காவடியின் வகைகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து காவடியின் வகைகள் பற்றிய பதிவுகள் :

முருகன் கோவிலுக்கு செல்லும்போது, காவடியை சுமந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து இறுதியில் கோவிலை அடையும்போது மனதில் உள்ள பாரங்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுகின்றனர்.
காவடியின் பெயரானது காவடித் தண்டின் இரு பக்கங்களிலும் கட்டப்படும் பொருட்களைக் கொண்டு அறியப்படுகிறது. 

எடுத்துக்காட்டாக கட்டப்படும் பொருள் பால் என்றால் பால்காவடி என்றும், பழங்கள் எனில் பழக்காவடி என்றும் அறியப்படும். இவ்வாறாக பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, இளநீர்க்காவடி, வேல்காவடி, சர்க்கரைக் காவடி, சர்ப்பக்காவடி, மச்சக்காவடி என காவடியில் பல வகைகள் உள்ளன. அதில் சிலவற்றை இங்கு காண்போம்.

இளநீர்க்காவடி

இக்காவடி மட்டும் பழமையான தோற்றம் கொண்டு விளங்குகின்றது. கம்பு அல்லது பனை மட்டையைக் காவடித் தண்டாகக் கொண்டு தண்டின் இரு புறங்களிலும் இளநீர்க் காய்களை கட்டிக்கொண்டு, மேள தாளங்களின்றி வேல் வேல் வேல் வேல் என்று கூறிக் கொண்டு எளிமையான முறையில் எடுத்து வரப்படுகிறது. இளநீர் காவடியில் எடுத்துவரப்படும் இளநீரானது இறைவனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

மச்சக்காவடி

மீனைக் காவடியில் கட்டிக்கொண்டு வருவது மச்சக் காவடி ஆகும். மீனை மூன்று இடங்களில் லேசாக வெட்டி, உப்பிட்டு மண் சட்டியில் மஞ்சள் தண்ணீரில் போட்டுக் காவடித் தண்டில் கட்டிக்கொண்டு வருவர். காவடியை எடுத்து முடித்த‌ பின் கோவில் குளத்தில் இடுப்பளவு ஆழத்தில் இறங்கி நின்று காவடித் தண்டில் கட்டப்பட்ட மண் சட்டியைத் தலைக்கு மேலாக தூக்கி ஆட்டும் போது சட்டியில் உள்ள மீன் நீரில் துள்ளி விழும்.

சர்ப்பக்காவடி

நல்ல பாம்பினைக் காவடியில் கட்டிக்கொண்டு வந்து காணிக்கை செலுத்துவது சர்ப்பக் காவடியாகும். சர்ப்பக்காவடி எடுப்பவர் கடும் விரதம் இருப்பார்கள். ஊருக்கு வெளியே காட்டினுள் தங்கி ஆறு நாட்கள் உணவருந்தாமல் விரதம் மேற்கொண்டு இறைவனை வேண்டி உருகி வழிபடுவார்கள்.

ஆறாம் நாள் அவர்கள் கனவில் இறைவன் தோன்றி ஓர் இடத்தைக் குறிப்பிட்டு அவ்விடத்திற்கு பாம்பைக் கொண்டு வருமாறு கூறுவார். விரதம் இருப்பவர் தாரை, தப்பட்டை ஒலி முழங்க அவ்விடம் சென்று பச்சை மண் கலத்துள் பாம்பினை அடைத்து (பாம்பு தானாகவே வெளியே வந்து மட்கலத்துள் புகும் என்பர்) காவடியில் கட்டிக் கொண்டு வருவர். பின் முருகன் கோவிலின் அருகே உள்ள மலைப்பாங்கான அல்லது காட்டுப் பகுதியில் மட்கலத்தை திறந்துவிடுவர். பாம்பு வெளியேறி விடும்.

அலகு குத்துதல் :

நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.

சர்க்கரை காவடி : 

சர்க்கரை, பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

பறவைக் காவடி : 

அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுவார்கள்.

பால் காவடி : 

பால்குடம் காவடியாக பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

மயில் காவடி :

மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top