வைகாசி பௌர்ணமியின் சிறப்புகள்

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வைகாசி பௌர்ணமி பற்றிய சிறப்பு பதிவுகள் :

தமிழ் மாதங்களில் இரண்டாவதாக வரும் மாதமாக வைகாசி மாதம் இருக்கிறது. சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயரும் மாதமே வைகாசி மாதம் எனப்படுகிறது. வைகாசி மாத வளர்பிறை காலத்தில் தொடர்ந்து பல சிறப்பான தினங்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் வைகாசி பௌர்ணமி தினம்.

பௌர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்த நாளில் நல்ல அதிர்வலைகள் ஏற்படும்.

வருடம் முழுவதும் வரும் மற்ற பௌர்ணமி தினங்களை காட்டிலும், வைகாசி பௌர்ணமி தினம் முக்கியத்துவம் வாய்ந்த தினமாக இருக்கிறது.

வைகாசி பௌர்ணமியில் செய்ய வேண்டியவை

வைகாசி பௌர்ணமி அன்று வீட்டில் விளக்கேற்றி லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபட்டால் வீடு, மனை முதலான செல்வங்களை வாங்குவதற்கான பாக்கியம் கிடைக்கும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வைகாசி பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, விருப்பத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் கிடைக்கும்.

இன்று மாலை வேளையில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது. இந்த வைகாசி பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர், பழனி போன்ற மலை சார்ந்த கோயில்களில் இருக்கும் இறைவனை வழிபட்டு கிரிவலம் மேற்கொள்ளலாம்.

இன்று கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் மாலை சந்திரன் தோன்றும் வேளையில், வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அம்பாளை ஆராதிப்பது விசேஷமானது.

இத்தகைய சக்தி மிகுந்த நாளில், தேவி வழிபாடு தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும்.

வைகாசி பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு மகிழம் பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்ம ராகக் கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் செய்த பாபங்கள் நீங்கும்.

பௌர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக்கூடியது.

பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது நம்பிக்கை. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜையை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.

எனவே புண்ணியம் மிகுந்த இந்த வைகாசி பௌர்ணமி தினத்தன்று தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவதால் பாவங்கள் நீங்கி புண்ணியம் உண்டாகும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் மற்றும் மனம் சார்ந்த குறைபாடுகள் நீங்கும். பொருளாதார கஷ்ட நிலைகள் நீங்கி செல்வச்சேர்க்கை உண்டாகும்.

Post a Comment

1 Comments
Post a Comment
To Top