சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவர் நீண்ட ஆயுளோடும், தேக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று நோற்கும் நோன்பே காரடையான் நோன்பு. இந்த நோன்பு சாவித்திரி நோன்பு என்றும் வழங்கப்படுகிறது.
பொதுவாக இந்த நோன்பு மாசிமாதம் முடியும் நேரம் பங்குனி மாதம் பிறப்பு என்ற சங்கிரமண காலத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. கணவனை எமனிடமிருந்து மீட்ட சாவித்திரியின் கதையை அறிந்திருப்பீர்கள். அவளுடைய பக்தி சிரத்தையும் கணவன் பால் கொண்ட அன்பும் முழு ஈடுபாடும் கணவனின் ஆயுளை விருத்தியடையச்செய்து எமனிடமிருந்து விடுதலையடைய வைத்தது.
பொதுவாக காரடையான் நோன்பு அன்று கார் அடை என்னும் ஒரு கொழுக்கட்டையை படைத்து விரதம் இருப்பதால் காரடையான் நோன்பு என்று சொன்னாலும் காரடையான் நோன்பின் தத்துவம் வேறு. கார் என்றால் இருள். இருள் சூழ்ந்திருக்கும் எமப்பட்டினத்தை அடையாதவன் கார்- அடையான். இந்த விரதத்தை சுமங்கலிகள் அனுஷ்டித்தால் அவர்களுடைய கணவன்மார்கள் எமப்பட்டினத்தை அடையார் என்பதே இந்த நோன்பின் பெயர்க்காரணமாகும்.
காரடையான் நோன்பு அன்று காலை சுமங்கலிகள் வீட்டை கழுவி பசுஞ்சாணத்தால் வாசலை மெழுகி அரிசிமாவினால் கோலமிட்டு காவி வண்ணம் தீட்டி வாயில்களில் மஞ்சள் குங்குமம் பூசி மாவிலைத் தோரணங்களைக் கட்டி அலங்கரிக்க வேண்டும்.
பூஜை அறையில் ஒரு மரப்பலகையில் கோலமிட்டு குத்துவிளக்கு ஐந்து முகம் ஏற்றி அதில் சாவித்திரி தேவியை ஆவாகணித்து வழிபட வேண்டும். மஞ்சள் சரடை பூஜித்து திருமாங்கல்யத்துடன் சேர்த்து அணிதல் வேண்டும்.
சாவித்திரி தேவி காட்டில் விரதமிருக்கையில் கார் அரிசியில் காராமணிப் பயறு சேர்த்து வெண்ணெய் கலந்து தயாரித்த வெல்ல அடை மற்றும் கார அடைகளை நிவேதனம் செய்ததின் நினைவாக இன்றும் கார அடையும் வெல்ல அடையும் நிவேதனம் செய்யப்படுகிறது.
நிவேதனம் செய்து கற்பூர ஆரத்தி முடிந்ததும் மஞ்சள் சரடை மாங்கல்ய சரடுடன் அணிந்து கணவரை நமஸ்கரிக்க வேண்டும். பின்னர் மாமனார்- மாமியாரை நமஸ்கரித்து கணவருக்கும் மாமனார் மாமியாருக்கு காரடைகளைப் பிரசாதமாக அளிக்க வேண்டும்.
வீட்டிலுள்ள மற்ற பெரியோர்களை நமஸ்கரித்தபின் சுமங்கலிப்பெண்கள் காரடை உண்டு நோன்பை முடிக்க வேண்டும். சில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டுக்குக் கொடுக்க வேண்டும் . அடைகளைப் படைக்க வாழை இலை கிடைக்காவிடில் பலா இலைகளைச் சேர்த்து முடைந்து அதில் படைப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
இந்த நோன்பை அனுசரித்தால் கணவரின் ஆயுள் விருத்தியாகும். ஆரோக்கியம் பெருகும். கல்யாணமாகாத கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகும். பிரிந்த தம்பதியர் கூடுவர். இந்த நோன்பின் மிக முக்கியமான பலம் தீர்க்க சௌமாங்கல்யம்.
மஞ்சள் சரடு கட்டிக்கொண்டு, காரடையும் வெண்ணெய்யும் கையில் வைத்துக்கொண்டு கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
சங்கல்ப ஸ்லோகம்மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம்
மம பர்த்துச்ச அன்யோன்யப்ரீதி
அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம்
ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே
தியானம்
ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம்
புவனேஸ்வரீம் த்யாயாமி ஹ்ருதயே
தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்
காமாக்ஷீம் ஆவாஹயாமி.
"மங்களே மங்களாதாரே
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே ஸதா"
நோன்புச்சரடு மந்திரம்
தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா
'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்'
பூஜையை முடிக்கும் வரை பெண்கள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் உப்பில்லாத சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சிறிதளவு பழம் ஏதேனும் சாப்பிடலாம். ஆனால் மோர், தயிர், பால் என்று எதையும் உட்கொள்ளக் கூடாது.
நாளை 14-3-2025 காரடையான் நோன்பு. இந்த நாளில் புதிய மாங்கல்ய சரடு அணியும் வழக்கமும் உண்டு. தீர்க்க சுமங்கலி வரம் அருளும் இந்த காரடையான் நோன்பினை பக்தி சிரத்தையோடு அனுசரித்து பலன் பெறுவோமாக!