சோதனைகளை நீக்கும் சோமவார பிரதோஷம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சோதனைகளை நீக்கும் சோமவார பிரதோஷம் பற்றிய பதிவுகள் :

சோமவார பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை பிரதோஷம். சிவஆலயங்களில் இன்று மாலையில் சோமவாரப்பிரதோஷம் நடைபெறுகிறது.

சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிப்பிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு.

பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையானது. உலக மக்களைக் காக்க விஷத்தை குடித்து அதை கழுத்தில் தக்க வைத்துக்கொண்டவர் சிவபெருமான். அந்த நாள் திரயோதசி நாள் மாலை வேலையில் சிவன் மயக்கம் தெளிந்த நேரம் பிரதோஷம் வேளையாகும்.

பிரதோஷம் நித்ய பிரதோஷம், மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.
விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நன்னாள். சோமம் என்றால் சந்திரன். திங்கள் என்றாலும் சந்திரனைக் குறிக்கும். சந்திரனை, பிறையாக்கி தன் சிரசிலேயே வைத்து அணிந்து கொண்டிருக்கிறார் சிவபெருமான். சந்திரன் மனோகாரகன். நம் மனதில் குழப்பத்துக்கும் அவனே காரணம். நாம் தெளிவாக இருப்பதற்கும் அவனே காரணம். 

ஆகவே, மனகிலேசத்துடன், மனக்குழப்பத்துடன், மனோபலமில்லாமல், மனத் தெளிவு இல்லாமல் துன்பப்படுபவர்கள் திங்கட்கிழமையில் சிவனாரை வழிபடுவது நன்மை. சோமவாரப்பிரதோசம் மனக்குழப்பத்தை தீர்க்கும்.

இன்று திங்கள் கிழமை திரயோதசி நாளில் நாம் சந்தனம் , பால் , இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். 

ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம், ராகு, கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனை தீரும், திருமணம் தடை நீங்கும். போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்.

பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுத்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். பாலபிஷேகம் செய்தால் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் அபிஷேகத்தினால் வளங்கள் பல உண்டாகும், தேன் அபிஷேகம் இனிய குரலும், பழங்களால் அபிஷேகம் செய்தால் நிலத்தில் விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தம் அபிஷேகத்தினால் செல்வம் பெருகும்.

நந்திக்கு நெய் அபிஷேகம் செய்தால் முக்தி பேறு கிட்டும். இளநீர் அபிஷேகம் செய்தால் நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை அபிஷேகத்தினால் எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் அபிஷேகம் செய்தால் சுகவாழ்வு கிடைக்கும். சந்தன அபிஷேகம் செய்வதன் மூலம் சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் அபிஷேகம் செய்வதனால் தெய்வ தரிசனம் கிட்டும்.

பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய் பயம் விலகும். ஒரு கைப்பிடி காப்பரிசி, ஒரு பிடி வில்வ இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை சிவனுக்கு கொடுத்து விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் வணங்க சகல துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை. சோமவார பிரதோச நாளில் எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும் முன்னேற்றம் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top