வினைகளை அகற்றும் விநாயகர் சதுர்த்தி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வினைகளை அகற்றும் விநாயகர் சதுர்த்தி பற்றிய பதிவுகள் :

இந்த உலகத்தின் இயக்கத்திற்கு ஆதாரமாக விளங்குவது பிரணவ மந்திரமான 'ஓம்' என்பதாகும். இந்த மந்திரத்தின் வடிவமாக அருள்பவர்தான், மூல முதல் கடவுளாக கருதப்படும் விநாயகப் பெருமான். 'விநாயகர்' என்பதற்கு 'தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவர்' என்று பொருள். 

கணங்கள் அனைத்திற்கும் தலைவனாக விளங்குவதால் இவரை 'கணபதி' என்றும் அழைக்கிறார்கள். இவரை வணங்குபவர்களுக்கு தடைகள், இடையூறுகள் அனைத்தும் விலகிவிடும். அதனால்தான் எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன்பும், நாம் விநாயகரை முதலில் வணங்கி அந்தச் செயலை ஆரம்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.

சதுர்த்தி திதியில் விநாயகரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும். ஏனெனில் விநாயகர் அவதரித்தது ஒரு சதுர்த்தி திதியில்தான். தேய்பிறை, வளர்பிறை காலங்களில் சதுர்த்தி திதி வந்தாலும், ேதய்பிறையில் வரும் சதுர்த்தியை நாம் 'சங்கடஹர சதுர்த்தி' என்று போற்றுகிறோம். 

சங்கடங்களை தீர்க்கும் சதுர்த்தியாக ேதய்பிறை சதுர்த்தி பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி திதி வந்தாலும், ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று கொண்டாடுகிறோம். ஏனெனில் விநாயகர் அவதரித்தது, ஒரு ஆவணி மாத சதுர்த்தி திதியில்தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

விரதம் இருப்பது எப்படி? 

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து 'என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும். முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் 'நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவித தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன்' என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். 

பின் தங்கத்தாலோ அல்லது தாமிரத்தாலோ அல்லது, களிமண் விநாயகரையோ, விநாயகர் படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும். அப்போது, 'ஓம் ஸ்ரீ கணாதிபதயே, ஏகதந்தாய, லம்போதராய, ஹேரம்பாய, நாளி கேரப்ரியாய, மோதக பட்சணாய மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது அநுகூலம் மே வஸமாநய ஸ்வாஹா' என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம்.

விதிமுறைப்படி நெய், சாதம், பருப்பு, பாயசம், உளுந்து வடை, அப்பம், இட்லி, கொண்டைக்கடலை, கொழுக்கட்டை, தேங்காய், வாழைப்பழம், இலந்தைப் பழம், நாவல் பழம், கொய்யாப்பழம் உள்ளிட்ட பழங்களை விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்கலாம். 

தரித்திரம் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைப்பிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள்.

விநாயகர் மந்திரம் 

மூஷிக வாஹன மோதகஹஸ்த 
சாமரகர்ண விளம்பிதஸீத்ர 
வாமனரூப மஹேஸ்வரபுத்ர 
விக்ன விநாயக பாத நமஸ்தே. 

பொருள்:-

 விநாயகப் பெருமானே! எலியை வாகனமாக கொண்டவரே! கையில் கொழுக்கட்டையுடன் நீண்ட தும்பிக்கை மற்றும் அகன்ற காதுகளுடன் சிறிய உருவத்தில் காட்சியளிப்பவரே. சிவபெருமானின் மைந்தனே. எல்லா விக்கினங்களையும் நீக்கும் உமது திருப்பாதங்களை நான் வணங்குகின்றேன்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top