2024 ஆற்றுகால் பொங்காலை திருவிழா

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து 2024 ஆற்றுகால் பொங்காலை திருவிழா பற்றிய பதிவுகள் :

மதுரையை எரித்துவிட்டுக் கோபத்துடன் வந்த கண்ணகி தேவியின் கோபத்தைத் தணிக்கும் விதமாகப் பொங்கலிட்டு ஆற்றுகாலில் வழிபடுவதாக ஐதிகம் உண்டு. 

அதுபோன்று மகிஷாசுரனை வதம் செய்தபின்பு பக்தர்களுக்குக் காட்சி அளிக்கும் தேவிக்குப் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவதாக மற்றொரு புராணத்தில் கூறப்படுகிறது. 

பொங்கலிடும் பெண்களுக்கு ஆற்றுகால் தேவி அஷ்ட ஸித்திகளையும், சகல ஐஸ்வர்யங்களையும் அருளுவார். ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் இல்லாமல் திறந்தவெளியில் லட்சகணக்கான பெண்கள் பொங்காலை வழிபாடு நடத்துகின்றனர்.

பொங்காலை வழிபாட்டுக்குப் புதிய மண் பானை, பச்சரிசி, வெல்லம், நெய், தேங்காய் ஆகியவை முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பிப்ரவரி 17-ம் தேதி சனிக்கிழமை அம்மனுக்குக் காப்புக்கட்டிக் குடியிருத்துதலுடன் விழா தொடங்கியது. பிப்ரவரி 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு பண்டார அடுப்பில் தீ மூட்டுதலுடன் பொங்காலை வழிபாடு நடைபெறும். 

மதியம் 2.30 மணிக்கு உச்ச பூஜையும், பொங்காலை நிவேத்யம் மற்றும் தீபாராதனையும் நடைபெறும். பொங்காலை நிகழ்ச்சியில் 26 லட்சம் பெண்கள் கலந்துகொள்வார்கள். 

இரவு 7.30 மணிக்கு குத்தியோட்டம், சூரன்குத்து, இரவு 11 மணிக்கு அம்மன் எழுந்தருளல் ஆகியவை நடைபெறும்.

10-ம் நாள் விழாவான பிப்ரவரி 26-ம் தேதி இரவு 9.45 மணிக்கு காப்பு அவிழ்த்துக் குடி இறக்குதல் நிகழும். அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு குருதி தர்ப்பணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறும்.

பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு, மன்னனை வதம் செய்துவிட்டு சினம் தணியாமல் தெற்கு நோக்கிச் சென்ற கண்ணகி திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆற்றின் கரையில் இளைப்பாறியிருக்கிறார். 

அப்போது அந்தக் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த முதியவர், கண்ணகி தெய்வம் என்பதை அறிந்து அவரை ஆற்றுப்படுத்தி அங்கு குடியமர்த்தியிருக்கிறார். அம்மன் அந்த ஊரில் அமர்ந்து மக்களுக்கு அருள்பலிக்க வேண்டும் என்ற முதியவரின் ஆசை நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் அம்மனுக்குப் பொங்கலிட்டு வழிபட்டுவருவது தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. ஆற்றுகால பகவதி அம்மன் கோயிலில் பொங்கலிடும் போது ஆற்றுக்கால் பகவதி அம்மனும் பெண்ணாக வந்து பொங்கலிடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 17 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது உலக சாதனையாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2004-ம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது பழைய உலக சாதனையை முறியடித்துப் புதிய சாதனையாக உருவெடுத்தது. 

கடந்த 2018-ம் ஆண்டு 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டுள்ளனர். ஆண்டுதோறும் பொங்கலிடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top