திருவாதிரை நோன்பும் விரதமும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருவாதிரை நோன்பும் விரதமும் பற்றிய பதிவுகள் :

இருபத்திஏழு நட்சத்திரங்களில் திரு என்ற அடைமொழிகொண்டு இறை தன்மையோடு விளங்கும் நட்சத்திரங்கள் இரண்டு. ஒன்று திருவாதிரை சிவனுக்கு உகந்த நட்சத்திரம் மற்றொன்று திருவோணம் விஷ்ணுவிற்கு உகந்த நட்சத்திரம். 

நம் குல பெண்கள் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவாதிரை நாச்சியாரை நினைத்து தங்கள் மாங்கல்ய பலத்திற்காக திருமாங்கல்ய நோன்பை மேற்கொள்கின்றனர் .இந்த நாளை ஆதிரை நாள் என்றும் ஆருத்ரா தரிசன நாள் என்றும் சொல்வதுண்டு.

இந்நாளில் திருவாதிரை நட்சத்திரத்தின் பலன்களும் திருவோண நட்சத்திரத்தின் பலன்களும் ஒன்று சேர்வது சிறப்பு.

திரு+ஆ+திரை திரு என்றால் திருமகள், ஆ என்றால் காமதேனு திரை என்றால் அலை அதாவது திருமகளின் செல்வமும்,காமதேனுவின் செல்வமும்,கடல் அலை போல் திரண்டுவரும் என்பது பொருள்.

திருவாதிரை நோன்பு வழிபடும் விதம் :

திருவாதிரை நட்சத்திரத்தின் முன் இரவு பிரம்ம முகூர்த்தத்தில் பத்தினி சாப்பாடு என்று சிறிதளவு உணவு மட்டும் உண்டு தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.

அன்றைய நாளில் பச்சரிசியும் வெல்லமும் ஏலக்காயும் கலந்த மாவில் மாங்கல்ய கச்சாயம் (அடை) என்ற இனிப்பை பயபக்தியோடு அவரவரின் குலதெய்வத்தை நினைத்து கொண்டு ஒற்றை படை எண்ணிக்கையில் தயார் செய்ய வேண்டும்.

அதன் பிறகு ஏழு வகை காய்கறிகளுடன் வடை, பாசிப்பருப்புடன் கலந்த பாயசம் கொண்டு தலைவாழை இலை படையல் செய்ய வேண்டும்.

கோலமிடும் முறை :

அவரவர் குலதெய்வ படத்திற்கு முன்பாக பச்சரிசி மாவில் மஞ்சள் கலந்து இரண்டு வீடு அமைப்பில் கோலமிடுதல் வேண்டும். 

அந்த கோலத்தின் மேல் ஒருபகுதியில் கண்ணாடி ,சீப்பும் மறுபகுதில் நிலாப்பிறை திருமாங்கல்யம் ஓம் வடிவங்கள் வரைந்து அதன்மீது மாங்கல்ய கச்சாயம் (அடை) மற்றும் ஏழுவகை காய்கறிகளுடன் வடை பாசிப்பருப்புடன் கலந்த பாயசம் கொண்டு தலைவாழை இலை போட்டு இறைவனுக்கு படைக்க வேண்டும்.

படையலுக்கு முன்பு மஞ்சள் பால் குலதெய்வ விபூதிகலந்த நிறைசெம்பு தண்ணிர் அதற்கு முன்பு வெற்றிலை, பாக்கு, இரண்டு குத்துவிளக்குகள், தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பூ, இவைகளை வைத்து சாம்பிராணியுடன் கற்பூர தீபாராதனை காட்டி 
மணி மற்றும் சங்கு நாதத்துடன்பூஜிக்க வேண்டும்.

நிலாப்பிறை பார்த்தல் :

வீட்டின் முன்பகுதியில் மூன்றுகால் முக்காலி கொண்டு அதன் மேல் மாங்கல்ய கச்சாயம் (அடை) வைத்து மஞ்சள்பால், விபூதி கலந்த நிறைசெம்பு தண்ணீர் அதற்கு முன்பு வெற்றிலை, பாக்கு, இரண்டு குத்துவிளக்குகள், தாலிக்கயிறு, மஞ்சள் குங்குமம் பூ இவைகளை வைத்து சாம்பிராணியுடன் கற்பூர தீபாராதனை காட்டி பூஜிக்க வேண்டும்.

அந்த நிறைசெம்பு தண்ணீரில் சுமங்கலி பெண்கள் ஒற்றைப்படையில் விரல்களை வைத்து திருவாதிரை பாடல்கள் பாடி திருவாதிரை நாச்சியாரையும் குலதெய்வத்தையும் வணங்க வேண்டும். 

திருவாதிரை பூஜை முடித்த பிறகு படையலில் உள்ள மஞ்சள் தாலிக்கயிறு ஒன்றை எடுத்து தங்கள் கணவரின் பாத நமஸ்காரம் செய்து அவர்கள் கையால் சுமங்கலி பெண்கள் திருமாங்கல்யம் சூட்டிகொள்ள வேண்டும். 

புதுமன தம்பதியினர் பட்டு உடுத்தி திருவாதிரை நோன்பின் போது வழிபடலாம். கணவன் மனைவி இரண்டுபேரும் உங்களது வீட்டில் பெரியோர்கள் இருந்தால் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறவேண்டும்.

ஆருத்ரா தரிசனம் காணுதல் :

விட்டில் பூஜை முறைகளை முடித்துக் கொண்டு குடும்பத்துடன் ஆருத்ரா தரிசனம் காண அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வர வேண்டும்.

விரதம் முடித்தல் :

சிவன் கோயிலுக்கு சென்று வந்த பிறகு வீட்டில் இறைவனுக்கு படைத்த படையலை பெண்கள் உண்ட பிறகு தான் கணவர் மற்றும் குடும்பத்தினர் உண்டு திருவாதிரை நோன்பு முடிக்க வேண்டும்.

தானம் செய்தல் :

மாங்கல்ய கச்சாயத்தை தவிர மற்ற கச்சாயம் உணவு காய்கறிகள் பதார்த்தங்கள் மற்றும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கயிறு, மஞ்சள் குங்குமம் இவைகள் அனைத்தும் மற்ற சுமங்கலி பெண்கள் வயதானவர்கள் குழந்தைகள் அனைவருக்கும் தம் வசதியை போல் வழங்கலாம்.

திருவாதிரை நோன்பின் பயன்கள் :

திருவாதிரை நோன்பு இருப்பதால் தீர்க்க சுமங்கலி பாக்கியமும் சந்தான (புத்திர) பாக்கியமும், திருமணமாகாத கன்னி பெண்களுக்கு திருமண பாக்கியமும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும், குலதெய்வ கடாட்சமும் நமக்கு கிடைக்கும் என்பது முன்னோர்களின் வழி வழி வந்த உண்மையாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top