தீராத கடனை தீர்க்கும் கரிநாள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீராத கடனை தீர்க்கும் கரிநாள் பற்றிய பதிவுகள் :

கரி நாளைப் பற்றி அறிந்து கொள்ள முதலில் திதி, நட்சத்திரம் தொடர்பான கணக்கு பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

சந்திரனை வைத்து சந்திராஷ்டமம் எப்படி கணிக்கப்படுகிறதோ அதே போல சூரியனை அடிப்படையாக வைத்து கரிநாள் கணிக்கப்படுகிறது.

சந்திராஷ்டம நாளில் நல்ல காரியங்கள் செய்வதில்லை, முக்கிய முடிவுகளை எடுப்பதில்லை. அதே போல் கரிநாளில் சுபகாரியங்கள் செய்வதில்லை.

மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுள் பரணி, கிருத்திகை, ஆயில்யம், பூரட்டாதி போன்ற சில நட்சத்திரங்களும், 15 திதிகளுள் அஷ்டமி, நவமி போன்ற சில திதிகளும், 7 கிழமைகளுள் செவ்வாய், சனி போன்ற சில கிழமைகளும் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கும், நீண்ட தூர பிரயாணம் செய்வது போன்றவற்றுக்கும் விலக்கப்பட வேண்டும், என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அதைப்போலவே, ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சில நாட்களில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இதையே கரிநாள் என்று கூறுகிறார்கள்.

கரிநாள் என்பது திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. 

கரிநாள் என்பது ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள் என்பதே. கரிநாள் என்றால் “நஞ்சு” என்று பொருள்படும்.

அன்றைய தேதியில் சூரியக் கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்.

சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலான அளவில் தூண்டப்படுகின்றன.

இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், டென்ஷன் ஆதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும்.

இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதை தவிர்த்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கரிநாள் வரும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் இந்த இந்த தேதிகள் கரிநாட்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்கள் உள்ள தமிழ் மாதத்தில் கரிநாட்கள் என்றைக்கு வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சித்திரை - 6, 15
வைகாசி - 7, 16, 17
ஆனி - 1, 6
ஆடி - 2, 10, 20
ஆவணி - 2, 9, 28
புரட்டாசி - 16, 29
ஐப்பசி - 6, 20
கார்த்திகை - 1, 10, 17
மார்கழி - 6, 9, 11
தை - 1, 2, 3, 11, 17
மாசி - 15, 16, 17
பங்குனி - 6, 15, 19

எந்த ஒரு தமிழ் ஆண்டுக்கும் இது பொருந்தும். ஆகவே, இக்கரிநாட்களில் திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம், நீண்ட தூர பிரயாணம் போன்றவற்றை செய்தாலோ அல்ல‍து தொடங்கினாலோ, அவை கெடுதலில் முடியும்.

ஆனால், பூஜைகள் ஹோமங்கள் பரிகாரங்கள் ஆகியவற்றை கரிநாட்களில் செய்யலாம். பொதுவாக கரி நாளன்று நல்ல காரியங்களைத் துவக்கினால் அது விருத்திக்கு வராது என்று கூறுவர்.

எனவே, விருத்திக்கு வரக் கூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை அன்று நடத்தலாம். உதாரணமாக கடனை அடைக்கும் பணியை மேற்கொள்ளலாம்.

ஏனென்றால் அன்றைக்கு கடனை அடைத்தால் மீண்டும் மீண்டும் கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top