சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி பற்றிய பதிவுகள் :

சிவபெருமான் விரதங்களில் மிக உயர்ந்த மற்றும் அதி உன்னதமான விரதம் இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் என்று பார்வதி தேவிக்கு எடுத்துக் கூறினார். பதினெட்டு புராணங்களும் இதையே கூறுகிறது. 

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

திருமங்கையாழ்வார் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியை 'வைகுண்ட ஏகாதசி" உற்சவமாக கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். 

ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். 

உடலாலும், உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உண்மையான உபவாசம் ஆகும். இத்தகைய பெருமைக்குரிய மார்கழி மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி என்று சொல்லப்படுகின்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. 

ஆண்டு முழுவதும் அடைத்து வைத்திருக்கும் கதவு வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும்தான் திறந்து வைக்கப்படும். சொர்க்கவாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் பெருகும்.

ஏகாதசி வரலாறு :

சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற முரன் அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள். 

இதனால் ஸ்ரீமகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. 

இதனால் சோர்வடைந்ததைப் போல ஸ்ரீமந் நாராயணன், ஒரு குகையில் நன்றாக உறங்கினார். அந்த குகையை கண்ட முரன் ஸ்ரீமந் நாராயணனை அழிக்க முற்பட்ட போது, அவர் உடலில் வியர்வையில் இருந்து ஒரு பெண் சக்தி தோன்றி, ஒரு ஹுங்காரம் செய்தாள் அசுரர்கள் சாம்பலாயினர் , அதாவது அசுரர்களிடம் சண்டையே இடாமல் அழித்தாள் தேவி.

தன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு அந்த தேவதை தன் உடலில் இருந்து வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து, அந்த தேவதை அசுரர்களை அழித்ததையும் தெரிந்து கொண்ட ஸ்ரீமஹாவிஷ்ணு, அதனை வாழ்த்தி, “ஏகாதசி” என்று பெயர் சூட்டினார்.

“நீ தோன்றிய இந்த நாளில், யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணை இரு. பக்தர்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் அருள வேண்டும்.” என்று ஆசி வழங்கி, பிறகு அந்த ஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக்கொண்டார் ஸ்ரீமந் நாராயணன்.

ஏகாதசி விரதத்தின் மகிமை

ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவம் குறையும் சங்கடங்கள் தீரும்.

விஷ்ணுபுராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் விரதமிருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அதன்படி, ருக்மாங்கதன் என்ற அரசர் ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி தெரிந்துக் கொண்டு, தனது நாட்டு மக்கள் யாவரும் பாவத்தில் இருந்து விடுபட்டு, புண்ணியம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏகாதசி விரதத்தை கட்டாயமாக மக்கள் அனைவரும் அனுசரிக்க வேண்டும் என்று அரசர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. 

ஏகாதசி விரதம் என்பது புண்ணியத்தை கொடுக்ககூடியது. புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று யாருக்கு விதி இருக்கிறதோ அவர்களே விரதத்தை கடைபிடிப்பார்கள். 

இயற்கைக்கு விரோதமாக நீ யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம்.” என்று தன் பக்தனான அரசர் ருக்மாங்கதனுக்கு சொன்னார் ஸ்ரீவிஷ்ணுபகவான்.
 
ஏகாதசி விரதத்தின் மகிமையால் நல்ல பலன் கிடைத்தது. நாடும், அந்நாட்டு மக்களும், அரசரும் சுபிக்ஷமாக வாழ்ந்தார்கள் என்று வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஏகாதசி விரதம் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

ஏகாதசி விரதத்தை எப்படி கடைபிடிப்பது?

ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று, மதிய உணவு முடித்து கொண்டு இரவு சாப்பிடாமல் இறைவனுடைய நாமத்தையும், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களையும், பகவானின் பாடல்களையும் பாட வேண்டும் ஸ்ரீமத் பாகவதம் ராமாயணம் தாசாவதாரம் இன்னும் சிறப்பான பலன்களை தரும்.

ஏகாதசி அன்று அதிகாலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று, சொர்க்கவாசல் வழியாக இறைவனை வணங்கி தரிசித்துவிட்டு, அன்று நாள் முழுவதும் இறைவனுடைய நாமத்தையும், பாடல்களையும், புராணங்களையும் படிக்க வேண்டும்.
 
மறுநாள் துவாதசி அன்று கோவிலுக்கு சென்று ஸ்ரீமந் நாராயணனை தரிசித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி இறைவனுக்கு நெல்லிக்காய், அகத்திகீரை போன்றவை சமைத்து படைத்து பூஜித்த பிறகு, ஒருவருக்காவது அன்னதானம் செய்த பிறகு சாப்பிட வேண்டும்.

விரதத்தை கடைபிடித்தவர்கள் நெல்லிக்காய், சுண்டக்காய், அகத்திகீரை போன்றவற்றை பல்லில் படாமல் சாப்பிடவேண்டும். உணவருந்தும் முன் பரமாத்மாவின் நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதனால் புண்ணியம் கிட்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் முன்னோர்களின் சாபமும் நீங்கிடும்.

சொர்க்கவாசல் உருவான வரலாறு :

விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள்.

இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் மஹாவிஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். 

ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.

“பகவானே, தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும்.” என்று பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள். 

தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர். “எம்பெருமானே, தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சா வதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். 

அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது.

எம்பெருமானுக்கு விரதம் இருந்து சொர்கவாசலை கடந்துசெல்வோருக்கு சொர்க்கலோக வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அனைத்து விஷ்ணுவின் ஆலயங்களிலும் ஏகாதசி விழா உற்சவம் சீரும் சிறப்புமாக நடைபெறும். இந்த கண்கொள்ளாக் காட்சியை நாம் கண்டு மகிழ்ந்தால் பொன்னும், பொருளும் சேரும். மேலும் செல்வாக்கு உயரும். பதினாறு பேறுகளுக்கும் சொந்தக்காரரான ஸ்ரீ மஹா விஷ்ணுவை 'பெருமாள்" என்று அழைக்கின்றோம். 

பெருமாளை வழிபட்டால் நமக்குப் பதினாறு விதமான பேறுகளும் வந்து சேரும் என்பதை அனுபவத்தில் காணலாம். வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன் தரும்.

மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி 'முக்கோடி ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்களுக்கு, மறுபிறப்பே இல்லை.

வைகுண்ட ஏகாதசி நன்னாளில், “ஓம் நமோ நாராயணாய” என்ற அஷ்டாக்ஷர மந்திரம் உச்சரித்து, ஸ்ரீ மத் பாகவத புராணம், ஸ்ரீமத் ராமாயணம் பாராயணம் செய்தால் பகவானின் திவ்ய நாமங்கள் கூறுவது திவ்ய ஷேத்திர தரிசனம் செய்து பாவங்கள் நீங்கி, 
முக்தி அடைய முடியும்.

மூல ராமோ விஜயதே ஹரி ஸர்வோத்தமா

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top