மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம்

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம் பற்றிய பதிவுகள் :

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர்.

மூலவர்

இத்தளத்தின் மூலவர் ஆதிபராசக்தியாகும். ஆதிபராசத்தி இரு கரம் கொண்டும், தாமரை பீடத்தில் அமர்ந்தவாரும் காட்சியளிக்கிறார்.

பெண்களுக்கு சிறப்பு

இக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறைக்கு பெண்கள் செல்லவும், வழிபடவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அமைப்புகள்

இக்கோயிலுக்கு என ஆதிபராசக்தி சித்தர் பீட அமைப்புகள் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் மூலம் இக்கோயிலின் வழிமுறைகளும், வழிபாட்டு முறைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த அமைப்பினைச் சார்ந்தோர் சக்திமாலை அணிந்து, விரதமிருந்து செந்நிற ஆடையை உடுத்தி ஆதிபராசக்தியை வழிபடுகின்றனர். இந்த அமைப்பினைக் கொண்டு குழு வழிபாடும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகின்றன.

தல வலராறு

1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் நாள் தமிழகத்தில் வீசிய புயல்காற்றால் வேப்பமரம் வீழ்ந்தது என்றும் அதன் அடியில் இருந்த புற்று கரைந்து சுயம்பு வெளிப்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது. தெய்வம் தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற தெய்வ மூர்த்தமே “சுயம்பு” என்று கூறுப்படுகின்றது.

இப்போது கருவறை உள்ள இடத்தில் தான் புற்று இருந்தது. அந்தப் புற்றிலிருந்துதான் சுயம்பு வெளிப்பட்டது என அறிவோம். கருவறையின் வலப்புறத்தில் தனியாகப் புற்றை அமைத்துக் கொள்கிறேன் எனக் கூறி அவ்வாறே அமைத்துக்கொண்டாள். பக்தர்களை காப்பதற்கும், தீயவர்களைத் தண்டிப்பதற்கும் நான் நாகவடிவில் உறைகிறேன் எனக்கூறிய அன்னை புற்றில் நாகமாக உறைவதுடன் சிலர்க்கு காட்சி கொடுத்ததும் உண்டு.

இப்புற்றை வலம் வருவது நவக்கிரக சந்நிதியை வலம் வருவதற்குச் சமம். 1974ஆம் ஆண்டில் புற்று மண்டபம் தனியாக நிறுவப்பட்டது.

அதே ஆண்டே சப்தமாதர் சந்நிதி எழுப்பப்பட்டது. சாதிசமயங்களைக் கடந்த சித்தர்பீடம் இது என்பதற்கும், ஆகம விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கோயில் இது என்பதற்கும் இதுவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 

அன்னை ஆதிபராசக்தியின் பரிவார தேவதைகளான பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியவையே சப்த கன்னியர்களாவர். இக்கோயில்களுக்கு மேற்கூரை அமைப்பது இல்லை.

அன்னையின் ஆணைப்படி 1974ஆம் ஆண்டு சித்தர் பீடத்தின் முகப்பில் ஓம்சக்தி மேடை நிறுவப்பட்டது. அன்னையின் சூலமும், அதில் ஒம் சக்தி என்னும் மூலமந்திரமும் தனிமேடையில் நிறுவப்பட்டுள்ளதால் இது ஓம் சக்தி மேடை எனப்படும். இதனை மும்முறை வலம் வந்த பிறகே ஆலயத்துக்குள் செல்லவேண்டும்.  

இங்கு நவக்கிரங்களுக்கு தனியாக சந்நிதி இல்லை. நவக்கிரகங்கள் அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் பரம் பொருளாக இருப்பவள் அன்னை ஆதிபராசக்தி ஆதலால் இங்கு நவக்கிரங்களுக்கென தனியாக சந்நிதி இல்லை. அதற்குப் பதிலாகவே ஓம் சக்தி மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சித்தர் பீடத்தின் கருவறை விமானத்தின் பெயர் ‘சர்வ காமிகம்‘ எனப்படும். இது இரண்டு நிலைகளைக் கொண்டது. நான்கு மகாநாசிகளும், எட்டு அல்ப நாசிகளும், எட்டு சிம்மங்களும், அஷ்ட லட்சுமிகளும் கொண்ட மேல்முகப்பு உடையது. அர்த்த மண்டபத்துடன் கர்ணகூடம், பஞ்சரம், முகராலை முதலிய அங்கங்கள் கொண்டது.

கருவறையைச் சுற்றி பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, ஆகிய மூவரும் கருணைப் பெருக்குடன் புன்முறுவல் பூத்தாவாறு அமர்ந்துள்ளனர். அர்த்த மண்டபத்தில் துர்க்கையும், விநாயகரும் வீற்றுள்ளனர். சித்தர் பீடத்தைச் சுற்றி 21 சித்தர்கள் உருவமற்ற சிலை வடிவில் வீற்றிருக்கின்றனர், இவர்களுக்கும் இங்கு பூசை செய்யப்படுகின்றது. கருவறை முன் முகப்பின் மேலே அன்னை ஆதிபராசக்தி வீற்றிருக்க அவளுக்கு இருபுறமும் கலைமளும். திருமளும் சேவை செய்யும் திருக்கோலம் தாங்கியுள்ளனர். கருவறையின் இடப்புறத்தே வேப்பமரம் தலவிருட்சமாக அமைந்துள்ளது.

புற்று மண்டபத்தின் பின்புறம் நாகபீடம் அமைந்துள்ளது. கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு எலுமிச்சம்பழ விளக்கேற்றி வழிபடுவார்கள். 

36 அங்குல உயரத்தில் அன்னையின் உருவம் வடிவமைக்கபபட்டது. அன்னை தாமரை பீடத்தில் இருக்கிறாள். வலது காலை மடக்கியும் இடது காலை ஊன்றியும் அமர்ந்துள்ளாள்.

அவள் இடக்காலை ஊன்றி இருப்பது அனைத்திலும் முதன்மைத் தத்துவம் பெற்றவள் ஆதிபராசக்தி என்பதனைக் காட்டும். அன்னை தனது வலக்கரத்தில் தாமரை மொட்டு ஒன்றை ஏந்தியுள்ளாள். இடக்கரத்தை சின்முத்திரை காட்டும் நிலையில் வைத்துள்ளாள். அன்னையின் திருமுடி மேல் நோக்கி கட்டப் பெற்றுள்ளது. இவ்வாறு அன்னை சுயம்புக்குப் பின்புறம் சிலை வடிவில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாள்.

Post a Comment

1 Comments
Post a Comment
To Top