ஆனி வளர்பிறை ஏகாதசி

0




ஏகாதசி விஷ்ணுவுக்கும் உகந்த திதி. ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர்கூட குடிக்காமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.

மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசிகளில் பெருமாள் வழிபாட்டிற் கான சிறப்புமிக்க தினங்களாக இருக்கின்றன.  ஒரு அற்புதமான ஏகாதசி தினமாக ஆனி மாத வளர்பிறை ஏகாதசி தினம் இருக்கிறது.

இந்த ஆனி மாத வளர்பிறை ஏகாதசி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். ஆனி மாதத்தில் வருகின்ற வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது.

மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் இருக்க வேண்டிய ஏகாதசி விரதம் குறித்து வியாசர் விளக்கினார். அப்போது ஆனி மாதத்தில் வருகின்ற வளர்பிறை ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பீமனுக்கு கூற, பீமனும் அவ்வாறே செய்ய இதை பீம ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.

ஒரு வருட காலத்தில் வருகின்ற மற்ற ஏகாதசி தினங்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த ஆனி மாத ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் வாழ்வில் உயரிய நிலையை பெறலாம். இந்த ஏகாதசி திதியில் நீர் கூட அருந்தாமல் உபவாசம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுபவர்கள், அவர்கள் மறைந்த பிறகு மோட்ச நிலை உறுதியாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நீர் அருந்தாமல் இந்த ஆனி வளர்பிறை ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் இந்த ஆனி வளர்பிறை ஏகாதசி நிர்ஜல ஏகாதசி எனவும் அழைக்கின்றனர். ஆனி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும்.

உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நல்ல திடகாத்திரமான உடல்நிலை கொண்டவர்கள் நீர் கூட அருந்தாமல் நிர்ஜல ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது விரும்பிய பலனை தரவல்லதாகும். நிர்ஜல ஏகாதசி எனப்படும் ஆனி மாத வளர்பிறை ஏகாதசியில் விரதம் மேற்கொள்பவர்கள் புண்ணிய நதிகள் அனைத்திலும் நீராடிய பலன்களை பெறுகின்றனர்,

சாஸ்திரங்கள் கூறப்பட்டிருக்கும் அனைத்து வகையான தானங்கள் செய்த புண்ணியத்தையும் பெறுகின்றனர். மேலும் முற்பிறவியில் பிராமணரை கொன்ற பாபம், பசுமாட்டை கொன்ற பாவம், பொய் சொல்லுதல், குருவை மதிக்காமல் நடத்தல் போன்ற அனைத்து வகையான பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. வறுமை நிலை நீங்கி, செல்வங்கள் பொங்கும்.

நிர்ஜல ஏகாதசி தினத்தன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்க நாணயங்களை தானம் செய்த புண்ணியப் பலன்களை பெறுகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளன. நிர்ஜல ஏகாதசியின் பெருமையை கேட்பவர்கள் கூட இறப்பிற்குப் பின் பெருமாள் அருளும் வைகுண்ட பதவியை அடைவார்கள் எனவும் கூறுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top