மாசி மஹாமகம் - 2024

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாசி மஹாமகம் பற்றிய பதிவுகள் :

உலகிலேயே அதிகமான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி, மத சடங்குகளில் ஈடுபடும் நிகழ்வுகளில் திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளாவும் ஒன்று. 

இங்கு மட்டும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளாவின் போது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் மாசி பெளர்ணமி நாளில் நடக்கும் கும்பமேளாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி புனித நீராடுகின்றனர்.

மாசி மாதத்தில் வரும் பெளர்ணமியை தென்னிந்தியாவில் மாசி மகம் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். பெளர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் நாளே மாசி மகம் எனப்படுகிறது. 

இந்த நாளில் மக்கள் புனித நீராட நீர்நிலைகளில் குவிவது உண்டு. தமிழகத்தில் கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளத்தில் நீராடுவார்கள். மாசி மகத்தன்று நாட்டில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளும் மகாமகம் குளத்தில் எழுந்தருளி, நீராடுவதாக ஐதீகம். 

இதனால் அந்த நாளில் மகாமகம் குளத்திலும், மற்ற நீர் நிலைகளிலும் நாமும் நீராடினால் நம்முடைய பாவங்கள் நீங்கி, விருப்பங்கள் நிறைவேறுவதாக நம்பிக்கை.

கும்பமேளா சிறப்புகள் :

தெற்கில் மகாமகம் நடைபெறுவதை போல், வடக்கில் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்னும் இடத்தில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் மாசி மாத பெளர்ணமி அன்று கும்பமேளா நடைபெறுவதுண்டு. 

இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் போது அதை மகாகும்பமேளா என கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள். மகாகும்பமேளாவின் போது திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது உண்டு. 

திரிவேணி சங்கமத்தில் நீராட காரணம் :

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் (ஒன்று சேரும்) இடம் என்பதால் இதற்கு திரிவேணி சங்கமம் என்ற பெயர் ஏற்பட்டது. 

மாசி மாதத்தில் பெளர்ணமி அன்று, தெய்வங்கள் மனிதர்களின் வடிவில் பூமிக்கு வந்து, பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடி, தங்களின் புனிதத் தன்மையை மீட்டெடுப்பதாக ஐதீகம். 

அதனால் தான் கங்கையில் நீராடி, தான தர்மங்கள் செய்து, இறைவழிபாட்டில் ஈடுபட்டால் நம்முடைய பாவங்களும் நீங்கி, நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுவதுடன், முக்தியையும் பெற முடியும் என புராணங்கள் சொல்கின்றன. 

அது மட்டுமல்ல வேதங்களின் படி, கருடன் பகவான் அமிர்த கலசத்தை சுமந்து கொண்டு பறந்து செல்லும் போது அதிலிருந்து நான்கு துளிகள் பூமியில் சிதறி, அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய நான்கு இடங்களில் விழுந்ததால், இந்த தலங்களில் மாசி பெளர்ணமி நாளில் நீராடினால் முக்தி கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

புனித நீராடும் மாதம் :

மகா மாதம் எனப்படும் மாசி மாதம் முழுவதுமே புனித நீராடுவதற்கு ஏற்ற காலமாகும். மாசி மாதம் முதல் நாள் துவங்கி, மாசி பெளர்ணமி வரை தினமும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள். 

மாசி பெளர்ணமி அன்று ஏழைகளுக்கு அன்னதானம், பசுதானம் உள்ளிட்ட தானங்கள் வழங்கி, ஹோமங்கள் செய்து வழிபடுவது பல மடங்கு அதிகமான பலனை தரும். 

மாசி மாதம் முழுவதும் தெய்வங்கள் அனைத்தும் பிரயாக்ராஜில் கங்கை கரையில் எழுந்தருளி, அங்கு வரும் பக்தர்களின் பாவங்களை நீக்கி, நன்மைகளையும், முக்தியை வழங்குவதாக ஐதீகம். அதன் காரணமாகவே கும்பமேளா நாளன்று திரிவேணி சங்கமத்தில் நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து குவிகிறார்கள்.

நீர்நிலைகளில் காத்திருக்கும் தெய்வங்கள் :

நீர்நிலைகளில் காத்திருக்கும் தெய்வங்கள் :
மாசி மாதத்தில் நடைபெறும் கும்பமேளாவை மகாமேளா என்றும் மக்கள் அழைப்பதுண்டு. இந்த நாளில் செய்யப்படும் புனித நீராடலுக்கு பர்வ ஸ்நானம் என்று பெயர். 

இந்த நாளில் சொர்க்கத்தில் இருந்து கந்தர்வர்களும், குரு பிரகஸ்பதியும் திரிவேணி சங்கமத்தில் எழுந்தருள்வதாகவும் நம்பிக்கை உள்ளதால் இந்த நாளில் குருவை மக்கள் வழிபடுகிறார்கள். 

இந்த நாளில் புனித நீராடுபவர்களின் துன்பங்கள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி விடும் என சொல்லப்படுகிறது. மாசி பெளர்ணமி நாளில் தெய்வங்களும் கூட நம்முடைய பாவங்களை வாங்கிக் கொண்டு, நமக்கு புண்ணிய பலன்களை தருவதற்காக நம்மை தேடி வந்து தானங்கள் கேட்க வருவதாக சொல்லப்படுகிறது. 

அதனால் தான் ஏழைகளின் மனம் குளிரும் வகையில் இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு வேண்டியவற்றை தானமாக வழங்குவது மிகவும் முக்கியமானது என சொல்லப்படுகிறது.

மாசி மகத்தன்று செய்ய வேண்டியவை :

* மாசி மகத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பாகவே புனித நீராடி, உதிக்கின்ற சூரியனை வழிபட வேண்டும்.

* புனித நீராடிய பிறகு சூரியனுக்கு நீர் படைத்து வழிபட்டு, நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும்.

* சிலர் தங்களின் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய தர்ப்பணம் உள்ளிட்டவைகள் செய்வது வழிபடுவது உண்டு. சிலர் எள்ளும், தண்ணீரும் இறைத்து முன்னோர்களை வழிபடுவதுண்டு.

* பிரச்சனைகள், பாவங்களில் இருந்து விடுபட வேண்டும் என நினைப்பவர்கள் மாசி மகத்தன்று தானியங்களையும், பழங்களையும் ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.

* முன்னோர்கள் மற்றும் தெய்வங்களின் ஆசிகளை பெறுவதற்கான வழிபாடுகளை செய்வதன் மூலம் மகிழ்ச்சி, செல்வ வளம், வளமான வீடு ஆகியவை அமைவதுடன் தொழில் மற்றும் வேலையில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top