உதிச்சி என்பவர் கட்டிய கோவில் எனவாய்மெழி கதையாக கூறப்படுகிறது. முன்சிறை கிராமத்துடன் ராமாயணத்தை இணைக்கும் வாய்மொழிச் செய்திகளும் உள்ளது. அதாவது ராவணன், சீதையை சிறைவைத்த முதல் இடம் (முன்சிறை) என்று சொல்லப்படுகிறது. 

இந்த கோவிலின் மூலவரை சூலபாணி என்று கூறுவார்கள். பிரணவத்தின் பொருள் தெரியாததால் படைப்புக் கடவுளான பிரம்மனை, முருகன் சிறைபிடித்து வைத்த இடமே முன்சிறை ஆயிற்று. அப்போது பிரம்மனின் முன்தோன்றிய வடிவமே சூலபாணி என்ற ஒரு கதையும் உண்டு. 

திக்குறிச்சி மஹாதேவர் கோவில்:- 

நம்பூதிரி ஒருவரின் கனவில் சிவன் தோன்றி ஆற்றின் கரையில் கோவில் அமைக்க கட்டளை இட்டதாகவும், அவர் தன் சொத்துக்களை விற்று கோவில் கட்டியதாகவும் தலபுராணம் கூறுகிறது. இந்த கோவிலில் நந்தி இல்லை. 

திக்குறிச்சி ஊருக்கு ஒருமுறை வந்த காளை ஒன்று ஊர் மக்களுக்கு மிகுந்த தொல்லை கொடுத்தது. ஊர் மக்கள் கல்லால் எறிந்து அதை விரட்டிப் பார்த்தனர். ஆனால் அது மிரண்டு விரட்டியவர்களை எதிர்த்தது. 

இதையறிந்த தரணநல்லூர் நம்பூதிரி அந்த காளையை தாமிரபரணி ஆற்றின் கரையில் மூழ்கச் செய்தார். அப்போது கோவிலில் இருந்த நந்தியும் மாயமாகி விட்டது என்றும், அதன்பிறகு இந்த கோவிலில் நந்தி வைக்க வேண்டாம் என ஊர் மக்கள் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. 

திற்பரப்பு மஹாதேவர் கோவில்:- 

பன்னிரு சிவாலயங்களில் 3-வது கோவில் குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பில் அமைந்துள்ளது. கோவிலின் மூலவரான சிவன், வீரபத்திரர், ஜடாதரர் என அழைக்கப்படுகிறார். வீரபத்திரரும் காளியும் சேர்ந்து தட்சனை வதம் செய்தபிறகு தியானம் செய்வதற்கு திற்பரப்பு ஊரில் அமர்ந்தனர். 

கன்னிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தலத்தில் வழிபடுவது வழக்கம். திற்பரப்பு அருவி பாயும் பகுதியில் ஒரு குகை உள்ளது. இங்கு காளி புடைப்பு சிற்பமாக இருக்கிறாள். 

திருநந்திக்கரை திருநந்தீஸ்வரர் கோவில்:- 

இந்த கோவில் வெயில் அறியாத ஊரில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. நந்தி ஓடையில் (முன்பு நந்தியாறு) கரையில் சோலையாக அடர்ந்து வளர்ந்த மரங்களின் நடுவே உள்ளது. இந்த ஊர்த் தலைவர் உளுத்துப் பாறை அடிவார ஏரியின் நடுவில் குடைவரைக் கோவில் சிவலிங்கம் மிதப்பதுபோல் கனவு கண்டார். 

அடுத்தநாள் ஏரியின் நடுவில் சுயம்புவாக ஒரு சிவலிங்கம் முளைத்திருப்பதையும், ஊர்மக்கள் கண்டனர். பின்னர் மன்னர் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்படடது. நந்தி கருவறைக்கு எதிரே சிறு குழியில் உள்ளது. இது தொடர்பாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இந்த கோவில் உருவான காலத்தில் எல்லா லட்சணமும் பொருந்திய ரிஷபம் ஒன்று இந்த ஊருக்கு வந்தது. 

அது ஊர் மக்களைப் பயமுறுத்தியது. மக்கள் இறைவனிடம் முறையிட்டனர். சிவன் அந்த நந்தியை தன் எதிரே சிறிய குழியில் அமர்த்திக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. கோவில் கருவறையில் உள்ள 27 கட்டங்கள் நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. 

பொன்மனை தீம்பிலான்குடி மஹாதேவர் கோவில்:- 

இந்த பகுதி காடாக இருந்தபோது காணிக்காரர் சமூகத்தைச் சேர்ந்த தீம்பிலான் என்பவர் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது சுயம்புவாக முளைத்திருந்த சிவலிங்கத்தைக் கண்டார். இது ஊர் மக்களுக்குத் தெரிந்து அங்கே ஒரு கோவில் கட்டினர். அதனால்தான் தீம்பிலான்குடி என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. 

திருப்பன்னிப்பாகம் கிராதமூர்த்தி கோவில் :- 

இந்த கோவில் தலப்புராணம் மஹாபாரதத்துடன் தொடர்புடையதாகும். பாசுபதாஸ்திரம் வேண்டி சிவனை நோக்கிதவம் செய்த அர்ஜுனன் கிராதனாக (வேடன்) இருந்த சிவனுடன் மோதி தோற்ற நிகழ்வுடன் தொடர்புடையதாகும். குமரி மாவட்ட கோவில்களில் பூஜையின்போது புல்லாங்குழல் இசைக்கும் ஒரே கோவில் இதுதான். 

பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில் :- 

இந்த கோவிலில் உள்ள சிவன் ஆதிசிவன் எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் உயரம் 160 செ.மீ. ஆகும். இந்த சிவன் சுயம்புவாக வளர்ந்தவர் என்பது ஐதீகம். வேணாட்டரசர்கள் இங்கே இருந்தபோது தறிகெட்டு ஓடிய குதிரை ஒன்று இந்த கோவில் இருக்கும் இடத்துக்கு வந்து அடைபட்டு நின்றதாம். அரசன் குதிரை நின்ற இடத்தில் சுயம்புவான லிங்கத்தைக் கண்டான். அந்த இடத்தில் இந்த கோவிலைக் கட்டினான் என்று தலப்புராணம் கூறுகிறது. 

இந்த கோவிலில் உள்ள நந்தி மண்டபத்தை மதுரைைய ஆண்ட திருமலை நாயக்கர் கட்டினார் என்பது மரபுவழிச் செய்தியாகும். இங்குள்ள அம்மன் கோவில் வாசலின் எதிரே உள்ள தூண்களில் திருமலை நாயக்கரும், அவரது தம்பியின் சிற்பமும் உள்ளது. 

மேலாங்கோடு காலகாலர் கோவில் :

இந்த கோவிலின் சிவன், மார்க்கண்டேயன் கதையுடன் இணைத்து பேசப்படுகிறது. மிருகண்ட முனிவருக்கு குழந்தை இல்லை. சிவனைநோக்கி தவம் இருந்தார். சிவன் 16 வயது மட்டுமே வாழும் அறிவுள்ள, புத்தியுள்ள ஒரு ஆண் குழந்தை வேண்டுமா? அல்லது அறிவில்லாத பல குழந்தைகள் வேண்டுமா? என கேட்டார். மிருகண்டர் ஒரு குழந்தை போதுமென்றார். குழந்தை பிறந்தது. 

மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனது. எமன் அவனை நெருங்கியபோது சிவன் கோவிலுக்குள் நுழைந்து லிங்கத்தை பிடித்தான். சிவன் சூலத்தால் எமனைக் குத்தினான். மார்க்கண்டேயன் பிழைத்தான். எமன் சிறு பாசக்கயிற்றை வீசினான். லிங்கம் சரிந்தது. இதனால் இந்த சிவன் காலனின் காலன் என அழைக்கப்படுகிறார். 

திருவிடைக்கோடு சடையப்ப மஹாதேவர் கோவில் :- 

ஒருமுறை இரண்டு சிறுவர்கள் அந்த காட்டு வழியாக நடந்து வந்தனர். அவர்கள் வில்வமரத்தின் அடியில் சுயம்புவாக நின்ற ஒரு சிவலிங்கத்தைக் கண்டனர். இந்த அதிசயத்தை ஊர்மக்களிடம் தெரிவித்தனர். மக்கள் லிங்கத்தைப் பார்த்தனர். லிங்கத்தின் உச்சியில் சடை தெரிந்தது. அதனால் சடையப்பர் என அழைக்கப்பட்டார். கி.பி. 16-ம் நூற்றாண்டிலேயே இந்த கோவில் சடையப்பர் கோவில் என அழைக்கப்பட்டிருக்கிறது. 

திருவிதாங்கோடு மஹாதேவர் கோவில் :- 

இந்த கோவில் மூலவர் லிங்க வடிவம் கொண்டவர். கருவறை வாசலைவிட லிங்கம் பெரிதாக தோற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. இந்த கோவில் கி.பி.9-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று தெரிகிறது. இந்த கோவிலின் கல்வெட்டு ஒன்று மூலவரை ஈசான சிவன், ஆலமரப் பொந்தில் இருப்பவர் என்றும், நம்பூதிரிகள் மூலவரை பரிதிபாணி என்றும் கூறுகின்றனர். 

திருவிதாங்கோடு சிவன் கோவிலைப் பிற 11 சிவாலயங்களிலிருந்தும், குமரி மாவட்டத்தில் உள்ள பிற கோவில்களில் இருந்தும் பிரித்துக் காட்டும் அம்சம் இங்குள்ள சிற்பங்கள்தான். சிவன், விஷ்ணு கோவில்களில் ஒரே நாளில் திருவிழா தொடங்கி 10 நாட்களிலும் நடக்கிறது. 

திருப்பன்றிக்கோடு மஹாதேவர் கோவில் :- 

இந்த கோவில் தொடர்பான கதை மகாபாரதம் அர்ஜூனன் தபசுடன் தொடர்புடையது. அர்ஜுனனுக்கும், சிவனுக்கும் நடந்த சண்டையில் அர்ஜுனன் தோற்றான். அப்போது சிவனை அர்ஜுனன் அடையாளம் கண்டான். தசாவதார கதையில் ஒன்றான வராக அவதாரக் கதையுடனும் இந்த கோவில் புராணத்தை இணைத்துக் கூறுகிறார்கள். 

திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவில்:- 

இந்த கோவில் கருவறை மூலவரை அர்த்தநாரீஸ்வரர் என்று குறிப்பிடுகின்றனர். கி.பி. 16, 17-ம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கருதலாம். சிவாலய ஓட்டம் தொடர்பான மஹாதேவர் கோவிலின் முன்பு இருக்கும் குளத்தின் முன் சங்கரநாராயணர் கோவில் உள்ளது. 

இதன் கருவறையில் லிங்க வடிவ சங்கரநாராயணர் இருக்கிறார். இந்த கோவில் மண்டபத் தூண்களிலும், நமஸ்கார மண்டபத் தூண்களிலும் சிற்பங்கள் உள்ளன. இவை அரச குடும்பத்தினரின் சிற்பங்கள். இந்த சிற்பங்களின் அடிப்படையில் வேணாட்டு அரசர்களின் நன்கொடை இந்த கோவில் என கருதப்படுகிறது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top