முக்தி தரும் ஏழு நகரங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து முக்தி தரும் ஏழு நகரங்கள் பற்றிய பதிவுகள் :

முக்தி என்பது நமது தொன்ம நம்பிக்கையின்படி இறைவனை அடைவது அல்லது அவன் அருளை நீங்காமல் பெருவது என்று பொருள்.

அதன்படி இந்தியாவில் ஏழு புனித நகரங்கள் முக்தி தர வல்லவைகள் என சான்றோர்களால் வகைபடுத்தப்பட்டுள்ளது. புரி எனும் சமக்கிருத மொழிச் சொல்லிற்கு நகரம் என்று பொருள். இவை பொதுவாக சப்த மோட்ச புரிகள் என அழைக்கப்படுகின்றன.

இந்த ஏழு புனித நகரங்களில் உள்ள புனித நீரில் நீராடினாலேயே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

1. வாரணாசி
2. அயோத்தி
3. காஞ்சிபுரம்
4. மதுரா
5. துவாரகை
6. உஜ்ஜைன்
7. ஹரித்வார்

1. வாரணாசி :

வாரணாசி புனித நகரம், இது காசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் அமைந்துள்ள இது, கங்கைக் கரையில் அமைந்த பண்டைய புனித நகரம் ஆகும். 

இதனை பனாரஸ் என்றும் அழைப்பர். வாரணாசியில் அமைந்த ஜோதி சிவலிங்கம், பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும்.

பெயர்க்காரணம்

வருணா ஆறும் மற்றும் அசி ஆறும் இந்நகரில் பாயும் கங்கை ஆற்றில் கலப்பதால், இந்நகருக்கு வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது. இங்கு பாயும் புனித ஆறான கங்கையில் நீராடிவதால் அனைத்து பாவங்கள் நீங்கி மோட்சம் பெறுவர் என்பது நமது தொன்ம நம்பிக்கை.

2. அயோத்தி :

இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், பைசாபாத் மாவட்டத்தில் சரயு ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது.

ராமர் பிறந்த இடமான ராம ஜென்மபூமி இந்த அயோத்தியில் தான் அமைந்துள்ளது. இங்குள்ள புனித ஆறான சரயுவில் நீராடி ராமரை வழிபட்டால் மோட்சம் பெறலாம்.

3. காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் நகரம் ஆயிரம் கோயில்களின் நகரம் எனப்புகழ் பெற்றது. "நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி.

பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

கோயில் நகரம்

காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை.

4. மதுரா :

புனித மதுரா நகரம், உத்தரப்பிரதேசத்தில், அமைந்துள்ளது. மதுராவில் ஓடும் யமுனை ஆற்றில் நீராடி கிருஷ்ணரை வழிபடுவர். மதுரா நகர் தொன்மவியலின்படி கிருஷ்ணனின் பிறப்பிடமாகும்.

மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி மதுராவை தலைநகராகக் கொண்டு சூரசேன இராச்சியத்தை கிருஷ்னனின் மாமன் கம்சன் ஆண்டு வந்தான். கிருஷ்ண ஜென்ம பூமி எனப்படும் இடத்தில் பாதாள சிறையொன்றில் கிருஷ்னன் பிறந்ததாக அந்த இடத்தில் கேசவ தேவ் கோவில் கட்டப்பட்டுள்ளது.

5. துவாரகை :

துவாரகை, எழு மோட்ச நகரங்களில் ஒன்று. இது குஜராத் மாநிலத்தின் தேவபூமிதுவாரகை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

யதுகுல அரசர்கள் ஆண்ட ஆனர்த்தா நாட்டின் தலைநகராக விளங்கிய துவாரகையை, ஸ்ரீகிருஷ்ணர் புதிதாக அமைத்ததாக நம்பப்படுகின்றது. துவாரகை ஏழு மோட்சபுரிகளில் ஒன்றாக உள்ளது.

துவாரவதி

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருத்துவாரகை இங்கு அமைந்துள்ளது குறிக்கத்தக்கது. துவாரகையை துவாரவதி என்றும் அழைப்பர். துவாரகை என்பதற்கும் துவாராவதி என்பதற்கும் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள்.

6. உஜ்ஜையினி :

உஜ்ஜையினி, மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பழைய புனித நகரமாகும்.

மகாபாரதத்தின்படி உஜ்ஜயினி அவந்தி அரசின் தலைநகரமாகும். உஜ்ஜைன் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் விழா நடைபெறுகின்றது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மஹாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம் இங்கேயே உள்ளது.

7. அரித்துவார் :

அரித்துவார் ஏழு வீடுபேறு வழங்கும் புனித நகரங்களில் ஒன்று. இந்நகரம் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஹிந்தியில் ஹரித்வார் என்பது, ஹரியின் த்வாரம் அல்லது கடவுளின் வழி, அதாவது ஹரி என்றால் கடவுள் மற்றும் த்வார் என்றால் வழி எனும் பொருளில் வழங்கப்படுகிறது. இங்கு பாயும் கங்கை ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top