விஜயதசமி மற்றும் வித்யாரம்பம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விஜயதசமி மற்றும் வித்யாரம்பம் பற்றிய பதிவுகள் :

நவராத்தியின் நிறைவாக கொண்டாடப்படுவது விஜயதசமி திருநாளாகும். இது அம்பிகை, அசுரர்களை வதம் செய்து, போரில் வெற்றி பெற்ற திருநாளாகும். அம்பிகையின் வெற்றியை கொண்டாடும் திருநாளாக கருதப்படுகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விஜயதசமி திருநாள் தசரா என்ற பெயரில் கொண்டாடப்படுவது வழக்கம். 

தசரா என்றால் பத்தாவது நாள் கொண்டாட்டம் என்று பொருள். வாழ்க்கையில் நாம் செய்யும் அல்லது துவங்கும் தொழில்களில் வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக வழிபடக் கூடிய நாளே விஜய தசமி திருநாள் ஆகும்.

தசரா பண்டிகை அன்று பக்தர்கள் ஆடிப்பாடியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும். அதே போல் துர்கா தேவியின் சிலை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கமும் உள்ளது. புதிதாக கலைகள் கற்க துவங்குபவர்களும் இந்த நாளில் தங்களின் பயிற்சியை துவங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு அக்டோபர் 12 ம் தேதி சனிக்கிழமை விஜயதசமி திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இது புரட்டாசி கடைசி சனிக்கிழமையுடன் இணைந்து வருவது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் தொழில் நிறுவனங்களில், தொழில் செய்யும் பொருட்களை வைத்து தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவார்கள். வீட்டில் இருக்கும் வாகனங்கள் ஆகியவற்றையும் சுத்தம் செய்து, அவற்றிற்கு சந்தனம், குங்கமம் தொட்டு வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.

குழந்தைகளை முதல் முறையாக பள்ளிகளில் சேர்ப்பவர்கள் இந்த நாளில் சேர்க்கலாம். அல்லது குழந்தைகளுக்கு முதன் முதலில் எழுத பழக்கும் போது, குழந்தைக்கு நல்ல குருவாக கிடைத்து அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என குலதெய்வம், இஷ்ட தெய்வம் ஆகியவற்றை மனதார முதலில் வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு வீட்டில் உள்ள பெரியவர்கள் மடியில் அமர வைத்து, ஒரு தட்டில் நெல் அல்லது அரிசி பரப்பி, அதில் குழந்தைகளை எழுத வைக்க வேண்டும். 

வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் குழந்தையின் தந்தையின் மடியில் அமர வைத்து வித்யாரம்பம் செய்து வைக்கலாம். அல்லது பள்ளியில் வித்யாரம்பம் செய்கிறார்கள் என்றால் அங்கு குழந்தைகளை அழைத்துச் சென்று வித்யாரம்பம் செய்து வைக்கலாம்.

வித்யாரம்பம் தவிர, புதிய தொழில், வியாபாரம் துவங்குபவர்களும், விஜயதசமி நாளில் நிறுவனத்தில் அல்லது தங்களின் தொழில் மேலும் மேலும் வளர்ச்சி கிடைப்பதற்காக கீழே குறிப்பிட்டுள்ள நேரத்தில் வழிபாட்டினை செய்யலாம்.

வித்யாரம்பம் செய்வதற்கான நல்ல நேரம் :

காலை 06.30 முதல் 08.30 வரை
காலை 10.35 முதல் 01.20 வரை

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top