ஸ்ரீநடராஜரின் ஆனந்த தாண்டவத்தின் தத்துவம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீநடராஜரின் ஆனந்த தாண்டவத்தின் தத்துவம் பற்றிய பதிவுகள் :

நடராஜர் வடிவம் என்பது சிவபெருமான் ஆனந்தத் தாண்டவ கோலத்தில் திருநடனமாடுவதை சித்தரிக்கிறது. 

அத்திருநடனம் ஆக்கல், காத்தல், அழித்தல் தொழில்கள் நம் ஒவ்வொருவர் உள்ளேயும், பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு கணமும் இடையறாது நடந்து கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

நடராஜர் வடிவத்தில் பொருள் பதிந்த அடையாளக் குறியீடுகள் பல உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது அவரின் ஐம்பெரும் சக்திகளைக் குறிப்பனவாம். 

ஆக்கல் சக்தியை (சிருஷ்டி) அவர் பின்னால் இருக்கும் வலது கை காட்டுகிறது. அந்தக் கை ஒரு டமருகத்தை ஏந்திநிற்கிறது. அதன் நாத ஒலியே சிருஷ்டியின் தொடக்கம் என்பதைக் காட்டுகிறது. 

அவர் முன்னால் இருக்கும் வலது கரம்—அஞ்சற்க என்று கூறும் அபயகரம். காத்தல் (ஸ்திதி) சக்தியைக் குறிக்கிறது. 

அவரின் பின் இடதுகரம் தீயை ஏந்தியிருக்கிறது. அது அழித்தல் சக்தியைக் குறிக்கும் அக்னி தெய்வத்தைக் காட்டுகிறது. 

அவரின் வலது கால் ஒரு சிறிய உருவம் கொண்ட மனிதன்மீது ஊன்றியிருக்கிறது. அதுவே ஆணவத்தைக் குறிக்கும் அபஸ்மரன். (முயலகன்). அது “மறதி” மற்றும் “கவனமின்மை” யைக் காட்டுகிறது. இது மறைக்கும் சக்தியை (திரோபவம்) குறிக்கிறது. இதனால் ஆன்மா இறைவனிடமிருந்து தன்னை வேறாகக் காண்கிறது. 

சிவபெருமானின் முன் இடதுகரம் யானைத் துதிக்கையைப்போல் நீண்டு தூக்கிய பாதத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இது அனுக்கிரகம் என்னும் திருவருட்சக்தியைக் குறிக்கிறது. இச்சக்தியால் ஆன்மா இறைவனோடு ஒன்றாவதை உணர்கிறது.

மூன்றாம் கண் எனப்படும் அவரின் நெற்றிக்கண் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய அனைத்தையும் காண்கிறது. திருவாசி எனப்படும் நெருப்பு வட்டம் பிரபஞ்ச உணர்வையும், அத்திருச்சபையிலே சிவபெருமான் ஆடுவதையும் காட்டுகிறது. 

இடது காதில் இருக்கும் தோடு பெண் தன்மையையும், வலக்காதிலுள்ள தோடு ஆண் தன்மையையும் குறிக்கிறது. திருவாசியின் மேல் மகாகாலம் என்னும் காலதேவன் இருக்கிறார். 

சிவனின் இன்னொரு வடிவமான அவர் காலத்தை உருவாக்கி, அதையும் கடந்துநின்று, காலத்தை விழுங்கி நிற்கிறார். 

சிவபெருமானின் திருமேனியைச் சுற்றியிருக்கும் பாம்பு குண்டலி சக்தியை அதாவது நமது முதுகுத்தண்டில் வீற்றிருக்கும் ஆன்மீக சக்தியை குறிக்கிறது.

அவர் வலது கரத்தின் டமருகத்திலிருந்து புறப்படும் ஓசையானது இது ஆரம்பம் என்பதை அறிவிக்கிறது. அவர் இடது கரத்தில் அனைத்தையும் விழுங்கிவிடும் தீச்சுடர் இருக்கிறது. இது முடிவு என்பதை அறிவிக்கிறது, அதுவே ஒரு புது ஆரம்பத்தைத் தொடக்கி வைக்கிறது.

முழுவதும் தங்கத்தினால் ஆன சிவநடராஜரின் இவ்வடிவம் புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலில் மூலத்தானத்தில வணங்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top