மாதங்களில் மகத்துவம் நிறைந்தது மாசி மாதம். மாதங்களில் மாசி மாதத்தினை 'கும்ப மாதம்' என்றும் அழைப்பார்கள். இவ்வளவு மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் மாசி மகம், மஹா சிவராத்திரி, மாசி அமாவாசை மற்றும் காரடையான் நோன்பு போன்ற புண்ணிய நிகழ்வுகள் பலவும் வருகின்றன.
மாசி மாத விழாக்கள் குறித்தும், அதன் அற்புதங்களை பற்றியும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
மாசி சங்கடஹர சதுர்த்தி :
மாசி 4ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று (16.02.2025) மாசி சங்கடஹர சதுர்த்தி வருகிறது. இந்த நாளில் விநாயகப்பெருமானை வழிபட எல்லா தோஷங்களும் நீங்கி நற்பேற்றினைப் பெறலாம்.
மஹா சிவராத்திரி :
மாதந்தோறும் வரும் சிவராத்திரி மிகவும் விசேஷமானது. அதிலும் மாசி மாதத்தில் வரும் மஹா சிவராத்திரி இன்னும் விசேஷமானது. பிற மாதங்களில் வரும் சிவராத்திரியின்போது விழித்திருந்து இறைவனை வழிபடாதவர்கள் இந்த மாசி மாத மஹா சிவராத்திரி நாளில் வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் சிவராத்திரி வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில், வரும் (26.02.2025) புதன்கிழமை அதாவது மாசி 14ஆம் தேதியன்று அனைத்து சிவாலயங்களிலும் மஹா சிவாராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். குறிப்பாக மஹா சிவராத்திரி நாளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் சிவாலய ஓட்டம் உலக பிரசித்தி வாய்ந்தது.
மாசி அமாவாசை :
அமாவாசை தினங்கள் அனைத்தும் முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாட்களே. மாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புண்ணிய பலனை தரக்கூடியது. அதன்படி மாசி 15ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை (27.02.2025) மாசி மாத அமாவாசை வருகிறது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா:
மண்டைக்காடு கொடை அல்லது திருவிழா பிரபலமான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் மாசி கொடை திருவிழா 2025 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 11 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வுகளில், மார்ச் 7 ஆம் தேதி மஹாபூஜை மற்றும் மார்ச் 12 ஆம் தேதி வலிய சக்கர தீவட்டி ஊர்வலம் இடம்பெறும்.
இந்த திருவிழா, மாசி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
மாசி மகம் :
மாசி மகம், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள்.
அந்த வகையில், வரும் (12.03.2025) புதன்கிழமை அதாவது, மாசி 28ஆம் தேதி மாசி மகத்தன்று இறைவனை தரிசனம் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மஹாமகம் வெகுசிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவே வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது.
மாசி பௌர்ணமி :
இந்த ஆண்டு மாசி 29ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை (13.03.2025) மாசி பௌர்ணமி வருகிறது. இத்தினத்தில் இறைவனை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.
அண்ணாமலையாரே வள்ளாலன் என்ற தன் பக்தனுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாத பௌர்ணமி தினத்தில்தான். எனவேதான் வழக்கமாக அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது.
காரடையான் நோன்பு :
வீரமும், விவேகமும், பக்தியும் உடைய பெண்ணான சாவித்திரி எமதர்மனிடம் இருந்து கணவனைத் திரும்பப் பெற நோற்ற நோன்பே காரடையான் நோன்பாகும்.
இந்நோன்பு மாசி கடைசி நாளில் ஆரம்பிக்கப்பட்டு பங்குனி முதல் நாளில் முடிக்கப்படுகிறது.