ஹயக்ரீவர் வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஹயக்ரீவர் வழிபாடு பற்றிய பதிவுகள் :

ஹயக்ரீவர், செல்வ வளம் மற்றும் ஞானத்தின் கடவுளாக போற்றப்படுகிறார். ஹய என்றால் குதிரை என்றும், க்ரீவா என்றால் கழுத்து என்றும் பொருள். ஒருவர் தன்னுடைய ஞானம் மற்றும் அறிவுவை பெருக்கி, அதன் மூலம் வாழ்வில் அவர்களுக்கு அனைத்து விதமான நலன்களை அள்ளிக் கொடுத்து, குதிரையை போல் கம்பீரமாக வாழ வைக்கக் கூடிய தன்மை கொண்டவர் ஹயக்ரீவர்.

பிரம்ம முகூர்த்தம், ஏகாதசி, நவமி திதிகள், புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகியன ஹயக்ரீவரை வணங்குவதற்குரிய சரியான காலமாகும். ஹயக்ரீவ மந்திரங்களை 9, 11,108,1008 என்ற எண்ணிக்கையிலேயே உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரங்களை கிழக்கு நோக்கி அமர்ந்து பாராயணம் செய்தால் அளவில்லாத நன்மைகளை பெற முடியும்.

கல்விக்குரிய தெய்வமாக அனைவராலும் வணப்படுபவள் சரஸ்வதி தேவி. கல்வியில் சிறக்க, கல்வி தொடர்பான தோஷங்கள் விலகவும் சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும் என்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட சரஸ்வதி தேவிக்கே குருவாக விளங்கக் கூடியவர் ஹயக்ரீவர் தான் என புராணங்கள் சொல்கின்றன.

பெருமாளின் அவதாரமாக விளங்கக் கூடியவர் தான் இந்த ஹயக்ரீவர். குதிரை முகமும், மனித உடலும் தோற்றம் கொண்டவர் ஹயக்ரீவர். ஆனால் இவர் மஹா விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுவது கிடையாது. ஆனால் கல்வி, ஞானத்திற்கு அதிபதியாக இவரே குறிப்பிடப்படுகிறார். 

குதிரை முகம் கொண்ட மது, கைடபன் எனும் அசுரர்களுக்கு தாங்கள் படைக்கும் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதன் காரணமாக படைக்கும் கடவுளான பிரம்மாவிடம் இருந்து வேதங்களை திருடிச் சென்று, பாதாள உலகத்தில் மறைத்து வைத்தனர். 

இதனால் உலகில் படைக்கும் தொழில் முற்றிலுமாக முடங்கியது. இதன் காரணமாக கவலை அடைந்த பிரம்மா, பெருமாளிடம் முறையிட்டார். இதனால் குதிரை முக அரக்கர்களுடன் போரிடுவதற்காக குதிரை முக வடிவெடுத்து, பாதாள உலகம் சென்று, அசுரர்களை வதம் செய்து, வேதங்களை மீட்டு வந்தார் திருமால். குதிரை முகமும், மனித உடலும் கொண்ட இந்த ரூபத்தையே ஹயக்ரீவர் ரூபம் என்கிறோம்.

அசுரர்களை வதம் செய்த பிறகும் ஹயக்ரீவரின் உக்கிரம் தணியவில்லை. இதனால் அவரின் உக்கிரத்தை தணிப்பதற்காக லட்சுமி தேவி, அவரது மடியில் சென்று அமர்ந்தார். உடனடியாக கோபம் தணிந்து, சாந்தமாக தோன்றிய இந்த வடிவத்தை லட்சுமி ஹயக்ரீவ வடிவமாக வணங்குகிறோம். 

அசுரர்கள் எடுத்துச் சென்றதால் தங்களின் புனிதத்தன்மை போய் விட்டதாக வேதங்கள் வருந்தியதால், தனது மூச்சுக் காற்றால் அவற்றை புனிதமாக்கினார் ஹயக்ரீவர். வேதங்களை மீட்டு, அவற்றின் கலங்கத்தை போக்கியதால் அவர் ஞானத்தின் வடிவமாகவும், லட்சுமியுடன் காட்சி தருவதால் இவர் செல்வத்திற்கு அதிபதியாகவும் விளங்குகிறார்.

ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று ஏலக்காய் மாலை அணிவித்தும், தேன் படைத்தும், புத்தகம், பேனா போன்ற கல்வி தொடர்பான கருவிகளை வைத்து ஹயக்ரீவரை வழிபட கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் தோஷங்கள் விலகி, கல்வி மற்றும் ஞானம் பெருகும். 

ஹயக்ரீவருக்கு படைத்த அல்லது அபிஷேகம் செய்த தேனை குழந்தைகளுக்கு கொடுத்து, ஹயக்ரீவர் மந்திரத்தை தொடர்ந்து பாராயணம் செய்ய சொன்னால், குழந்தைகளுக்கு கல்வியில் ஏற்பட்டுள்ள மந்தத்தன்மை நீங்கும்.

ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம் :

ஓம் தத் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்

ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் :

ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே

இந்த மந்திரங்களை பெருமாளுக்குரிய புதன் மற்றும் சனிக்கிழமைகளில், வீட்டில் உள்ள ஹயக்ரீவர் படத்திற்கு முன்பாகவோ அல்லது கோவிலிலோ, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து 108 முறை அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும். இதனால் ஞானம், நினைவாற்றல் பெருகும். தீய சக்திகளின் பாதிப்புக்களில் இருந்து விடுபடலாம். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top