அய்யா வைகுண்டரின் அவதார வரலாறு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அய்யா வைகுண்டரின் அவதார வரலாறு பற்றிய பதிவுகள் :

ஏகம் படைத்துக் காக்கும் ஸ்ரீமன் நாராயணரின் வைகுண்டர் அவதாரம்:

ஸ்ரீமன் வைகுண்டர் (C.1833 –C.1851): உலகைப் படைத்துக் காக்கும் இறைவனான நாராயணர் தனது கிருஷ்ண அவதாரத்துக்கு அடுத்து கலியுகத்தில் எடுத்த அவதாரமே வைகுண்டர் அவதாரம். இது ஸ்ரீமன் நாராயணரின் 10-வது அவதாரம். இந்த அவதாரத்தில் நாராயணர் முப்பொருளும் (சிவன், விஷ்ணு, பிரம்மா) ஒருபொருளாய் அவதரித்தார். வைகுண்டர் “நாராயண பண்டாரம்” என்றும், "அய்யா" என்றும், "சிவநாராயணர்" என்றும் பெருமையோடு அழைக்கப்படுகிறார். இறைவன் இந்த மண்ணில் அவதரிக்கும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், அவனின் அவதாரத்தை அறிவதற்கு புண்ணிய இறைநூலை கொடுக்கிறான். ஸ்ரீமன் நாராயணர் எடுத்த வைகுண்ட அவதாரத்தை அறிவதற்கும், நல்வாழ்க்கை வாழ்ந்து கலியை கடர்வதற்க்கும் நமக்கு கிடைத்த புண்ணிய ஆகமம் அகிலத்திரட்டு. இப்புனித ஆகமமானது கொல்லம் ஆண்டு 1016 கார்த்திகை மாதம் 27-ஆம் தியதி (10th December 1841 CE) வெள்ளிக்கிழமை, ஆண்டவர் தனது சீடரான அரிகோபாலன் சீடரின் அகமிருந்து அருளி, சீடரால் எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டது. இவ் அகிலத்திரட்டு அம்மானை என்பது

"தர்ம யுகமாக்கி தாரணியை ஆளுதற்கு கர்ம கலியில் கடவுளார் வந்தக் கதை"

மேலும், இப்புனித ஆகமமானது உலகத்தோற்றத்தையும், இதுவரை நடந்த நிகழ்வுகளையும், நாராயணரின் அவதாரங்களையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும் வரிசையாக கூறுகிறது.

அய்யாவின் முந்தைய அவதாரங்கள்:

ஏகம் ஒரு பரமான இறைவன், தான் படைத்து இயக்கி வரும் இந்த பூவுலகில் எப்போதெல்லாம் தர்மம் குன்றி அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அவதார புருஷனாக தோன்றுகிறான். ஆதியில் தேவர் எல்லாம் கூடி தேவாமிர்தம் அருந்தி திருக்கயிலையில் இருக்கையிலே, எங்களுக்கு எதிரி உண்டோ? என சிவனிடம் கேட்க, ஈசன் திருவேள்வி தனை வளர்த்து ஈசனே அதில் இறங்கி கேள்விக்கு பதிலாக வேதகாண்டம் பாடி வையகத்தில் இறங்கையில், வேள்விதனில் குரோணி என்கிற கொடிய அசுரன் உடன் பிறந்தான், குரோணியானவன் பிறந்த சில நாட்களில் தேவர்களையும், கயிலையையும் அழிக்க முற்படும் போது அவனை அழிக்க நாராயணர் சிவனை நோக்கி தவம் இருக்கிறார், அசுரனை அழிக்க வரமருளிய சிவபெருமான் நாராயணரிடம் "குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்க வேண்டும், அவ்வாறு செய்யும் போது அவனின் ஒவ்வொரு துண்டமும் அசுரனாக பூமியில் பிறக்கும், அப்படி பிறக்கும் அசுரர்களை அழிக்க நீரே உத்தமராக அவதரிக்க வேண்டும்" எனக் கூறி வரமருள, நாராயணர் சம்மதித்து குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி வதம் செய்கிறார். அந்த யுகமான நீடிய யுகம் அத்தோடு முடிகிறது. அதன்படி தர்மத்தை காக்க யுகாயுகங்கள் தோறும் அவதரித்த நாராயணர் சதுர மற்றும் நெடிய யுகங்களில் தோன்றி குரோணியின் துண்டத்தில் இருந்து தோன்றிய அசுரர்களான குண்டோமசாலி, தில்லை மல்லாலன், மல்லோசி வாகனென்ற அசுர்களை அழித்தார். பின் கிரேதாயுகத்தில் முருகப் பெருமானாகவும், நரசிம்மராகவும், திரேதாயுகத்தில் ஸ்ரீராமராகவும் அவதரித்து அந்த யுக அசுரர்களான சிங்கமுகா சூரன், சூரபத்மன், இரணியன், இராவணன் என்ற அசுரர்களையும் அழித்தார். துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்து அந்த யுக அசுரர்களான துரியோதனனையும், தக்கனையும் வதைத்து பாண்டவர்களுக்கு குருநாடு பட்டமுஞ் சூட்டி அரசாள வைத்து தர்மத்தை நிலை நாட்டினார். குரோணியின் ஒவ்வொரு துண்டமானதும் அசுரர்களாக பிறந்து அழிக்கப்படும் போது நாராயணர் புத்திமதி அருள அதை அவன் கேட்க மறுக்கவே இறுதியாக தன்னால் பிறந்து தன்னால் அழிவாய் எனக் கூறியிருந்தார். பின்னர் குரோணியானவன் கலியனாக வருவானென அறிந்து கானக வழிநடந்து பஞ்சவர்களுடைய பாரப்பெலன்களையும் வாங்கி, தன்னை சுமந்திருந்த பாசமாயக் கூட்டைப் பர்வதாமலை யுச்சியிலே கிடத்திவிட்டு கயிலையங்கிரி செல்லும் வழியில் கங்கையுங் கண்டு கங்கையிலே குளித்த கன்னிமார் பெண்களுடைய கற்பையுஞ் சோதித்து, ஏழுலோகம் புகுந்து ஏழு வித்துமெடுத்து இருதய கமலத்திலே இருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி, ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங் கொடுத்துத் தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப் பத்திரகாளியிடத்தில் பாலரையுங் கொடுத்து, ஸ்ரீரங்கம் போய் செகமறியும்படி பள்ளிகொண்டிருந்தார்.

அய்யா கலியுகத்தில் அவதரித்தல்:

இந்நேரம் தேவர்களின் வாக்கினால் ஈசுரர் தாமே குரோணியின் கடைசி துண்டமான ஆறாவது துண்டமதை கலியானாக பிறவிச் செய்ய கலியுகம் பிறக்கிறது. முந்தைய யுகத்தில் துரியோதனாக பிறந்த குரோணியானவன் இவ்யுகத்தில் கலியனாக பிறக்கிறான். நீசக் கலியனானவன் பரம்பொருள் சிவபெருமானிடம் இப்பூலோகத்தை அரசாளும் வரங்களையும், நீதி மாயன் சக்கரமும், பல்வித சாத்திர வித்தைகளும், மரணம் வரா வித்தைகளும் பெற்று வரும் போது, ஸ்ரீரங்கரான நாராயணர் ஆண்டிவுரு எடுத்து, தலை விரித்துக் கந்தைகலை பூண்டு எவ்வித ஆயிதமும் இல்லாமல் நீசனிடம் சென்று - "நீ ஈசரிடம் பெற்ற வரங்களிலே, இந்த தேச இரப்பனுக்கு சிறுக ஈயு. தராதே போனால் சண்டைக்கு வா?” என்றார். உடனே புத்தியில்லா நீசன், “இப்போது நான் உன்னோடு சண்டையிட்டால் பெண்டாட்டிச் சிரிப்பாள்!" ஆகவே "பண்டாரமென்றும் பரதேசியானவரைத் தண்டரளக் கந்தைத் தலை விரித்த ஆண்டிகளை அட்டியது செய்யேன், அவரோடு சண்டையிடேன் அவர்களிடம் மோதி வம்பு ஒருநாளும் செய்வதில்லை” என்றான். உடனே நாராயணர் நன்று, இப்படியே அட்டி செய்ய மாட்டேனென்று "ஆணையிட்டு தா" என்றார். அதற்க்கு கலிநீசனும் அப்படியே "ஆண்டிகளை இடறு செய்யேன்! மீறி இடறு செய்து ஆண்டிகளை சில்லமிட்டால், வீணே போகும் என் வரங்கள்" என்று ஆணையிட்டான். இக்காரணங்களால் தான் கலிநீசனுக்கு கொடுத்த வரங்களைப் பறிக்க நாராயணர் கலியுகத்தில் "நாராயண பண்டாரமாக" அவதரித்ததாக அகிலத்திரட்டு கூறுகிறது.

கலிநீசனானவன் இப்புவியில் வந்தவுடன் நல்லவை யாவும் மறைந்தன. இக்கலிநீசனானவன் கர்மக் கலிதோசத்தால் அன்புடன் ஒற்றுமையாக வாழ்ந்திருந்த நற்பல குலமக்களை பல சாதிகளாக பிரித்து, சாதிவாரியான கிளர்ச்சியை உண்டுபண்ணி தூறுபட வேலை வாங்கி, கடும்சுமையான வரிகளை வாங்கி மக்களை அரசாண்டான். அதாவது தாலி முதல் பீலி வரை வரி வைத்து கொடுமை செய்தான்.

இக்கொடுமைகளிலிருந்து நல் மக்களை இரட்சித்துக் காக்க, மக்களின் அபயத்திரங்கிய நாராயணர், இந்நீசக்கலியனுக்கு கொடுத்த வரங்களைப் பறித்து கலிநீசன்தனை அழிக்க, தர்மம் தனை வளர்க்க, மேலுக ஏழுலோகத்தார்களையும் சான்றோர்களாக இக்கலியுகத்தில் பிறவிச் செய்து, பின்னர் தானும் வியாச முனிவர் வகுத்த ஆதி ஆகமத்தின் படியே கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ஆம் தியதி (1st March C.1833) வெள்ளிக்கிழமை இவ்வுலக மக்களின் மேன்மைக்காக பத்தாவது அவதாரமாக திருச்செந்தூர் கடலில் மகரமதில் அரூபமாய் வால ராமசந்திர சூரிய நாராயணர் தானே வைகுண்டராய் அன்னை மகாலெட்சுமிக்கு மகனாக தோன்றி நாராயண பண்டாரமாக அவதரித்தார்.

"பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து மாயோன் வீன்றிய கலியன் வந்த விசனத்தால் கயிலையேகி சான்றவர் தமக்கா யிந்தத் தரணியில் வந்த ஞாயம் ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை எழுதலுற்றேன்"
"ஆண்டாயிரத்து எட்டு மாசி மாதத்திலே, கடலின் கரையாண்டி ஸ்ரீமந்நாராயணராகிய நானே பண்டாரமாகத் தோன்றி தெட்சணாப்புரியில் கூடி தர்மமுற்று வைகுண்டராக பள்ளி கொண்டோம்"

"திருமொழி சீதையாட்க்கு ஜெகதலம் புகழ எங்கும், ஒரு பிள்ளையுருவாய்த் தோன்றி யுகபர சோதனை பார்த்து திருமுடி சூடிதர்ம சீமையில் செங்கோல் ஏந்தி ஒருமொழி அதற்குள் ஆண்ட உவமையை உரைக்கலுற்றார்" - அகிலத்திரட்டு

வைகுண்டராக அவதரித்த நாராயணர் திருச்செந்தூரில் கடலில் இருந்து கடற்கரைக்கு வந்து தருவைக்கரையில் பண்டாரமாக மனுச் சொருபம் எடுத்தார். நாராயண பண்டாரமாக மானிடர்களுக்கு காட்சி அளித்த மாயன் கந்தைக்காவி உடையும், கையதிலே மாத்திரைக் கோலும், கமுக்கூட்டிலே பிரம்பும், நெற்றியில் வெள்ளை நாமமும், உச்சியிலே கொண்டையிட்டு உத்திராட்ச மாலை சுத்தி, தலையில் தலைப்பாகையும் அணிந்து வைகுண்டர் என்ற பெயரோடு சுவாமி தோப்பை நோக்கி வந்தார். பின்பு ஆறு ஆண்டுகள் மக்களின் மேன்மைக்காகவும், கலியன்தனை அழிப்பதற்காகவும் சிவனை நோக்கி தவம் இருந்தார். அங்கே ஒரு பண்டாரம் போல் இருந்து கொண்டு பதினெட்டு சாதி மக்களையும் ஒருதலத்தில் வருத்தி, தர்மமாய்த் தாரணி யாபேர்க்கும் சஞ்சல நோய்பிணி தண்ணீரால் தீர்த்தார். சந்ததியில்லாத பேர்க்கு சந்ததி கொடுத்தார். தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுத்தார். தீண்டாமை என்னும் இனவெறியால் பாதிக்கப்பட்டோருக்கும், அவர் அவர் தம் குறை அறிந்து அவர்களுக்கு வேண்டியவற்றை அருள் பாலித்தார். ஆண்டவர் வைகுண்டரின் அருளினால் குருடர்கள் பார்வை பெற்றனர், ஊமைகள் பேசினர், செவிடுகள் கேட்கப் பெற்றனர், முடவர்கள் நடந்தனர், பிள்ளை வரம் வேண்டி வந்தவர்கள் பிள்ளைபேறு பெற்றனர். இப்படி எண்ணடங்கா அற்புதங்களை செய்த மண்ணளந்த மாயன் வைகுண்டருக்கு ஐந்து சீடர்கள் இருந்தனர். இவர்கள் முந்தைய துவாபரயுகத்தில் பஞ்சபாண்டவர்கள் என்றழைக்கப்பட்ட பஞ்சவர்கள். இக்கலியுகத்தில் ஐந்துபேரும் சீடர்களாய் பிறப்பெடுத்தனர். இவர்களில் ஐந்தாவது சீடரான அரிகோபாலனால் எழுதப்பட்டதே அகிலத்திரட்டு எனும் புனித ஆகமம் ஆகும்.
உலகளந்த ஆண்டவராகிய வைகுண்டரின் அருள் பிரதாபங்கள் அவனி எங்கும் பரவிற்று. சாதி, சமய பேதங்களை கடந்து சாரைசாரையாக மக்கள் சுவாமிதோப்பை நோக்கி வந்தனர். வந்த மக்களுக்கு "மானிடரே! தர்மம் வைகுண்டம், தான் பிறந்தேன் இப்போது" என்று சொல்லி தர்மம் நினைத்து உலகம் பதினாலும் அறிய தர்மம் போதித்தார். "இன்றுமுதல் எல்லோரும் 'இகபரா தஞ்சமென்று' ஒன்றுபோல் எல்லோரும் ஒருபுத்தியாய் இருங்கோ, காணிக்கை இடாதுங்கோ, ஆணுடன் பெண்ணும் கூடி ஆசாரம் செய்திடுங்கோ, மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ, வைகுண்டருக்கே பதறி வாழுவது அல்லாமல், பொய் கொண்ட மற்றோர்க்குப் புத்தி அயர்ந்து அஞ்சாதுங்கோ!" என்ற உபதேசங்களை கூறி மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார். மக்களறிய தர்மமிதை கூறிய எம்பெருமாள், துரிதமுடனே தொல்புவியில் வாழுகின்ற பட்சிபறவைகளுக்கும், பலசீவ செந்துகட்கும் தர்மம் போதித்தார். ஒடுக்கப்பட்ட ஆடவர்கள் முழங்காலுக்கு கீழ் வேட்டி கட்டக் கூடாது, அங்க வஸ்திரம், தலைப்பாகை அணியக் கூடாது என்று அரசாங்க சட்டம் இருந்த அந்த கால கட்டத்தில் தலைப்பாகை அணிந்து தான் என்னை வழிபட வேண்டும் என்றும், பெண்கள் தோள் சீலை அச்சம் இன்றி அணிய வேண்டும் என்றும், மனோத்ததுவ ரீதயாக புத்தி போதித்து தம் மக்களை தலை நிமிர்ந்து நிற்க செய்தார். தீண்டாமை என்னும் தீயசக்தியை ஒழிக்க திருமண்ணை எடுத்து தம் பக்தர்களின் நெற்றியில் தொட்டு நாமம் சாற்றினார். உங்களுக்கு தெரிந்த மொழியில் என்னை போற்றி நீங்களே பணிவிடை செய்யுங்கள் என்று காலை, மாலை இருவேளையும் உகப்படிப்பையும், மதியம் உச்சிப்படிப்பையும் தம் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வழிபடச் செய்தார். எளியோர், வலியோர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் சமமாக அமர்த்தி அன்னம் கொடுத்து "சமபந்தி போஜனம்" நடத்தினார். சாதிக்கொரு கிணறு என்றிருந்த காலத்தில், எல்லோரும் ஒரே கிணற்று நீரை குளிக்கவும், குடிக்கவும் செய்தார். சமத்துவ கூட்டு வழிபாட்டு முறையை உருவாக்கி கொடுத்து "தர்மம் பெரிது தாங்கி இருங்கோ மக்காள், தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" என்று தர்ம நெறிகளை போதித்தார்.

"மானமாக வாழ்ந்தால் மாளும் கலி தன்னாலே"

என்று கூறி மக்களுக்கு தன்மான உணர்வுகளை ஊட்டினார். வரும் தர்மயுகத்தில் "தர்மம் கொடுக்கிற பேர்கள் உண்டு, வாங்குகிற பேர்கள் இல்லை" என்ற நிலை வரும் எனவும், தர்ம யுகத்தை நீங்கள் எல்லோரும் அடைய வேண்டுமானால் தான் படைத்த எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தி அரவணைத்து வாழவேண்டும் எனவும், ஆடு, கிடாய், கோழி போன்றவற்றை பலி இட்டு இறைவனை வணங்கும் நம்பிக்கைகளை முற்றிலும் நீங்கள் துறக்கவேண்டும் என்று இறைவழி பாட்டிற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினார். இதனால் சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை, தர்மம் வளர்ந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றனர்.

வைகுண்ட சுவாமியின் உபதேசங்களாலும், ஆசிர்வாதத்தினாலும், வழிகாட்டல்களாலும் பல சாதி மக்களும் பயன் அடைந்தனர். இந்நிலை கலி வயப்பட்டோரின் கண்களை உறுத்தியது. தர்மத்தின் வளர்ச்சி மற்றும் பிரபலத்தால் சுவாமி தோப்பில் "சமதர்ம சாம்ராஜ்யம்" ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறதே என்று மனம் தவித்தவர்கள், திருவாங்கூர் மன்னனிடம் புகார் செய்தார்கள். இதைக் கேட்ட மன்னன், ஏதோ ஒரு சூட்சம் தெரிகிறது என சாஸ்திரியை வருத்தி ஆருடம் கேட்க, அதற்க்கு சாஸ்திரியும் "அரசே! கர்மக் கலிதோசம் மண்டலம் ஏழும் சுற்றிப் பரந்தது, அதனால் கர்த்தர் அரிநாராயணர் கடிய கோபம் கொண்டு பூமியிலே வந்து பிறக்கிறார். கலி தோசத்தைத் தர்மத்தாலே அழித்து நற்பூமி ஆக்குகிறார். நாடெங்கும் சொல்லொன்றுக்குள் ஆள நாராயணர் மனுவாய் பிறந்து வைகுண்டம் என்று சொல்லி வருகிறார். நல்லோரை எல்லாம் நாடி மிக எடுத்து வரங்கள் கொ டுத்து ஆள வருகிறார், அவர் வரும் நாளிதுதான்" என்று சாஸ்திரியும் சாஸ்திரத்தைப் பார்த்து உரைத்தான்.

அதற்க்கு குறோணிதன் கொடியால் வந்த நீசனான சுவாதி திருநாள் மன்னன் "ஸ்ரீமன் நாராயணர் பிறக்க வேண்டுமென்றால் எப்படி தாழ்த்தப்பட்ட சாணார் குலத்தில் அவதரிக்க முடியும்?" என நினைத்து தனது சாவினை அறியாது சாடி படை ஏவி வைகுண்டரைப் பிடிக்க எண்ணினான். அப்போது யாதவ குலத்தில் பிறந்த கோனாரான பூவண்டர் குறிக்கிட்டு, அரசே! "ஆதிநாதன் எதையும் இழிகுலமென பார்க்கவே மாட்டார். அழிவது கலியுகத்தாச்சு என்றால் திட்டமாக வருவார்". இருமூன்று யுகங்கள்தன்னில் ஒப்புடன் மனுப்போல் தோன்றி, உவமைகள் பலதும் செய்துள்ளார். சாணெனக் குலத்தில் மாயன் சார்வாரோ? என்றென்ன வேண்டாம். பாணனாய் தோன்றி நிற்பார்; பறையனாய் தோன்றி நிற்பார்; தூணிலும் தோன்றி நிற்பார்; தோலனாய் தோன்றி நிற்பார்; ஆணெனவும் தோன்றி நிற்பார்; அவருரு கேட்டறியவில்லையோ! நாராயணர் குசவனின் குலத்தில் வந்தார், குறவனின் குலத்தில் வந்தார், மசவெனக் குலத்தில் வந்தார், மாடெனக் குலத்தில் வந்தார், விசுவெனக் குலத்தில் வந்தார், வேடெனக் குலத்தில் வந்தார், அசுவெனும் குலத்திலும் அவதரித்துள்ளார்; அவர் உரு கேட்டதில்லையோ! எவ்விடமும் தானாய் மேவி இருப்பவர்க்கு எந்த சாதி? எவ்விடமும் ஆகாதென்று அவர் தள்ளமாட்டார். செம்மை ஆக்குவோன் சூட்சத்தை சொல்லி முடியாதையா! என்று புத்திமதி கூறினார். பூவண்டரின் அறிவுரையை கேட்க மறுத்த நீசன், "நன்கு கற்ற மேல்குலம் அதிலே மாயன் நற்குணமாகப் பிறக்காமல், சிறுகுலம் புக்குவாரோ? என நினைத்து வைகுண்டரை சிறை பிடித்து திருவனந்தப்புரத்தில் அமைந்துள்ள சிங்காரத்தோப்பு சிறையில் வைத்து கொடுமைகள் செய்தான். சாராயத்தில் விஷத்தைக் கலந்து குடிக்கக் கொடுத்தான். சுண்ணாம்பு காள வாயில் வைத்து நீற்றினான். விறகுகளை அடுக்கி கொளுத்தி நெருப்பாக்கி அந்த நெருப்பிலே நடந்துவர செய்தான்.

வைகுண்டரை விஷமோ ஒன்றும் செய்யவில்லை. நெருப்பின் கொடிய நாக்குகள் அந்த நெடியோனை தீண்டவில்லை. இது கண்டு மிரண்ட மன்னன் இறுதியாக காட்டுப் புலியை பிடித்து வந்து மூன்று நாள் பட்டினிபோட்டு புலியை அடைத்து வைத்திருந்த கூண்டிற்குள் புலிக்கு இரையாக்க வைகுண்டரை தள்ளினான். பசித்த புலியோ இவ்வுலகைப் படைத்த இறைவனைக் கண்டதும் அந்த பரம்பொருளின் பாதார விந்தங்களை வணங்கி நின்றது. இந்நேரம் தன் மீது ஏவப்படும் கொடுமைகளைப் பார்த்து கலங்கிக் கொண்டிருந்த நல்மக்களைப் பார்த்து வைகுண்டர் கூறுவார்.

"நாட்டுக் கரிவிதிநான் நாராயணனும் நான், பட்சி பறவை பலசீவ செந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவண்ண நாதனும் நான், மண்ணேழளந்த மாயப் பெருமாள் நான், விண்ணேழளந்த விஷ்ணு திருவுளம்நான், ஏகம் படைத்தவன் நான், எங்கும் நிறைந்தவன் நான், ஆகப்பொருள் மூன்றும் அடக்கமொன் றானதினால் நாதக் கடல்துயின்ற நாகமணி நானல்லவோ, சீவசெந்துக் கெல்லாம் சீவனும் நானல்லவோ, இந்நீசரெல்லாம் என்னை அறியாவிடினும், இந்நிலத்தில் நான் படைத்த மிருகமறியாதோ..?" கலங்க வேண்டாம் கண்ணுமக்காள் சான்றோர்களே என்றார். இந்த அற்புதங்களைக் கண்டதும், இந் நிகழ்வுகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மன்னனும், மன்னனின் படைகளும் இவர் மனிதனே அல்ல, இவரே இந்த கலியுகத்தை முடிக்கும் பூரண இறை அவதாரம் என உணர்ந்தனர். உடனே உலகளந்த மாயனாகிய வைகுண்டரை 110 நாட்களாக கொடுக்கப்பட்ட சிறை தண்டனையிலிருந்து கொல்லம் ஆண்டு 1014 பங்குனி மாதம் 14-ஆம் தியதி (26th March C.1839) செவ்வாய்கிழமை விடுதலை செய்தனர். இவ் இகனைகளின் மூலம் பண்டாரத்தை சீண்டியதால் கலிநீசனின் வரங்கள் பறிக்கப்பட உள்ளதாக அகிலத்திரட்டு கூறுகிறது.

சோதனைகளை எல்லாம் வென்று மீண்டும் சுவாமி தோப்பிற்கு வர நினைத்த வைகுண்டர், உலகில் பலபெயர்களில் காவல் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பஞ்சதேவர்களை மனதில் நினைத்தார். உடனே பஞ்சத் தேவர்களான கருடன், சிமிழன், கத்திக்காரன், சிப்பாயி, முரடன் எனும் ஐந்து பேரும் வைகுண்டரிடம் வந்து சேர்ந்தனர். உடனே மண்ணளந்த மாயனாகிய வைகுண்டர் ஐந்துபேருக்கும் நல்வரமும் கொடுத்து தன்னுடன் ஏற்றுக்கொண்டார். இவர்கள் அன்றுமுதல் "சிவாய்மார்கள்" என்றழைக்கப்படுகின்றனர். சான்றோர்கள், சிவாய்மார், மற்றும் சீடர்கள் சூழ தெட்சணம் வந்த வைகுண்டர் தம் மக்களை தவவலிமை மிக்கவர்களாக்க எண்ணி பல நூறு குடும்பத்தார்களை துவையல் தவசு செய்யச் செய்தார். "தாணுமாலயனும் நானே, ஒரடியால் உலகளந்த உண்மைகளையும், பத்தவதாரம் பிறந்த பாதைகளையும் சொல் மகனே" என சீடர்களுக்கும், திருத்தொண்டர்களுக்கும் உத்தரவு பிறப்பித்து இவர்களின் மூலம் ஊர், ஊராக தம் வழிபாட்டு ஆலயங்களை ஏற்படச்செய்தார். அப்போது மாயவனார் ஆனந்தமே பெருகி நித்த திருநாள் இகனைதனை தம் "பதி"களில் நடத்தலுற்றார். தாணுமாலயனாகிய நாராயணர் "சிவநாரயணராக" இருந்து உலகில் உள்ள அனைத்து தெய்வசக்திகளையும் திருக்கல்யாண இகனை மூலம் தன்னில் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இனி இக்கலியுகத்தை அழித்து, தர்மயுகம் என்னும் புது யுகத்தை வருத்தி கலிநீசனின் வரங்களைப் பறித்து ஏழு யுகக்கணக்கையும் கேட்டு நடுத்தீர்ப்புச் செய்து ஆகாத பேர்களையெல்லாம் அழித்து நரகத்தில் தள்ளி நரக வாசலை அடைத்து விட்டு, நல்லோர்களை எழுப்பி நாலு வரமும் கொடுத்து சாகாத வாழ்வளித்து, தர்மமாகத் தரணியோர் குடைக்குள் ஆள சகலரும் புகழவரும் தர்மராசாவாக, சங்கவிருதுக் கொடி ஒத்தக் கொடி கட்டி பதினாலு லோகமுமறிய அசையா மணியொன்று கட்டி துவாரகையில் மக்களை எல்லாரையும் வைத்து துவரயம் பதி இருந்து அரசு பாவிக்க தாம் வருவதாகவும், அதற்குண்டான காலத்தையும் தீர்க்கதரிசனமாக அருளினார். இவ்வாறு மக்களை இரட்சிக்க பண்டாரமாக அவதரித்த நாராயணர் காெல்லம் ஆண்டு 1026 வைகாசி மாதம் 21-ஆம் தியதி (2nd June C.1851) திங்கள் கிழமை பூச நட்சத்திரத்தில் பகல் பன்னிரண்டு மணிக்கு வைகுண்ட லோகம் சென்றதாக அகிலத்திரட்டு கூறுகிறது.

ஈசன் மொழிந்த முன்மொழிபடியே இனி இக்கலியுகம் முடியும் தருவாயில் நம்மை வாழவைக்க சிவனும் உமையாளும், நாராயணரும் லெட்சுமியும், நான்முகனும் சரசுபதியும், வேத நல்மறையோரும் ஆகமத்தின் தன்மை அதன் படியே கலியுகத்தில் தோன்ற போகின்றனர். இக்கலியில் குதித்தவர்களுக்கு கொடுத்த கணக்கின்படி கலியுகத்தை அழிக்க வானமது குழவியாகவும், மண்பூமி அம்மியாகவும், தானமது நிரப்பாய் தன்னால் இருந்திடவும். உண்டான தெல்லாம் உடன் கரிந்து போயிடவும், அண்டர் உலகம் வரை அசைந்து முழிக்க போகிறது.

நாராயணர் புதுயுகத்திற்கான வழிகளை நினைக்கப் போகிறார். அப்போது புதுப்பூமி, புதுநிலவு, புதுவானம், புதுவாய்வு, புதுமையான தங்க பொன்பதியும் தோன்ற போகிறது. அய்யா நினைத்தப்படி வம்பரொல்லாம் மாள்வர், நல்லவர்கள் முழித்து வருவார்கள். ஆழிதனை வருத்தி சுத்தயுகத்தை சுற்றி வருத்துமென்று கர்த்தாதி கர்த்தன் விடை கொடுக்க கமலயுகம் சுத்திபண்ணியபின் கடலும் மிகப் பணிய போகிறது.

அப்போது நாராயணர் முன்பு குறோணியின் உயிரைக் கொண்டு வந்து நிறுத்தப்படும். அவனிடம் அய்யா நடுத்தீர்ப்பு கேட்டு "பாவி சொல்லடா உத்தரங்கள்? ஏழுபிறவி இதுவரையுஞ் செய்து உன்னை "வாழு நீ" என்று வரமருளிப் பார்த்தேன். இக்கலியில் நானும் இரப்பனை போல வந்திருந்து உலகறிய வெறிப்பேயையும் எரித்தேன். தண்ணீரால் மானிடர்க்கு சகல நோய் தீர்த்தேன். தருமம் புரிந்தவர்க்கு புண்ணியம் மிக அருளினேன். காணிக்கை, கைக்கூலி நிறுத்தல் செய்தேன். உறுதியாக யாவரையும் ஒருதலத்தில் விட்டு புத்தி சொன்னேன். இருபுத்தியாய் நீயும் பிடித்தடித்தாய், கட்டி என்னைப் பேயனெனக் கடுவிலங்கில் வைத்தாயே! ஆண்டியாய் நானிருந்ததால் உன்னை எதிர்க்கவில்லை யல்லவோ?
பண்டாரமாக பார் மீதில் அன்பரிடம், நன்றாக பிச்சை நான் வேண்டியே குடித்துத் தர்மமாய் அல்லவோ மக்களுக்கு நோய், பிணி தீர்த்தேன். நீ வர்மமாய் என்னை வந்தடிக்க ஞாயம் உண்டோ? அது அல்லாமல் முன்னே தன்னிடத்தில் இராட்சியத்தில் யாரொருவர் பண்டாரமென்று பாரறிய வந்தவரை அண்டேன்; அவரை அட்டி மிக செய்யேன். ஆண்டிகளுக்கு நானும் துன்பங்கள் செய்ததுண்டால் என் குடும்ப பந்துக்களோடு கட்டோடு அழிந்து போவேன். எங்களது பெண்ணோடே எல்லோரும் தன்னால் இறந்து சளநரகம் போயிடுவோம்" என்று நீ மொழிந்தாயே, இப்போது பண்டாரந்தன்னை வாழ விடாதபடி நீயும் அடித்ததின் ஞாயமென்ன? சொல்லடா? சொன்ன முறைப்படி நீ தான் நடந்தாயோ? பாவி நீ ஏழ்பிறவி பார் மீதில் தோன்றியதில் அவனியறிய அணுப்போலும் நன்மையது செய்ததுண்டோ? இரப்பனைப் போல் எளிய குலத்தில் வந்த என்னை, நீ செய்த அநியாயம் சொல்ல வென்றால் வையம் ஈரேழும் வழிந்து நிரம்பிடுமே!.

தன்னாலே தான் கெட்டுப் போவார்கள் என்றப்படி உன்னாலே நீயும் உயிரழிந்தாய் மாபாவி. மேலும் முந்தைய யுகத்தில், மேன்மையாய் உன்னை 'தன்னால் பிறந்து தன்னால் அழிவை' என்று சொன்னேன் நான். சொன்ன மொழிப்படியே நீ உதித்து, உற்ற கலியனென இந்நாள் வரைக்கும் பார்மீதில் இருந்தாய். உன் கர்மவயது காலம் சரியாகியதால் வர்மம் வந்து மூடி தன்னாலே மாண்டாய். முன் உனக்குத் தந்த அரசாளும் முடியும், என் சக்கரமும், உனக்கு தந்த வரங்களும், மிகத் தத்துவங்களும் எல்லாம் இப்போது எடுத்து வைத்துவிடு, பொல்லாதவனே நீ நரகம் புக்கிவிடு என்கிறார் நாராயணர். மாறி உரைக்க வாய் மொழிகள் இன்றி கலியன் அனைத்து வரங்களையும் வைக்கப் போகிறான். வரம் வைத்ததும் அவனை தீநரகில் புழுக்குளிக்குள்ளாக்கி தள்ளுவார்கள்.

அய்யாவின் ஆட்சி வரும் தர்மயுகத்தில்:

ஏகம் படைத்துக் காக்கும் நாராயணர் புதுயுகத்திற்கான வழிகளை நினைத்து ஒரு சங்கு ஊதுவார், வெற்றிச் சங்கு ஓசை எத்திசையும், ஈரேழு உலகும் மிகக் கேட்கும், நல்லோர்களான நல்லதை நாடும் மனுவோர்களும், நற்பூமிக்குரிய நல்விருச்சம், நல் மிருகம், ஊர்வனமும் கற்பு நெறியுயை பலவகையும் தோன்றப் போகிறது. எல்லாம் பச்சைமால் நாராயணரைக் கண்டு போற்றும், தர்ம வைகுண்டசுவாமி வந்தாரே என்கும். நன்னதிக பட்சிகளும், நல்வேதம், நீதங்கள் நாடுகினற சாத்திரம், சமுத்திரத்து நல்வகையும், கங்கை கண்ணாளும், கமலப் பூவாணியும், தர்மமதுவும் சுவாமி எனத் தொழுது போற்றும். நாராயணர் முழித்த மனுக்களுக்கு களிப்பான ஞான ஔி அருளி நாலுவரமும் கொடுப்பார். தர்மபுவியில் வயது பதினாறு என எல்லோரும் ஒரு இனமாய் வாழுங்கோ என்றும், பட்சி, பறவை பலசீவ செந்துகட்கும் அச்சமில்லாமல், புவியில் அல்லல் வினையில்லாமல் ஒத்துமிகக் கூடி, தர்ம வையகத்தை சார்ந்து வாழ்ந்திருங்கோ என்று விடை கொடுக்கப் போகிறார். இப்படியே யாமம் நிறைவேறி, முப்பத்திரண்டறத்தால் முகித்த சிங்க சிம்மாசனத்தில், செப்பொத்த மாணாக்கர் இருபுறமும் சேவிக்க, ஒப்பற்ற பொற்பதியான துவாரகா பதியின் உயர்ந்த சிங்காசனத்தில், மறுமன்னர் எதிரி வையகத்தில் இல்லாமல், வெற்றி வைகுண்டராசர் சிங்காசனம் மீதிருந்து தெய்வச் செங்கோல் நடத்தி பொங்கரமான புவிதர்ம இராட்சியத்தில் ஆதி ஆகமப்படியே ஆளுவார்.

"இருபத்து நாலில் ஒன்று ஏற்பதும் எங்கள் அய்யா வைகுண்டராசர் வந்து ஈரேழு உலகமெல்லாம் ஒரு குடைக்குள் அரசாள வருவதும் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகரா அரகரா" - அருள் நூல்
இக்கலியுகத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் எனப் பிரிந்து கிடந்த ஆன்மீக உலகில் சிவநாராயணமாக இருந்து அனைத்து தெய்வசக்திகளையும் திருக்கல்யாண இகனை மூலம் தனக்குள்ளடக்கி “அய்யா சிவசிவ சிவசிவ அரகரா அரகரா” என்ற அகண்ட நாம மந்திரத்தை உச்சரித்து வழிபடும் “ஒரே தெய்வ வழிபாட்டு” முறையை ஆண்டவர் உருவாக்கிக் கொடுத்தார். அன்புக்கொடி மக்களின் வழிபாட்டுமுறை சைவ, சித்தாந்திகளையும், நெற்றியில் ஒன்றை திருநாமம் இட்டு கொள்ளும் முறை வைணவர்களையும் கவர்ந்து ஈர்த்தது. எனவே இன்று உலகளந்த ஆண்டவனின் ஆலயங்களான "அய்யா" வழிபாட்டு ஆலயங்கள் உலகம் முழுவதும் வேராயிரம் பெற்ற விழுதுகளாய் படர்ந்து தோன்றி உள்ளது. சுவாமி விவேகானந்தர் தன் வாழ்நாளில் 1892 ம் ஆண்டு டிசம்பர் மாதம் கன்னியாகுமரிக்கு வருகைதந்த போது நாராயணரின் "வைகுண்டர்" அவதாரத்தை கேள்விப்பட்டு சுவாமிதோப்பு பதிக்கு வந்ததாகவும், அன்றிலிருந்து அவர் தன் தலையில் தலைப்பாகை அணியத் தொடங்கியதாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆகையால் நாம் ஆண்டவனின் வழி நடப்போம்; வாழ்வில் வெற்றிப் பெற்று தருமயுக வாழ்வை பெறுவோம்!


அய்யா உண்டு

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top