சிவபெருமானுக்கு உகந்த சிவராத்திரி வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவபெருமானுக்கு உகந்த சிவராத்திரி வழிபாடு பற்றிய பதிவுகள் :

ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருவதுண்டு. இந்த நாளில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற முடியும். சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.

சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி ஆகும். நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது.

மாத சிவராத்திரியின் மகிமையை சிவபெருமான் நந்திக்கு சொன்னார். நந்தி மற்றவர்களுக்கு சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன. இதுகுறித்து விரிவாக நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

மாத சிவராத்திரியானது தேய்பிறை சதுர்த்தசி இரவு கொண்டாடப்படுகிறது. இந்த சிவராத்திரி நாளில் சிவபக்தர்கள் விரதம் இருந்தும், சிவாலயம் சென்று இரவு கண் விழித்தும் எம்பெருமானை வழிபடுவார்கள்.

சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும். பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும். இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும்.

சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும் தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

திருவைக்காவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், ஆயுள் பலம் அதிகரிக்கும்.

ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரக்கூடியது.

சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

சிவராத்திரியில் விரதம் இருந்து வழிபட்டால் புத்திர தோஷம், திருமணத்தடை என அனைத்து துன்பங்களும் நீங்கும்.

மாத சிவராத்திரி விரத வழிபாட்டின் முக்கியமான ஆறு அம்சங்கள் :

1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலை குறிக்கும்.

2. லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் நல்லியல்பையும், நல்ல பலனையும் வழங்கும்.

3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும், விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.

4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.

5. எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானம் அடைதலைக் குறிக்கும்.

6. வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.


ஐந்து சிவராத்திரி :

மகா சிவராத்திரி :

மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு 'வருஷ சிவராத்திரி' என்ற பெயரும் உண்டு.

யோக சிவராத்திரி :

திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும், அதாவது பகல்-இரவு சேர்ந்த அறுபது நாழிகை (இருபத்தி நான்கு மணி நேரமும்) அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி ஆகும்.

நித்திய சிவராத்திரி :

வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை-வளர்பிறை சதுர்த்தசி திதி, இடம் பெறும் இருபத்தி நான்கு நாட்களும் நித்திய சிவராத்திரி ஆகும்.

பட்ச சிவராத்திரி :

தை மாத தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, பதினான்காம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.

மாத சிவராத்திரி :

மாதந்தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top