பள்ளியறை பூஜையின் மகத்துவம் மற்றும் அதன் பெருமைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பள்ளியறை பூஜையின் மகத்துவங்களும் மற்றும் அதன் பெருமைகள் பற்றிய பதிவுகள் :

உலகம், உயிர்கள், பிரபஞ்சம் என்று அனைத்திலும் ஊடுருவி நிற்பது சதாசிவம் என்ற அருணாச்சலேஸ்வரரே!

20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் சிவலிங்க வழிபாடு இருந்து வந்தது; தற்போது நமது பாரத நாடு, ஸ்ரீலங்கா, மலேஷியா, சிங்கப்பூர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகளில் மட்டும் வழக்கத்தில் இருக்கின்றது. தாய்லாந்து, வியட்நாம், கொரியாவில் வேறு பெயர்களில் சிவலிங்க வழிபாடு இருந்து வருகின்றது.

நமது தமிழ்நாட்டில் இருக்கும் 38,000 பழமையான ஆலயங்களில் 27,000 சிவாலயங்கள் ஆகும். 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளியறை பூஜை அனைத்து ஊர்களிலும், அனைத்து ஆலயங்களிலும் நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது மிகவும் அருகிக் கொண்டிருக்கின்றது.

தமிழ்நாட்டில் எந்த ஊர்களில் எல்லாம் பள்ளியறை பூஜை நடைபெறவில்லையோ அந்த ஊர்களில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தம்பதிகள் பெருமளவு குறைந்துவிட்டார்கள்.

சேக்கிழார் மன்றம், உழவாரப் பணி மன்றங்கள், திருநாவுக்கரசர் அடியார்கள், அப்பர் சங்கம், சுந்தரர் திருப்பணிக் குழு என்ற பெயர்களில் பலவிதமான சிவனடியார்கள் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றார்கள். அவரவர் ஊர்களில் இருக்கும் சிவாலயங்களில் பள்ளியறை பூஜையைத் துவங்கிட முயற்சி செய்வது அவசியம்.

பல சிவாலயங்களில் பள்ளியறையே இல்லை. அதை உடனடியாக கட்டிட முயற்சிப்பது அவசியம். பள்ளியறைப் பூஜைக்கு சிவபாத பூஜை என்று ஒரு பெயர் உண்டு.

பள்ளியறை பூஜை செய்யும் முறை:

இரவுக் கால பூஜை சிவாலயத்தில் நிறைவு ஆனப் பின்னர், ஈசனுடைய திருப்பாதத்திற்கு அரிய அலங்காரம் செய்ய வேண்டும். அந்த அலங்காரம் செய்த திருப்பாதத்தை பல்லக்கில் வைத்து கோவிலுக்குள் வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும் போது, நாதஸ்வரம், சங்கு, உடுக்கை, பேரிகை, துந்துபி, மத்தளம் மற்றும் திருக்கையிலாய வாத்தியம் என்று அழைக்கப்படும் பஞ்சவாத்தியங்கள் இசைக்க வேண்டும். இவைகளை யார் ஒருவர் சம்பளம் வாங்காமல் ஒரு பிறவி முழுவதும் இசைக்கின்றார்களோ, அவர்களே சிவலோகம் என்று அழைக்கப்படும் திருக்கையிலாயத்தில் இசைக்கும் கணங்களாக பொறுப்பேற்கின்றார்கள்.

ஒவ்வொரு தினமும் ஒரு சில நல்ல செயல்களையாவது செய்தோம் என்ற மன நிறைவு உடன் காலதேவனாகிய மஹாகால பைரவப் பெருமானுக்கு நாம் செய்யும் முறையான வழிபாட்டு தின நிறைவுதான் இந்த பள்ளியறை பூஜை.

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம் வரும் போது, சிவபுராணம், பதிகங்கள் பாடி வரவேண்டும்; இதைத் தரிசித்தாலே வளமான வாழ்க்கையை நாம் அமைக்கின்றோம் என்று அர்த்தம்.

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி ஈசனைச் சுமந்து வரும் பாக்கியம் எவருக்குக் கிட்டுகின்றதோ, அவர்கள் மறுபிறவியில் பொறியியல் வல்லுநர்களாகவும், பல மாடிக்கட்டிடங்களுக்குச் சொந்தக் காரர்களாகவும், பல ஆயிரம்கோடி ரூபாய்களுக்கு அதிபதியாகவும் மாறுவார்கள்.

பள்ளியறை பூஜைக்கு பூக்கள், பூச்சரங்கள், நிவேதனம் செய்து தருபவர்கள் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கக் காரணமாக இருக்கும்.

பள்ளியறை பூஜைக்கு பசும்பால் தருபவர்களுக்கு அருமையான வாரிசுகள் இப்பிறவியிலேயே கிட்டும்.

பள்ளியறை பூஜைக்கு எண்ணெய், நெய், மின் விளக்கு தானம் செய்பவர்களுக்கு பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு கல்வி தரும் பாக்கியத்தை அடுத்த பிறவியில் பெறுவார்கள்.

திங்கட்கிழமை அன்று பள்ளியறை பூஜைக்குரிய பொருட்களை தானம் செய்து, அதில் கலந்து கொள்பவர்கள் அதன் பிறகு தமது வாழ்க்கையில் மகத்தான திட்டங்களை தங்கு தடையின்றி செயல்படுத்தி வெற்றி காண்பார்கள்.

ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு மிகவும் சிரமப்பட்டே வாழ்க்கைத் துணை அமையும். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

ஆயில்யம் நட்சத்திரமும், செவ்வாய்க்கிழமையும் வரும் நாளன்று தமது வருமானத்தில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை அன்பளிப்பாக தந்து, அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

அரசு மற்றும் தனியார்த் துறையில் பதவி உயர்வுக்குக் காத்திருப்பவர்கள் புதன் கிழமையன்று பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு, கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

அனைத்துவிதமான சித்திகளும் கிடைக்க பலர் பல பிறவிகளாக முயற்சி செய்து கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் ஒருவருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை தம்மால் முடிந்த அளவுக்கு வாங்கித்தரவேண்டும். கலந்து கொண்டு மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

கணவனுடைய நோய் பல காலமாக இருந்தால் அது தீர, அவருடைய மனைவியானவர், வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையை சிறப்பிக்க தம்மால் ஆன முயற்சியில் ஈடுபடவேண்டும்.

அற்புதமான வாரிசு மகனாகவோ அல்லது மகளாகவோ பெற விரும்பினால் சனிக்கிழமையன்று பள்ளியறை பூஜையில் கலந்து கொள்வதோடு, அதற்குத் தேவையான பொருட்களை வாங்கி தரவேண்டும்.

பிரிந்த வாழ்க்கைத் துணை சேரவும், காணாமல் போய் பல ஆண்டுகள் என்ன ஆனார்கள் என்பதை அறியவும், அறிந்த பின்னர் திரும்பி வரவும் மூன்றாண்டுகள் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

அசுபதியும் ஞாயிற்றுக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பூக்கள், பால், நைவேத்தியம் போன்றவைகளை வாங்கித் தரவேண்டும். (ஒரு போதும் பாக்கெட் பால் வாங்கித் தரக் கூடாது என்பதை நினைவிற் கொள்க)

பள்ளியறை பூஜைக்கு பால், நைவேத்தியங்கள் செய்து கொடுப்பவர்களும், பள்ளியறை பூஜை நிறைவடைந்த பின்னர், ஏழைகளுக்கு தானமாக நைவேத்தியத்தைத் தருபவர்களுக்கு ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தைகள் இப்பிறவியிலும், மறுபிறவியிலும் பிறப்பார்கள். பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு, அதன் முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்துக் கொண்டு வந்தால், சுகப்பிரசவம் ஏற்படும். நைவேத்தியப் பாலை பலருக்கும் தந்தால் அவர்களுக்கு வலியில்லாத பிரசவம் உண்டாகும்.

குழந்தை பிறக்கும் தருணத்தில் இறை சிந்தனை உண்டாகும். இப்படிப்பட்ட சிந்தனை உண்டானால், அவர்களுக்கு பிரசவ வைராக்கியம் உருவாகுவற்குப் பதிலாக முக்தி வைராக்கியம் உண்டாகும்.

பள்ளியறை பூஜையிலும், அதன் நிறைவுப்பகுதியிலும் அன்னதானம் செய்பவர்கள் தொழிலில் அமோக வளர்ச்சியை அடைவார்கள். பல மடங்கு லாபம் அவர்களைத் தேடி வரும் பள்ளியறை பூஜைக்கு எண்ணெய்,நெய் தொடர்ந்து தருபவர்களுக்கு முதுமைக்காலத்தில் கண் சார்ந்த வியாதிகள் ஒருபோதும் வராது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top