பைரவருக்குரிய எட்டு படை வீடுகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பைரவருக்குரிய எட்டு படை வீடுகள் பற்றிய பதிவுகள் :

பைரவரின் எட்டு படைவீடுகளுக்கு அட்ட வீரட்டானங்கள் என்று பெயர். பைரவர் வீரதீரச் செயல்கள் புரிந்த இடங்களாக இருப்பதால் இவை இந்தப் பெயர் பெற்றன. அவைகள்,

1. திருக்கண்டியூர்.
2. திருக்கோவிலூர்.
3. திருவதிகை.
4. திருப்பறியலூர்.
5. திருவிற்குடி.
6. வழுவூர்.
7. திருக்குறுக்கை.
8. திருக்கடவூர்.

1. திருக்கண்டியூர் :

இத்திருத்தலம் தஞ்சை திருவையாறு சாலையில் திருவையாற்றிற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. இத்திருத்தலம் ஆதி வில்வாரண்யம் என வழங்கப்படுகிறது.

இறைவனின் திருநாமம் பிரமசிரகண்டீஸ்வரர். பிரம்மனின் அகந்தையை அழித்து அருள் கொடுத்த இடம். இத்தலத்திற்கு வந்து பக்தியோடு வழிபாடு செய்தால், மறுபிறவியில்லை;
திருமணத்தடை நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. 

இந்தக் கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் வடமேற்குத் திசையில் பைரவரின் தனி சன்னதி உள்ளது. ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்பு. இந்த நாட்களில் இலுப்பையெண்ணெய், புங்கெண்ணெய், நல்லெண்ணைய் கலந்து 8 விளக்கேற்றி மூலவருக்கு அர்ச்சனை, அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும்.

2. திருக்கோவிலூர் :

திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம், திருக்கோவிலூர் நகருக்குள்ளேயே தென்பெண்ணை நதி தீரத்தில் அமைந்துள்ளது. இறைவனின் திருநாமம் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி. அன்னை சிவானந்தவல்லி என்ற பெரிய நாயகி. ஆலயத்தில் ஈசானிய மூலையில் பைரவர் தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.

ஞாயிறு, வெள்ளி, வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்தல் சிறப்பு. இங்குள்ள மஹாகணபதி சன்னதியில் தான் ஸ்ரீமஹா கணபதியின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வையார் விநாயகர் அகவலை அருளினார். இத்தலத்தில் அபிஷேகம் செய்தால், நல்ல குருவின் திருவருள் முழுமையாக அமையும். சோழச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ராஜராஜ சோழன் பிறந்த ஊர் இது.

ஸ்ரீராஜராஜசோழன் ஸ்ரீ கருவூரார் சித்தரின் அருளின் படி பைரவரை வணங்கி ஈடில்லாத புகழ் பெற்றார்.

3. திருவதிகை :

பண்ருட்டியிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் இது. இறைவனின் திருநாமம் வீரட்டானேஸ்வரர். ஈசானிய மூலையில் இங்கு பைரவர் எழுந்தருளியுள்ளார். திரிபுரம் எரித்த இடம் இதுவே! வித்யுமாலி, தாரகாசுரன், கமலாக்ஷன் ஆகிய அசுரர்களை அழித்த இடம் இது. வெள்ளி, புதன் கிழமைகளில் இங்கு வழிபடுவது சிறப்பாகும்.

தீராத நோய்கள் தீர இங்கு வந்து வழிபட வேண்டும். சுந்தரமூர்த்தி நாயனார் திருவடி தீட்சை பெற்ற இடம் இது. சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு திரும்பிய திருநாவுக்கரசரின் தீராத குன்ம வியாதியை நீக்கி தடுத்தாண்ட தலம் இது.
 உடல் நோய்களும், பிறவி நோய்களும் நீங்கும் இடம் இதுவே!

4. திருப்பறியலூர் :

மாயவரம் திருக்கடையூர் சாலையில் 8 கி.மீ. தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது. இந்த செம்பொனார் கோவிலில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் திருப்பறியலூர் இருக்கிறது. சுவாமியின் திருநாமம் வீரட்டேஸ்வரர். அம்பாளின் பெயர் இளங்கொம்பனையாள். அகந்தை கொண்ட தட்சனை அழித்த இடம் இது. தட்சன் யாகம் செய்த இடமே தற்சமயம் கோவிலின் குளமாக இருக்கிறது.

இங்கு வந்து வழிபட்டால், தீராத கடன்கள் தீரும்; பூர்வ ஜென்மங்களில் ஏற்பட்ட சாபங்கள், தோஷங்கள் ஆகியவற்றை நீக்கி, நல்வாழ்வு தருமிடம் இதுவே.

5. திருவிற்குடி :

திருவாரூர் நாகூர் சாலையில் திருப்பயந்தங்குடியிலிருந்து பிரிந்து 2 கி.மீ. தூரம் சென்றால் திருவிற்குடியை அடையலாம்.
மேற்கு நோக்கிய திருக்கோவிலாக இது அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலின் இறைவனின் திருநாமம் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி.திருமால் சுதர்ஸன சக்கரம் வேண்டி இறைவனுக்கு துளசியால் அர்ச்சித்து அருளையும், சுதர்ஸன சக்கரத்தையும் பெற்றார்.

எனவே, இங்கு சிவபெருமான் வடிவில் இருக்கும் பைரவருக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இங்கு திருமால் தனது தேவியான லட்சுமியோடு இருக்கிறார்.
பெரும் வறுமை நீங்கிட அல்லது மகத்தான செல்வ வளம் வேண்டுவோர், இங்கு 16 வெள்ளிக்கிழமைகளுக்கு வர வேண்டும் வந்து விநாயகர், சுவாமி, அம்பாள், இலக்குமி, பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்ய வேண்டும்;

இதைச்செய்ய இயலாத அளவுக்குபொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருப்போர் அர்ச்சனை செய்தால் போதும். இவ்வாறு செய்து முடித்தால், வறுமை நீங்கும்; செல்வ வளம் பெருகும்.

6. வழுவூர் :

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 8 கி.மீ. தூரம் சென்றதும், வலப்புறம் திரும்ப வேண்டும். அங்கிருந்து அரை கி.மீ. தூரத்தில் இருப்பது வழுவூர் ஆகும்.

இறைவன் கிருத்திவாஸர் என்ற திருநாமத்தோடு அருள்பாலித்துவருகிறார். அகங்காரத்துடன் தான் என்ற அகந்தையில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அழித்து, திருக்காட்சி கொடுத்து அவர்களுக்கு ஞானச் செல்வம் தந்தருளும் இடம் இது.

ஸ்ரீஐயப்பன் அவதரித்த இடமும் இதுவே. எத்தனையோ பேர்கள் தியானம் செய்கிறேன்; தவம் செய்கிறேன் எனக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என புலம்புபவர்கள், இங்கு வருகைதந்து, இறைவனை வழிபட வேண்டும். மாதம் ஒரு நாள் வீதம் பத்து நாட்களுக்கு இங்கிருக்கும் மூலவரின் முன்பாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்;

இங்கும் ஈசான மூலையில் பைரவர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு அருகிலேயே சனீஸ்வரர் அமர்ந்திருக்கிறார். ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்த அஷ்டமச்சனி (4 ஆம் இடத்துச்சனி), சனி திசையால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 8 சனிக்கிழமைகளுக்கு இங்கு வர வேண்டும்; அவ்வாறு வந்து, இவரது சன்னிதியில் 8 தீபம் நல்லெண்ணெய் ஊற்றி, ஏற்றவேண்டும். அதன்பிறகு அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும்; முடியாதவர்கள் அர்ச்சனை செய்து வர சனிக்கிரகத்தின் பாதிப்புகள், தொல்லைகள் நீங்கி, எல்லையில்லாத மனநிம்மதியைப் பெறலாம்.

7. திருக்குறுக்கை :

மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு சாலையில் கொண்டல் என்ற இடம் வந்ததும், பிரிந்து செல்ல வேண்டும். அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் திருக்குறுக்கை வரும். இறைவனின் திருநாமம் வீரட்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை ஆகும். காமனை எரித்த இடம் இதுவே.

தியானம் செய்பவர்கள், இறை நெறி செல்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சுழுமுனை கூடி, வாக்கு சித்தியும் தவ உயர்வும் பெறமுடியும்.
குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து 8 வியாழன் அல்லது 8 செவ்வாய்க்கிழமை அல்லது மாதாந்திர வியாழன் அல்லது மாதந்திர செவ்வாய்க்கிழமை என்று 8 முறை வழிபட்டு, அன்னதானம் ஒவ்வொரு தடவையும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கண்டிப்பாக மழலைச் செல்வம் பெறுவார்கள்..

8. திருக்கடவூர்:

திருக்கடையூர் என்ற திருக்கடவூர் ஆதியில் வில்வாரண்யம் என்ற பெயரில் விளங்கியது.
அமிர்தகடேஸ்வரர், அபிராமி என்ற பெயர்களில் அப்பாவும் அம்மாவும் அருள்பாலித்து வருகின்றனர். எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயரைக் காத்தருளிய இடம் இதுவே.
இதய நோயில் வருந்துவோர்கள், ஆயுளுக்கு கண்டமுள்ளவர்கள் இங்கு வந்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். 

அதன்பிறகு தியானம் செய்ய வேண்டும். இவ்வாறு 8 சனிக் கிழமைகளுக்குச் செய்து வந்தால், மரண பயம் அகன்று நீடூழி வாழலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top