விஜயதசமி திருநாளுக்கு எத்தனை சிறப்புகள் உள்ளது, இந்த நாளில் எப்படி வழிபட வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு விஜயதசமி நாளை கொண்டாடுவது சிறப்பாக இருக்கும்.
பராசக்தி மூன்று சக்திகளாக இணைந்து மகிஷாசுரனை போரிட்டு வெற்றி வாகை சூடிய நாள் தான் விஜயதசமி. அன்னை பராசக்தி ஒன்பது ராத்திரிகள் அசுரர்களுடன் போரிட்ட நாட்களை ‘நவராத்திரி நாட்கள்’ என்றும், வெற்றியை கொண்டாடப்படும் நாளை விஜயதசமி என்றும் குறிப்பிடுகிறோம்.
விஜய் என்றால் வெற்றி என்பதாகும், தசமி என்றால் பத்து ஆகும். பத்தாம் நாள் மகிஷனை அழித்ததால் மகிஷாசூரமர்தியானாள் எனக் கூறப்படுகின்றது. நவராத்திரி ஒன்பது நாட்கள் வழிபாடு செய்ய இயலாதவர்கள் விஜயதசமி அன்று வழிபாடு செய்யலாம்.
ஆணவம் பிடித்த அரக்கனை அடியோடு அழித்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் நல்ல காரியங்களை செய்ய நன்னாளாக கருதப்படுகின்றது.
விஜயதசமி அன்று துவங்கும் எந்த ஒரு காரியமும் வெற்றியை கொடுக்கும். குறிப்பாக குழந்தைகளை விஜயதசமி நாளில் தான் முதன் முதலில் பள்ளியில் சேர்த்து விடுவார்கள்.
இந்த நவராத்திரி நாட்களில் எல்லாவற்றுக்கும் மேலானதாக சண்டி ஹோமம் கருதப்படுகின்றது. சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றாக இணைந்த வடிவானவள். இந்த சண்டி ஹோமத்தின் சிறப்பு மூன்று தேவிகளையும் ஒரே வடிவமாக பூஜை செய்வதே ஆகும்.
விஜயதசமி நாளில் இதை செய்வதால் அதிக அளவில் நற்பலன்கள் உண்டாகும். சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில் ஆரம்பக் கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.
சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன், ஆரத்தி காட்டி அன்று சில வரிகளாவது படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.