கல்வியில் முன்னேற்றம் உண்டாக வழிபட வேண்டிய அகஸ்தீஸ்வரர் கோயில்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கல்வியில் முன்னேற்றம் உண்டாக வழிபட வேண்டிய அகஸ்தீஸ்வரர் கோயில் பற்றிய பதிவுகள் :

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்ற ஊரில் உள்ள கோயில் அகஸ்தீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் அகஸ்தீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி மற்றும் பிரதோஷம் ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இங்கு விநாயகர், முருகன், பைரவர், தட்சிணாமூர்த்தி, அகிலாண்டேஸ்வரி, நவக்கிரகங்கள், ஒரே சன்னதியில் 5 லிங்கங்கள் அமைந்துள்ளன. நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரவும், திருமணத் தடை நீங்குவதுடன், குழந்தை பாக்கியம், கல்வி முன்னேற்றம், வேலை வாய்ப்பு கிடைக்க இங்குள்ள சிவபெருமானையும், அம்பாளையும் வழிபடுகின்றனர்.

சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர். பஞ்ச பாண்டவர்கள் ஒரு ஆண்டு இங்கு வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. ராமேஸ்வரம், கும்பகோணம், காஞ்சிபுரம் நகரிலுள்ள கோயில்களில் உள்ள மணல் லிங்கங்களுக்கு அபிஷேகம் நடப்பதில்லை.

ஆனால், இங்கு தினமும் அபிஷேகம் நடந்து வருகிறது. எண்ணெய் காப்பு சாற்றும் முன் இந்த லிங்கத்தில் மணலில் சேர்ந்துள்ள காக்கா பொன் என்னும் துகள் ஜொலிப்பதைக் காணலாம். இந்த லிங்கத்தை இங்கு ஸ்தாபிதம் செய்யும் முன்பு இத்தலத்தின் மகிமையால் ஈர்க்கப்பட்ட அகஸ்தியர் இவ்வூரில் காசியிலிருந்து ஒரு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார்.

ஆனால், அது முடியாமல் போனதால் அமராவதி ஆற்றை கங்கையாக எண்ணி, இங்குள்ள மணலை பிடித்தே லிங்கம் வடித்தார். இதனால், தடையில்லாமல் விரைவில் செயல்களை முடிக்க இந்த அகஸ்தீஸ்வரரை வணங்குகின்றனர். குறிப்பாக நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரவும், தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கவும், படித்து முடித்ததும் தாமதமின்றி வேலை கிடைக்கவும், முன்னேற்ற திருப்பங்கள் ஏற்படவும் பூஜை செய்து வரலாம்.

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய 5 பஞ்சபூதங்களையும் வணங்கும் வகையில் ஒரே சன்னதியில் 5 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவராத்திரி மற்றும் பிரதோஷ காலங்களில் பஞ்சலிங்கங்களை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளும் கிடைக்கும். இங்குள்ள அகிலாண்டேஸ்வரி அம்பிகை சன்னதியில், கன்னியர்கள் திருமணத் தடையை நீக்கவும், திருமணமான பெண்கள் சுமங்கலிப் பாக்கியம் வேண்டியும் வழிபடுகின்றனர்.

அம்பாள் சன்னதியிலோ, வீட்டிலோ தினசரி 300 நாமாவளியை 5 அல்லது 9 வெள்ளிக்கிழமை பூஜித்து வந்தால் திருமணத் தடை விலகுவதுடன் குழந்தை பாக்கியம், கல்வி முன்னேற்றம், வேலை வாய்ப்பு பலன்கள் கிடைக்கும். கோயில் வளாகத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமன சுவாமி எழுந்தருளியுள்ளார். பெருமாளை வணங்கிவிட்டு அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு உள்ளே செல்லும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெருமாள் மனக்குறையை தீர்த்து வைப்பவராக உள்ளார்.

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிதேவியை திருமணம் செய்த போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த பொதிகை மலைக்கு செல்லுமாறு சிவபெருமான் அகத்திய முனிவருக்கு கட்டளையிட்டார். அங்கு செல்லும் வழியில் அகத்திய முனிவர் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அமராவதி ஆற்றங்கரைக்கு வந்த போது மணலில் ஒரு லிங்கம் வடித்தார்.

அகத்தியவர் வடித்த லிங்கம் என்பதால், சுவாமிக்கு அகஸ்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் லிங்கம் இருந்த இடத்தில் கோயில் வடிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top