வருவாய் தரும் செவ்வாய் முருகன் விரதம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வருவாய் தரும் செவ்வாய் முருகன் விரதம் பற்றிய பதிவுகள் :


மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுவது செவ்வாய். வீரத்தின் நாயகன் செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை. புனிதமான இந்த கிழமையைத்தான் பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுக்கின்றனர். முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமை செவ்வாய்.

செவ்வாய்க்கு மங்களன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும்.

தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.

செவ்வாய் புனித நாள்

பெருமாளின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை ஒதுக்குவது பூமித்தாயைப் புறக்கணிப்பதாகும். பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம் தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர்.

பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடலாம்.

மங்களம் தரும் செவ்வாய்

செவ்வாய் வருவாய் என்று சொல்லுவார்கள். செவ்வாய்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடமும் வைத்தாலும் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றிக்கொடுக்கும். இந்நாளில் மங்கலப்பொருட்களை வாங்குவதும், சுபநிகழ்ச்சி நடத்துவதும் நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு நாம் நன்றிக்கடன் செலுத்தலாம்.

செவ்வாய் வழிபாடு

இக்கிழமையில் பிறந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் கூறுகின்றன. ஜாதகத்தில், செவ்வாயின் பலத்தை பொறுத்தே நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும். ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ளது. செவ்வாயை வழிபட்டால் ரத்தஅழுத்தம், உஷ்ணம், கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

செவ்வாய் வழிபாடு

செவ்வாய் கிழமைக்கு என்று ஒரு வேகம் உண்டு. செவ்வாய்கிழமை அன்று பரிகாரம் செய்தால் அதற்கு பலன் கிடைக்கும். செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும். வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.

9 செவ்வாய்கிழமை விரதம்

செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் குளித்து அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும்.

தோஷம் நீங்க விரதம்

செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு தோஷம் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும்.

செவ்வாய் தோஷம் குறைக்கும் விரதம்

செவ்வாய் சகோதரர்களுக்குக் காரகம் பெற்றவன். செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார்.

சொந்த வீடு யோகம்

சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாய்களில் வணங்கி வர, வாழ்வில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். நிலம் வாங்கி, வீடு கட்டும் கனவு நிஜமாகும். சிலர் சொந்த ப்ளாட்கூட வாங்கியிருக்கின்றனர். ஒன்பது செவ்வாய்க்கிழமைகள், தொடர்ந்து கோயிலுக்குச் சென்று, அவரை வணங்குவதால் ஜாதக ரீதியான கோளாறுகள் தணிந்து, கட்டுப்பாட்டுக்கு வரும். சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.

தினமும் கந்த சஷ்டி கவசம் படித்தால் செவ்வாய் தோசத்திற்க்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top