கும்பாபிஷேகத்தின் வகைகளும் அவற்றின் விளக்கங்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கும்பாபிஷேகத்தின் வகைகளும் அவற்றின் விளக்கங்களும் :

1. ஆவர்த்தம்
2. அனாவர்த்தம்
3. புனராவர்த்தம்
4. அந்தரிதம்

1. ஆவர்த்தம் :

ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது.

2. அனாவர்த்தம் :

பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

3. புனராவர்த்தம் :

கருவறை, பிரகாரம், கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

4. அந்தரிதம் :

கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சந்தி.

கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்க்கொள்ளப்படும் அவசியமான கிரியைகள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் :

1. அனுஞை
2. சங்கல்பம்
3. பாத்திர பூஜை
4. கணபதி பூஜை
5. வருண பூஜை
6. பஞ்ச கவ்யம்
7. வாஸ்து சாந்தி
8. பிரவேச பலி
9. மிருத்சங்கிரஹணம்
10. அங்குரார்ப்பணம்
11. ரக்ஷாபந்தனம்
12. கும்பலங்காரம்
13. கலா கர்ஷ்ணம்
14. யாகசாலா பிரவேசம்
15. சூர்ய,சோம பூஜை
16. மண்டப பூஜை
17. பிம்ப சுத்தி
18. நாடி சந்தானம்
19. விசேஷ சந்தி
20. பூத சுத்தி
21. ஸ்பர்ஷாஹுதி
22. அஷ்ட பந்தனம்
23. பூர்ணாஹுதி
24. கும்பாபிஷேகம்
25. மஹாபிஷேகம்

1. அனுஞை : (அனுமதி வாங்குதல்) 

செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

2. சங்கல்பம் :

இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

3. பாத்திர பூஜை :

இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்குறிய தேவதைகளை பூஜை செய்தல்.

4. கணபதி பூஜை :

செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.

5. வருண பூஜை :

அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

6. பஞ்ச கவ்யம் :

ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசுநீர், பசுசானம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

7. வாஸ்து சாந்தி :

தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற, செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.

8. பிரவேச பலி :(துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு)

எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செய்தல்.

9. மிருத்சங்கிரஹணம் : (மண் எடுத்தல்)

அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்திலிருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.

(ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்ட படுத்தினதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் கிரியை)

10. அங்குரார்ப்பணம் : (முளையிடுதல்)

எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூரியர்களான,

1. வைகர்த்தன், 
2. விவஸ்வதன்,
3. மார்த்தாண்டன்,
4. பாஸ்கரன்,
5. ரவி,
6. லோகபிரகாசன்,
7. லோகசாட்சி,
8. திரிவிக்ரமன்,
9. ஆதித்யன்,
10. சூரியன்,
11. அம்சுமாலி,
12. திவாகரன் 

போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.

11. ரக்ஷாபந்தனம் : (காப்புக்கட்டுதல்)

கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும் செய்யும் கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு. அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு (கயிறு) கட்டுதல்.

12. கும்பலங்காரம் :

கும்பங்களை (கலசம்) இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.

13. கலா கர்ஷ்ணம் : (சக்தி அழைத்தல்)

விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.

14. யாகசாலா பிரவேசம் : 

கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

15. சூர்ய, சோம பூஜை :

யாகசாலையில் சூர்ய சந்திரனை வழிபடுதல்.

16. மண்டப பூஜை :

அமைக்க பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.

17. பிம்ப சுத்தி :

விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.

18. நாடி சந்தானம் :

யாகசாலை இடத்திற்கும், மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். (இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இனைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்)

19. விசேஷ சந்தி :

36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்யம் தருவது.

20. பூத சுத்தி :

இந்த பூத (மனித) உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.

21. ஸ்பர்ஷாஹுதி :

36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.

22. அஷ்ட பந்தனம் :

எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.

23. பூர்ணாஹுதி :

யாகத்தை பூர்த்தி செய்தல்.

24. கும்பாபிஷேகம் : (குடமுழுக்கு) 

யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

25. மஹாபிஷேகம் :

கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.

26. மண்டலாபிஷேகம் :

பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48 நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.

மற்றும் சில.

1. ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைத்தல்.
2. பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
3. நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.
4. உத்தம பக்ஷம் – 33 குண்டம் அமைத்தல்.

கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2 காலம், 4 காலம், 8 காலம், 12 காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.

கும்பத்தை நம் சரீரமாக சொல்லப்படும் காரணம் :

யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு விபரமாகச் சொல்லுவதாவது.

கும்பமாகிய குடம் மாமிசமாகும் (உடல்), குடத்திலுள்ள தண்ணீர் இரத்தமாகும், கும்பத்தினுல் போடப்படும் ரத்தினங்கள் சுக்லமாகும், கும்பத்தின் உள்ளே தர்பையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும், குடத்தின் மேலே நெருக்கமகச் சுற்றப் பட்டுள்ள முப்புரி நூல்களே நரம்புகளாகும், கும்பத்தை சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்திரமே தோல் ஆகும், குடத்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும், முகமாகவும் கூறப்படுகிறது. 

தேங்காயின் மேலே விரித்துள்ள தர்பையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை (குடுமி) ஆகவும், தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள் ஸ்வாமியின் ஜடாபாரங்கள், உச்சரிக்கப்படும் மந்திரங்களே பிராணனாகும் என்று அங்க சிவாகமத்தில் கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top