அதிசய தெய்வங்களைக் கொண்ட திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அதிசய தெய்வங்களைக் கொண்ட திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் பற்றிய பதிவுகள் :

விழுப்புரம் திருவக்கரை ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில். தமிழ்நாட்டில் எத்தனையோ சிவாலயம் இருந்தாலும், காளி கோயில் இருந்தாலும் அவற்றில் மிகவும் பிரபலமான காளி கோயில் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் கோயில் ஆகும். இங்குள்ள காளி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இது மும்முக லிங்கம், வக்கிர காளி, வக்கிர சனி என அதிசய தெய்வங்களைக் கொண்ட திருக்கோயில்.

இத்திருக்கோவிலில் மூலவர் மூன்று முகலிங்கமாக காட்சி தருகின்றார். இது வேறு எங்கும் காணமுடியாத அற்புத திருக்காட்சி ஆகும். இங்கு காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது. இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும். மழைக்காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 263 வது தேவாரத்தலம் ஆகும்.

இந்தியாவில் பஞ்ச முக லிங்கம் கொண்ட சிவதலம் வடக்கில் நேபாளத்திலும், தெற்கில் ஆந்திராவில் உள்ள காளஸ்திரியிலும் உள்ளது. மும்முகத்தில் காட்சி அளிப்பது அருள் சொரியும் திருவக்கரையில் மட்டுமே. இம்முகலிங்கத்திற்கு கிழக்கில் தட்புருட முகமாகவும் வடக்கே வாதேவ முகமாகவும் தெற்கே அகோர முகமாகவும் காட்சி தருகிறார். 

தெற்கே உள்ள அகோர முகத்தில் வாயின் இரு ஓரத்திலும் இரு கோரை பற்கள் உள்ளன. இதை பால் அபிஷேகம் செய்யும் போது மட்டுமே தெளிவாக பார்க்க முடியும்.

பொதுவாக எல்லாக் கோயில்களிலும் சனி பகவான் வாகனமான காகம் அவருக்கு வலப்புறமாக இருப்பது வழக்கம். ஆனால் இங்கு வழக்கத்திற்கு மாறாக சனி பகவானுடைய இடது புறத்தில் அமைந்து வக்கிரமாக காட்சி தருகிறது. அந்த வக்கிர சனியை வணங்குபவர்களுக்கு துன்பம் நீங்கும், இன்பம் பொங்கும். கி.மு.756 ல் கட்டப்பட்ட கோயில் இது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் மயான பூமி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சஷி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். 

வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள். சம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.

வக்கிரகாளி சந்நிதியினால்தான் இத்திருத்தலம் தற்போது பலருக்கும் தெரிந்திருக்கிறது. இத்தலம் புகழ் பெறக் காரணமே இந்த வக்ரகாளியம்மனே ஆகும். வக்ர சாந்தி திருத்தலம் என்று இத்தலத்திற்கு பெயர். 

பட்டீசுவரம் துர்க்கை, சிதம்பரம் பிரம்ம சாமுண்டீசுவரி, தில்லை காளி போன்ற அற்புதமான சிற்பங்களைப் போலவே வக்கிரகாளி அம்மனின் திருவுருவமும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. 

பொதுவாக காளி கோயில் ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து வித்தியாசமானதாக உள்ளது. வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது. 

சுடர் விட்ட பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம் வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், எட்டுத்திருத்தலங்கள் வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம் , பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்து அந்த தலை மாலையையே மார்பு கச்சாக இடத் தோளிலிருந்து இறங்கி பருத்த தனங்களூடேவந்து படிந்து கீழே தொங்கும் வலக்கையில் சென்று முடிகின்றது. 

முண்ட மாலையினை அவள் முப்பிரி நூலாக அணிந்திருக்கிறாள். ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் இக்கோயிலை வலம் வரும் போது வலது புறம் 5 இடப்புறம் 4 என்ற கணக்கின் படி சுற்றிவர வேண்டும் என்பது ஐதீகம்.

சித்ரா பவுர்ணமி :

வக்ரகாளியம்மன் வீதியுலா உற்சவம் – 1நாள் திருவிழா சித்திரை வருடபிறப்பு – சந்திர மௌலீசுவரர் தெப்ப உற்சவம் காணும் பொங்கல், ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, தைபூசம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, கார்த்திகை தீபம், ஆகிய விசேச நாட்களில் கோயிலில் வக்கிர காளியம்மனுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடக்கின்றன. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு , அஷ்டமி நவமி நாட்களில் கோயிலில் பக்தர்கள் வருகை பெருமளவில் இருக்கும்.

இங்கு மனநிம்மதி கிடைக்க, கிரக தோசங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் தடைகள் நீங்க சிவனை பிரார்த்திக்கிறார்கள். வக்ர தோசங்கள், ஜாதக கிரக தோசங்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை நீங்கவும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் இத்தலத்தின் மிக முக்கிய பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர். நீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாதவர்கள் காளி சன்னதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கம். எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

திருமணத்தடை உள்ளவர்கள் தாலி காணிக்கை, புடவை சாத்துதல், மாலை சாத்துதல் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். குழந்தை வரம் இல்லாதவர்கள் தொட்டில் கட்டுதல், எடைக்கு எடை காசுபோடுதல்(துலாபாரம்) ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். வியாபார விருத்தி வேண்டுவோர் திருப்பணிகள் செய்தல், மண்டபம் கட்டித்தருதல், ஆகியவற்றையும் செய்கிறார்கள். தவிர சந்தன காப்பு, பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றால் ஆன அபிஷேகங்கள் நடக்கின்றன. சந்தன அலங்காரமும் வக்கிர காளிக்கு செய்கின்றனர். இந்த தெய்வத்தை குலதெய்வமாக வழிபடுவோர் மொட்டை போடுதல், காதணி விழா நடத்துதல், அங்கபிரதட்சணம்செய்தல், குத்து விளக்கு சரவிளக்கு வாங்கி வைத்தல், நெய்தீபம் ஏற்றுதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமிக்கு 1008 சகஸ்கர கலச அபிஷேகம், வக்ர காளிக்கு 1008 சங்காபிஷேகம் மற்றும் சித்ரா பவுர்ணமியின் மறுநாள் 1008 பால் குட அபிஷேகம் ஆகியவையும் செய்யப்படுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top