விநாயகரின் அவதாரங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகரின் அவதாரங்கள் :


1.ஆதி விநாயகர்

விநாயகர் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது யானைத்தலை. ஆனால் யானை முகம் வருவதற்கு முன் இருந்த மனித முகத்துடன் காட்சிதருவது நன்னிலத்துக்கு அருகில் உள்ள திலதர்ப்பணப்பதி எனும் தேவாரப் பாடல் பெற்ற
தலத்திலாகும்.

2. கற்பக விநாயகர்

சிவகங்கைச் சீமை, பிள்ளையார் பட்டி எனும் தலத்தில் மலையடியில், குடவறையில் வடக்கு நோக்கி அருளும் கற்பக விநாயகர் கற்பக மரத்தைப் போல, கேட்டதை வழங்குபவர். இரு கரங்களுடன் காட்சி தருவது வித்தியாசமான தோற்றமாகும்.

3. வெள்ளை விநாயகர்

திருவலஞ்சுழி எனும் தேவாரப் பாடல் பெற்ற சிவாலயத்திற்குள் நுழைந்தவுடன் வெள்ளை நிறத்தில் இந்திரனால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் ‘வேத விநாயகர்’ என்று அருளுகிறார்.

4. நேத்திர விநாயகர்

சுவாமிமலை சுவாமிநாதப்பெருமான் சன்னதி நுழையும் முன் தென்திசை நோக்கி அமர்ந்த நிலையில், வேண்டுபவர்களின் கண் நோய் தீர்ப்பதால் இப்பெயர் வந்தது.

5. கள்ளவாரணப் பிள்ளையார்

திருக்கடவூர் அபிராமி சமேத அமிர்தகடேசுவரர் ஆலயத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தரும் பிள்ளையார். அமிர்த கலசத்தை மறைத்து வைத்ததனால் இப்பெயர் வந்தது.

6.கைகாட்டி விநாயகர்

திருநாட்டியத்தான்குடி எனும் தேவாரத் தலத்தில் இறைவனை தரிசிக்க சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளே நுழைய முற்பட்ட போது அங்கே சிவபிரான் இல்லாமையை உணர்ந்து கொண்டு விநாயகரை நோக்க… சிவன், சுந்தரரோடு திருவிளையாடல் செய்வதற்காக நாற்று நடும் உழவனாக வயற்பக்கம் நிற்பதனைக் காட்டியதால் ‘கைகாட்டி விநாயகர்’ ஆனார்.

7. துணையிருந்த விநாயகர்

திரு ஆரூருக்கு அருகில் உள்ள திருப்பனையூர் எனும் சிவத்தலத்தில், பங்காளிகளுக்குப் பயந்து தன் தாயோடு இளவயதில் இவ்வூரில் தலைமறைவாகத் தங்கி வளர்ந்து வந்த கரிகால் சோழனுக்குத் துணையாய் இருந்து அருளி அவனைப் பேரரசனாக்கினார்.

8. பிரளயங்காத்த விநாயகர்

மூவரின் பாடல் பெற்ற திருப்புறம்பயம் சிவபிரானுக்கு வலப்புறம் உள்ள விநாயகர், பிரளயமாக வெள்ளம் வந்த போது காப்பாற்றினார். மேலும் சதுர்த்தி அன்று இரவு நடைபெறும் தேனாபிஷேகத்தை முழுவதும் உள்ளிழுத்துக் கொள்வது பெருஞ்
சிறப்பு.

9. படிக்காசு விநாயகர்

திருவீழிமிழலை எனும் பதிக்கு அப்பரும் சம்பந்தரும் வந்த போது பஞ்சம் நிலவியது. இறைவனைப் பாடிப் பரவியதால் இருவருக்கும் தினம் ஒரு பொற்காசு பீடத்தில் கிடைக்கும் படி செய்தார். எனவே அங்கே உள்ள தல விநாயகர் ‘படிக்காசு விநாயகர்’ எனப்படுகிறார்.

10. வாதாபி கணபதி

பல்லவ மன்னனின் தளபதியாக இருந்த பரஞ்சோதிவாதாபியில் அங்குள்ள கணபதியை வழிபட்டு, போர் செய்து வெற்றி பெற்றார். வெற்றிப் பரிசாக அங்கிருந்து கணபதியைக் கொண்டு வந்து தன் ஊரான திருச்செங்காட்டாங்குடி எனும் கணபதிசுரத்தில் வைத்து வழிபட்டார். பின் பரஞ்சோதி சிறுத்தொண்டரானார்.

11. மாற்றுரைத்த விநாயகர்

திரு ஆரூர் தியாகராசசுவாமி மேலைக் கோபுரத்தின் எதிர் குளக்கரையில் உள்ள விநாயகர். சுந்தரருக்கு, சிவன் கொடுத்த பொன் தரமுள்ளதா என்று உரைத்துப் பார்த்து சோதித்து அறிந்தார்.

12. பொய்யாப்பிள்ளையார்

‘அருணகிரிநாதரை ‘குமார வயலூருக்கு வா’ என்று முருகன் அசரீரியாகச் சொல்ல அவர் வயலூருக்கு வந்தார். ஆனால் முருகப்பெருமான் அங்கே காட்சிதரவில்லை. உடனே அருணகிரி நாதர் ‘அசரீரி பொய்யோ’ என்று உரக்கக் கூறினார். ‘அசரீரி பொய்யில்லை’ என்று சொன்ன பிள்ளையார் சுப்பிரமணியரைச் சுட்டிக்காட்டினார்.

13. பொள்ளாப்பிள்ளையார்

உளிபடாமல் உருவான பிள்ளையார் திருநாரையூரில் நம்பிக்கு கருணை செய்து அவர் தந்த பிரசாதத்தை உண்டவர்.

14. செவி சாய்த்த விநாயகர்.

திருவேதிக்குடி எனும் தேவாரத் தலத்தில் சிவனை நான்கு வேதங்களும் வழிபடும் போது தலை சாய்த்து வேதங்களைச் செவி மடுத்ததால் ‘செவி சாய்த்த விநாயகர்’ வேத விநாயகர் எனப்படுகிறார்.

15. கற்கடக விநாயகர்.

குடந்தைக்கு அருகே உள்ள திருந்து தேவன்குடி எனும் தலத்தில் நண்டு வழிபட்டதால் (கற்கடகம்) இறைவன் கற்கடகேசுவரர் என்றும் பிள்ளையார் ‘கற்கடகப்பிள்ளையார்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

16. ஆண்ட விநாயகர்

திருஇடைமருதூரில் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை வழிபட்டு வருவதால் சுவாமி சன்னிதிக்குத் தென்புறம் உள்ள விநாயகர் ‘ஆண்ட விநாயகர்’ ஆகிறார். திருநறையூர்
சித்தீசுரத்திலும் இதே பெயர் பெறுகிறார்.

நன்றி. 

ஓம் நமசிவாய

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top