மார்பில் சிவலிங்கம் தாங்கிய ஆஞ்சநேயர்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மார்பில் சிவலிங்கம் தாங்கிய ஆஞ்சநேயர் பற்றிய பதிவுகள் :

சனி ராகு போன்ற கிரகங்களால் வரும் துன்பங்களைத் தீர்த்து பணி உயர்வு திருமண வாய்ப்பு குழந்தைப்பேறு வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற் பயன்களை அருளுகிறார் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.

அரசனான தசரதன் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த யாகத்தின் பிரசாதமான பாயாசத்தை ஒரு கருடன் கொத்திக் கொண்டு போனது. அந்தப் பிரசாதம் அஞ்சனையின் கையில் போய் விழுந்தது. அதைச் சாப்பிட்ட கேசரி அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்குச் சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அந்தக் குழந்தைக்கு ஒருநாள் பசி எடுத்தபோது வானத்தில் தெரிந்த சூரியனைப் ‘பழம்’ என நினைத்து அதைச் சாப்பிட வானிற்குச் சென்றது. 

வானம் நோக்கி வந்த குழந்தையை இந்திரன் தன்னிடமிருந்த ஆயுதத்தால் தடுத்து நிறுத்தினார். இதில் அந்தக் குழந்தையின் தாடை சற்று வளைந்ததால் ‘அனுமன்’ என்று அழைக்கப்பட்டான். அனுமன் என்பதற்கு ‘வளைந்த தாடையை உடையவன்’ என்று பொருள்.

வளர்ந்து பெரியவனான அனுமன் சீதையைத் தேடி வந்த ராமனிடம் அன்பு கொண்டான். அந்த அன்பு பக்தியாக மாறியது. அனுமன் ராமனையே இறைவனாக வழிபடத் தொடங்கினான். இறைவன் மேலான பக்தியை மூன்று வகைகளாகக் குறிப்பிடுகின்றனர். இறைவன் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ இருந்து நம்மைக் காத்து அருள்கிறார் என்கிற எண்ணத்துடன் இறைவனை நினைத்து வழிபடுவது முதல் வகை.

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் இறைவன் இருப்பதாக நினைத்து அவைகளிடம் அன்பு செலுத்தி இறைவனை வழிபடுவது இரண்டாவது வகை. இறைவன் தன்னுள்ளேயே இருக்கிறார் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை. இதில் அனுமன் ராமனிடம் கொண்ட பக்தியும் வழிபாடும் மூன்றாவது வகையைச் சேர்ந்தது. அனுமன் சீதையை மீட்பதற்காக முதலில் ராமனின் தூதுவனாகச் சென்றார். பின்னர் ராவணனை அழிப்பதற்கான போரில் ராமனுக்குத் துணையாகச் சென்றார். அனுமன் தனது ராம பக்தியினாலும் தன்னலமற்ற சேவையினாலும் ராமாயண இதிகாசத்தில் ராமன் சீதைக்கு அடுத்த நிலையில் உயர்ந்து நின்றார்.

தன்னலமற்ற சேவையினால் உயர்ந்து நின்ற அனுமனுக்கு சுசீந்திரம் நாமக்கல் நங்கநல்லூர் தெய்வச்செயல்புரம் குலசேகரன்கோட்டை பஞ்சவடி என்று பல ஊர்களில் மிக உயரமான சிலைகள் அமைக்கப்பட்டும் பல ஊர்களில் தனிக்கோவில்கள் அமைக்கப்பட்டும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி அமைக்கப்பட்ட கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டிக்கு அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாக இருக்கிறது.

பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அனுமன் இந்த இடத்தில் தான் தியான கோலத்தில் இருப்பதாகவும் இங்கு தனக்குக் கோவில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார். இதைத் தொடர்ந்து அந்த பக்தரின் முயற்சியினால் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலில் மூலவரான ஆஞ்சநேயர் ‘வணங்கிய நிலையில் 16 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரது மார்பில் சிவலிங்கம் உள்ளது. கால்களில் காலணி அணிந்து இடுப்பில் கத்தி சொருகியபடி கதாயுதத்துடன் போர்க்கோலத்தில் இருப்பது போன்று அவரது உருவம் வடிக்கப்பட்டிருக்கிறது. நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் செய்யப்பட்டது இந்தச் சிலை. அனுமனின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போன்றும் வடிக்கப்பட்டுள்ளது. சிவனைப் போன்று ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் கல்வி செல்வம் ஆகியவற்றுடன் நீண்ட ஆயுள் கிடைக்கும். அனுமனின் வால் காலை நோக்கிக் கீழாக அமைந்திருக்கிறது. மேலும் இத்தல அனுமனை வழிபட்டால் சனி ராகு போன்ற கிரகங்களின் தோஷங்கள் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோவிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆஞ்சநேயர் போர்க்கோலத்தில் இருப்பதால் கோவிலின் மகாமண்டபத்தில் அவரது துணைவர்களான நளன், நீலன், அங்கதன், குமுதன், சுக்கிரீவன், ஜாம்பவான், ஜிதன், ஜூவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன. கோவில் வளாகத்தில் ராமர் சீதை லட்சுமணர் சிலைகளும் கோவிலின் சுற்றுப்பகுதியில் லட்சுமி சரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன. ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது இங்கு அவருடைய கால் பதிந்ததாகவும் சஞ்சீவி மலையிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோவிலின் எதிரில் உள்ள சிறு மலை என்றும் கூறுகின்றனர். 

ஆஞ்சநேயர் பிறந்த நட்சத்திரமான மூலம் நட்சத்திர நாட்களிலும் சனிக்கிழமைகளிலும் இங்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தை மாதம் முதல் நாளில் 5008 கரும்புகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் சித்திரை மாதம் முதல் நாளில் பத்தாயிரம் கனிகளைக் கொண்டு அலங்காரம் ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் முதலாவது சனிக்கிழமை ராஜ அலங்காரம், இரண்டாவது சனிக்கிழமையில் செந்தூர அலங்காரம், மூன்றாவது சனிக்கிழமை பச்சை அலங்காரம், நான்காவது சனிக் கிழமை சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அலங்காரம், ஐந்தாவது சனிக்கிழமை பத்மாசனத்தில் தியான அலங்காரம் என்று பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top