திருவருள் பொழியும் திருமீயச்சூர் லலிதாம்பிகை

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருவருள் பொழியும் திருமீயச்சூர் லலிதாம்பிகை பற்றிய பதிவுகள் :

தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்கள் பெருங்கோயில், மாடக்கோயில், மணிக்கோயில் என பல்வேறு வகையாய் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ஆலயத்தினுள்ளேயே மற்றொரு ஆலயம் உள்ள அமைப்பு இளங்கோயில் எனப்படும். 

திருமீயச்சூரில் உள்ள லலிதாம்பிகை சமேத அருணாசலேஸ்வரர் ஆலயம் இத்தகைய இளங்கோயில் அமைப்பில் உள்ளது. அருணாசலேஸ்வரரை மேகநாதசுவாமி என்றும், லலிதாம்பிகையை சாந்தநாயகி என்றும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு பார்த்த மேகநாதசுவாமி ஆலய ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. ஆலயத்தின் நான்கு புறங்களிலும் தேரோடும் அழகிய வீதிகள். 

தேர்நிலைக்கு அருகில் தென்திசை நோக்கி சித்தி விநாயகர், தனி ஆலயத் தில் கோயில் கொண்டிருக்கிறார். அதனருகில், சந்நதித் தெருவில் சூரியன் உருவாக்கிய சூரிய தீர்த்தம் உள்ளது. 

சூரியன் இத்தலத்தில் கஜவாகனனாக ஈசனை வழிபட்டதால் ஆலய விமானம் யானையின் பின்பாகம் போன்ற கஜப்ருஷ்ட அமைப்புடன் மூன்று கலசங்களுடன் காட்சியளிக்கிறது. வெளிப்பிராகாரம் கடந்து உள்ளே சென்றால் மேகநாதர் கலைநயத்துடன் காட்சி தருகிறார்.

கோயிலில் லலிதாம்பிகைக்கு தனி சந்நதி உள்ளது. அகலமான கருவறையின் நடுநாயகமாக வலது காலை மடித்து, இடதுகாலை கீழே பீடத்தில் ஊன்றி பேரெழிலுடன் அமர்ந்திருக்கிறாள் லலிதை. திருவாசி பளபளக்க, வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து தரிசனம் தருகிறாள். தனிக்கோயிலில், அமைதியான திருவுருவில் லலிதை தரிசனமளிக்கின்றாள்.  

காச்யப முனிவரின் மனைவிகளான கத்துருவும் வினதையும் மழலை வரம் வேண்டித் தவமிருந்தார்கள். வினதைக்கு பட்சி ராஜனான கருடனும் கத்துருவுக்கு உடற்குறையுள்ள அருணனும் பிறந்தனர். அதனால் மனம் நொந்த அவர்கள் இறைவனிடம் மீண்டும் சரணடைய, பறவை குழந்தை மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனாக பெரிய திருவடியாகும் பேறு பெற்றது. 

கத்துருவின் குழந்தை அருணன் சூரியனின் சாரதியாக பதவி பெற்றார். அருணன் உடற்குறையுள்ளவராக இருந்ததால், அதை நிவர்த்தி செய்து கொள்ள விரும்பினார். தன் விருப்பத்தை நிறைவேற்றவல்ல ஈசனை தரிசிக்க, மோகினி வடிவம் கொண்டு அருணன் சென்றபோது, அவள் அழகில் மயங்கிய இந்திரன் அவளை நிற்கதி செய்ததால், இறைவனின் சாபத்தை இந்திரன் பெற்றான்.

இந்த செய்தி அறிந்த சூரியனுக்கோ தன் சாரதியை மோகினியாக பார்க்க ஆசை வந்தது. கதிரவனுக்கு காமம் தலைக்கேற, மீண்டும் மோகினி, வடிவமெடுக்க அருணனை வற்புறுத்தினான். இதைத் தெரிந்து கொண்ட ஈஸ்வரன் சூரியனை சபித்தார். சூரியன் உடல் கறுமையாகி உலகம் இருண்டு விட்டது. தன் தவறை உணர்ந்து ஈசனிடம் மனமுருக வேண்டிக் கொண்டான் சூரியன். மீண்டும் மீண்டும் இறைவனை சரணடைந்து மனமுருக வேண்டினான்.

அதற்கு இறைவன், ‘திருமீயச்சூர் சென்று சூர்ய புஷ்கரணி என்னும் நீர்நிலையை உருவாக்கி, பூஜைகள் செய்’ என்று ஆணையிட்டார். அதன்படி தலையில் எருக்கு இலை, அறுகம்புல், பசுஞ்சாணம் முதலியவற்றை வைத்துக் கொண்டு சங்கல்பம் செய்து விசேஷமாக பூஜைகள் செய்தான். ஏழு மாதம் இப்படிச் செய்தும் அவன் உடலின் கறுமையும், கடுமையும் மாறவில்லை. ஈஸ்வரனை நோக்கி கதறினான். சுவாமியும் அம்பாளும் ஏகாந்தமாக இருக்கும் ஒரு அமைதியான வேளையில் சூரியனின் அலறல் அபஸ்வரமாக ஒலித்தது. அம்பாளுக்கு கோபம் வந்து சூரியனை சபிக்க நினைத்தபோது ஈசன் அவளைத் தடுத்தார்.

‘இப்போதுதான் சாப விமோசனம் பெறும் நிலைக்கு வந்திருக்கிறான் சூரியன், மீண்டும் சபித்து விடாதே! மீண்டும் உலகம் இருளில் மூழ்கிவிடும். எனவே நீ சாந்தமடைந்து, உலகம் பிரகாசிக்கத் தவமிருப்பாயாக!’ என்று கேட்டுக் கொண்டார். அம்பிகையும் சாந்த நாயகியாக, லலிதையாக திருமீயச்சூர் பகுதியில் தியான கோலத்தில் அமர்ந்தாள்.

அன்னை பராசக்தியின் உத்தரவின் பேரில் வசின்யாதி வாக் தேவதைகள் தோன்றி லலிதா ஸஹஸ்ரநாமம் எனும் லலிதையைப் புகழும் அதியற்புதமான தோத்திரத்தை இத்தலத்தில் அரங்கேற்றினர். அதில் வரும் ஸ்ரீமாதா எனும் முதல் நாமத்தின்படி அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாய், இந்த அகிலத்திற்கே அன்னையாய், தேவி அருள்கிறாள். 

ஹயக்ரீவர் சொற்படி அகத்திய முனிவர், திருமீயச்சூர் வந்தார். சூரியன் அப்போது சாந்தநாயகிக்கு பூஜை செய்துகொண்டிருந்ததை பார்த்தார். தானும் அன்னையை வணங்கி, ‘லலிதா நவரத்ன மாலை’ என்கிற பாடல் தொகுப்பைப் பாடினார். லலிதா நவரத்னமாலையை இத்தலத்தில் பாடினால் லலிதாஸஹஸ்ரநாம பாராயண பலன் கிட்டும் என்பார்கள்.

இத்தேவியின் சந்நதி, கொலுமண்டபம் போல, ஒரு ராஜதர்பார் போல் தோற்றமளிக்கிறது. அழகு, கம்பீரம், கருணை தவழ பேரெழிலுடன் தேவி அமர்ந்திருக்கும் காட்சியில் மனம் குவிகிறது. காண்பவரைப் பரவசப்படுத்தும் தரிசனம். சாந்தித்யம் நிறைந்த இந்த சந்நதி பக்தர்களை நெக்குருக வைத்து கண்களில் நீர் திரள வைப்பது நிஜம்.

மனதில் நினைக்கும் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தருவது மனோன்மணி. அந்த மனோன்மணி வடிவில் பக்தர்களின் கோரிக்கை எதுவானாலும் நிறைவேற்றித் தருகிறாள் இந்த லலிதாம்பிகை. சித்திரா பௌர்ணமியும் சுவாதி நட்சத்திரமும் ஒன்றாக வரும் நாள் மிக விசேஷமானது. அன்று வானில் இருந்து விழும் மழைத்துளி சிப்பியினுள் நுழைந்தால் அது நல்முத்தாக மாறிவிடும். அந்நாள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். அந்த நந்நாளில் இத்தல லலிதாம்பிகைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

வாழ்க்கையில், அமைதியையும் அர்த்தத்தையும் கண்டுபிடிக்கத் தெரியாமல் அல்லற்படும் நம்மை கருணையுடன் அழைத்து அருட்பாலிக்கிறார் லலிதாம்பிகை. வணங்கும் பக்தர்களுக்கு இல்லற நலம், குழந்தைகளின் கல்வி வளம், செய்தொழிலில் வெற்றி, மாங்கல்ய பலம், நீண்ட ஆயுள், குறைவற்ற உடல்நலம், போன்றவற்றை அருளி தீவினை பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறாள் தேவி. 

கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பிரதான சாலையில் பேரளம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது திருமீயச்சூர் திருத்தலம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top