உக்ரம் நிறைந்த செவ்வரளி மலர்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து உக்ரம் நிறைந்த செவ்வரளி மலர் பற்றிய பதிவுகள் :

முதலில் இம்மலரை எவ்வேளையில் எந்தெந்த தெய்வங்களுக்கு பயன்படுத்தினால் சிறந்த பலனை பெறலம் என்பதை அறியுங்கள். 

ராகுகால பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தினால் அற்புத பலன்களை அடைய வைக்கும். அடுத்து செவ்வாய்க்கிழமையில் முருகருக்கும், சக்திக்கும்,
வீரபத்திரருக்கும் இம்மலரை அணிவித்து அனுகிரகம் பெறலாம்.

பஞ்சமி அஷ்டமி திதியில் வாராகி அம்மனுக்கு இம்மலரை பயன் படுத்தலாம் மிக நல்ல பலன் கிடைக்கும்.

பெருமாள், லட்சுமி, விநாயகர், சரஸ்வதி, சிவன், நந்தி இவர்களுக்கு இம்மலரை அணிவித்தல் கூடாது. 

உக்ரமலர் என்பதால் பார்த்து சூட்ட வேண்டும். நீங்கள் மாந்திரீக பயிற்சியில் ஒரு தேவதையின் அருளையாவது பெற்றிருந்தால் மட்டும் ஸ்ரீ விநாயக பெருமானுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் பயன்படுத்தலாம்.

ஸ்ரீ காளிகாம்பாளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் செவ்வரளி மலரை அணிவித்து பலன் பெறலாம் என்றாலும் மிகச்சிறந்த உடனடி பலனை பெற அமாவாசை, பௌர்ணமி, திங்கள் கிழமையில் இம்மலரை பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம்.

ஸ்ரீ துர்கை அம்மனுக்கு புதன், வியாழன், தவிர்த்து மற்ற அனைத்து ராகுகால வேளையிலும் இம்மலரை பயன்படுத்தலாம். எலுமிச்சை பழம் பலிகொடுத்த பின்னரே இம்மலரை பயன்படுத்த வேண்டும். 

கனியை திருஷ்டி கழித்த பின்னரோ அல்லது சூலத்தில் கனி சொருகிய பின்னரோ அல்லது எலுமிச்சை கனியை அறுத்து தீபம் ஏற்றிய பின்னரோ தான் இம்மலரை அம்மனுக்கு சூட வேண்டும்.

வீட்டில் இம்மலரை பயன்படுத்த வேண்டாம். காமாட்சி அம்மன் விளக்கிற்கும் இம்மலரை ராகுகால நேரம் தவிர்த்து மற்ற நேரத்தில் அணிவிக்க வேண்டாம்.

இந்த செவ்வரளி மலரை வீட்டில் பிரயோகித்தால் சூழ்ச்சியால் விரோதம் உண்டாகும், ஜனவசியம் குறையும், சோம்பல் அதிகமாகும்,
சுபநிகழ்வு தள்ளிபோகும், செல்வம் குறைய ஆரம்பிக்கும்.

நன்கு கவனத்தில் வையுங்கள். இம்மலர் பரிகாரத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய மலராகும். இம்மலரை நீங்கள் எந்த தெய்வத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தாலும் காரண காரியமின்றி பயன்படுத்தக்கூடாது. 

தோஷம் கழிக்கவோ, பகை தீரவோ, திருஷ்டி கழிக்கவோ, பிரச்சனை தீரவோ இது போன்று எதாவது பரிகாரமாக இருக்க வேண்டும். வழக்கு வம்புகள் தீரவும் இம்மலரை பயன்படுத்தலாம். அதுவும் முதலில் கூறிய தெய்வங்களுக்குத்தான் பயன்படுத்த வேண்டும்.

திருமணம், குழந்தை பிறப்பு, செல்வ சேர்ப்பு போன்ற சுபநிகழ்வுகளில் மற்றும் இது சம்மந்தமான பிராத்தனைக்கு இம்மலரை தனியாக பயன்படுத்தக்கூடாது. 

மல்லிகை மலருடன் இணைத்தே செவ்வரளியை பயன்படுத்த வேண்டும். சுபநிகழ்வு யாவற்றிற்கும் மல்லிகை மலரையே பயன்படுத்த வேண்டும்.

செவ்வரளி செடியை வீட்டினில் வளர்க்கக்கூடாது. வனத்தில் மட்டுமே இருக்க வேண்டிய செடியாகும். ஒதுக்குப்புறமான இடங்களில் வளர்க்க வேண்டிய செடியாகும். இச்செடியின் காற்று அடிக்கடி நம்மேல் பட்டால் செல்வ செழிப்பை இழக்க ஆரம்பிப்போம் கவனம்.

பந்தங்களில் பிரிவை உண்டாக்கும் தன்மை செவ்வரளிக்கு உண்டு. உறவுகள் என்றாலோ அக்கம் பக்கத்துக்காரரோ நம்மோடு சிறுசிறு மனஸ்தாபத்தோடு இருப்பது இயல்பு. அவ்வாறு உள்ளவர்கள் நாளடைவில் நட்பாக மாறுவது இயல்பு. நல்லவர் பகைவராவதும், பகைவன் நட்பாவதும் இயல்பு. 

இவ்வாறு இருக்கையில் செவ்வரளி செடியின் வாசத்தை முகரக்கூடியவர் யாரோ அவரின்மேல் மனஸ்தாபத்தோடும் வெறுப்போடும் உள்ளவர்களை நிரந்தரமாக விலக்கும் அல்லது எதிரியை கோழையாகவும் ஆக்கும் வல்லமை இந்த செவ்வரளிக்கு உண்டு. இதை அறிந்த சித்தர்கள் இதை வனத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று எச்சரித்து அன்றைய மக்களுக்கு அறிவுறுத்தினர்.

பலரும் இந்த செவ்வரளி மலரின் வாசம் முகரும்போது ஒருவரை ஒருவர் உதாசினம் செய்து போட்டியிட்டு வாழ்வர். எனவே இந்த செவ்வரளி மூலிகை விரோதியை அழிக்க துர்கை அம்மனுக்கு ராகுகால நேரத்தில் மலர் சூட்டினால் வெற்றி கொள்ளலாம் என்ற நுணுக்கத்தை சித்தர்கள் மக்களுக்கு வழி காண்பித்து சென்றனர்.

20 ஆண்டுகள் முன்புவரை செவ்வரளியை மக்கள் இடுகாடு மற்றும் ஒதுக்குப்புறமான காடுகளில் மட்டுமே வளர்த்து வந்தனர். இந்த செடியை வளர்ப்பவர் ஒரு பரம்பரை வைத்தியனோ அல்லது மாந்திரீகனாகவோ தான் இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஆன்மிக வளர்ச்சி இதை சரிவர ஆராயாமல் ஒதுங்கியிருந்த செடியை ஊர் முழுவதும் நட்டு உறவை பலகீனப்படுத்திக் கொண்டார்கள். 

போட்டி, பொறாமையும் பெருத்துவிட்டது. குணகேடும் அதிகமாகிவிட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த செவ்வரளி சுடுகாடு பகுதியில் தான் அதிகம் இருக்கும். சிறுவர்களை தொடக்கூட அனுமதிக்க மாட்டார்கள். இதனருகில் போகக்கூட அச்சப்படுவார்கள். எட்டி,
குவளை, செவ்வரளி, கள்ளி, கற்றாழை, சொர்ணபத்ரி (தங்கஅரளி) போன்ற மூலிகைகள் வைத்தியத்திற்கம் மாந்திரீகத்திற்கும் பெரிதும் உதவியது. 

ஆனால் பதம் பார்த்து பயன்கொள்ளாவிடில் பாதிப்பை உண்டாக்கும். குறிப்பாக மனநிலையில் மாற்றம் உண்டாக்கும். எனவே அக்காலம் முதலே தகுந்த ஆலோசனை இல்லாமல் இந்த செவ்வரளியை பயன்படுத்தமாட்டார்கள்.
ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு வகையான மலர் என ரகம் பிரித்து பயன்படுத்தினர். 

எனவே மெய்யன்பர்களே துஷ்ட நிவாரணத்திற்கு ஒரு மலர், சுபத்திற்கு ஒரு மலர், பொதுவான காரியத்திற்கு ஒரு மலர், தெய்வ தேவதைகளுக்கு பிடித்தமான மலர், ஒவ்வொரு வகையான செயல்களுக்கேற்ற மலர் என அறிந்து பயன்படுத்த வேண்டும். 

இதை அறியாமல் எல்லோரும் சொல்கிறார்கள் நானும் செய்கிறேன் என அறியாமல் செய்தாலும் எதிர்விளைவுகள் நிச்சயம் உண்டு. எனவே கவனம். அக்காலத்திலேயே நம் முன்னோர்கள் பலதையும் ஒதுக்குப்புறமாகவே வைத்திருந்தனர் எல்லாம் காரணமாகத்தான் என்பதை அறிக.

மனிபுரக சக்கரத்தை வலுகுன்ற வைக்கும் ஆற்றல் இந்த மலருக்கு உண்டு. எனவே சக்தி ஈர்ப்பு உபகரணங்களை அணிந்து மட்டுமே இம் மலரையோ செடியையோ பயன் கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top