கணபதி ஹோமத்தின் சிறப்பு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கணபதி ஹோமத்தின் சிறப்பு பற்றிய பதிவுகள் :

ஹோமங்களில் பல வகை உண்டு. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு பலன் இருக்கிறது. பொதுவாக ஹோமங்களை விளை நிலங்களில் நடத்துவது நன்மை தரும்.

வினைகளை தீர்க்கக் கூடியவர் விநாயகர். விநாயகர் உருவமற்றவர். மஞ்சளைப் பிடித்து வைத்து கூட விநாயகராக வணங்கலாம். பழங்காலத்தில் பசும் சாணத்தை விநாயகராகப் பிடித்து வழிபட்டுள்ளனர். பசுவின் சாணத்தை தேவப்பிரசாதம் என்று பழைய நூல்கள் கூறுகின்றன.

நிலத்தில் படாமல் புல், செடி கொடிகளின் மேல் விழும் காராம்பசுவின் சாணத்தை பஸ்பமாக்கி, அதனை நெற்றியில் விபூதி போல் பூசினால் அது நோய்களைத் தீர்க்கும் மருந்தாக விளங்கும் எனக் கூறப்படுகிறது.

எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபதி ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி நன்மையை பெறலாம். ஒரு கடிதம் எழுதும்போதும் கூட பிள்ளையார்சுழியுடன் துவங்குவது மரபு.

விநாயகரே முழு முதற்கடவுள். சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும்கூட கணபதியை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்கவேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டது.

கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஓதி, அவரை புகழ்ந்து பக்திப்பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும்.

நம் வீடுகளில் நடக்கும் காதணி விழா, பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் நடக்கும் பவள விழா, முத்துவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top