வைக்கம் சிவன் கோயில்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வைக்கம் சிவன் கோயில் பற்றிய பதிவுகள் :

ஒவ்வொரு முறை நடை சாத்தும் போதும் பகலிலும், இரவிலும் கோவில் அர்ச்சகர் ஒருவர் நான்கு கோபுர வாசல்களிலும் கையில் பந்தத்துடன் வந்து யாரும் பசியாக இருக்கின்றீர்களா?என்று கேட்டு விட்டு செல்லும் நடைமுறை கேரள மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றில் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரிலுள்ள வைக்கத்தப்பன் கோவில் தான் அது. வேண்டுபவர்களுக்கு,விரும்பியதை வழங்கும் தலமாகக் இந்த கோவில் திகழ்கிறது.

சிவபெருமானின் பக்தனான கரன் என்ற அசுர குலத்தவன், முக்தி வேண்டிக் கடுந்தவம் செய்து வந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து, ‘இதனை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால் முக்தி கிடைக்கும்’என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவனைப் பின் தொடர்ந்து செல்லும்படி புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரையும் அனுப்பி வைத்தார்.

ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும், மூன்றாவது லிங்கத்தை வாயிலும் எடுத்துக் கொண்டு சென்ற அசுரன், பயணக் களைப்பால் சிறிது ஓய்வு பெறுவதற்காக வலது கையில் இருந்த சிவலிங்கத்தை ஓரிடத்தில் வைத்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு கீழே வைத்த சிவலிங்கத்தை அவன் எடுக்க முயன்றான். ஆனால், அது முடியாமல் போனது.

அப்போது அங்கு வந்த வியாக்ரபாதரிடம், அந்தச் சிவலிங்கத்தைப் பூஜை செய்து வழிபடும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அவ்விடத்திலேயே தங்கிக் கொண்டார். அவர் அந்தச் சிவலிங்கத்திற்கு நீண்ட காலம் பூஜை செய்து வழிபட்டு வந்தார்.

அசுரன் மீதமிருந்த இரண்டு சிவலிங்கங்களுடன் பயணத்தைத் தொடர்ந்தான். ஏற்ற மானூர் என்னும் இடத்தில் சென்ற போது இடது கையில் இருந்த சிவலிங்கத்தை அங்கே மேற்கு நோக்கி நிறுவி வழிபாடு செய்தான்.

பின்னர் வாயில் எடுத்துச் சென்ற சிவலிங்கத்தை கடித்துருத்தி என்ற இடத்தில் கிழக்கு நோக்கி நிறுவி வழிபட்டான். இதன் மூலமாக அவனுக்கு முக்தி கிடைத்தது.

பிற்காலத்தில் பரசுராமர் வான்வழியில் வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது, ஓரிடத்தில் கீழே பார்த்தார். அங்கு நாவல் பழ நிறத்தில் ஒரு சிவலிங்கம், நீரில் பாதியளவு மூழ்கிய நிலையில் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து கீழே இறங்கி வந்த பரசுராமர், அந்தச் சிவலிங்கத்திற்காக பீடம் ஒன்றை அமைத்து, அந்த பீடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபாடுகளைச் செய்யத் தொடங்கினார். 

இது கரன் என்ற அசுரனால் வலது கையில் எடுத்துவரப்பட்டு, வியாக்ரபாத முனிவரால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் என்று வைக்கம் மகாதேவர் தல வரலாறு குறித்து, பார்க்கவ புராணம் தெரிவிக்கிறது.

இந்தக் கோவில் கருவறையில் இரண்டு அடி உயரப் பீடத்தில், நான்கு அடி உயரமுடைய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கிறது. மூலவரான இவரது பெயர் மகாதேவர் என்பதாகும். இருப்பினும் அனைவருக்கும் பரவலாக அறியப்பட்ட பெயர் வைக்கத்தப்பன் என்பது தான்.

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்டதால் ‘வியாக்ரபுரீசுவரர்’ என்றும் இத்தல இறைவனை அழைப்பதுண்டு.

இந்த ஆலயத்தில் அம்மனுக்கு என்று தனியாகச் சன்னிதி இல்லை. கோவிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அம்மனை வழிபட்ட பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்கின்றனர்.

ஒவ்வொரு முறை நடை சாத்தும் போதும் பகலிலும், இரவிலும் கோவில் அர்ச்சகர் ஒருவர் நான்கு கோபுர வாசல்களிலும் கையில் பந்தத்துடன் வந்து யாரும் பசியாக இருக்கின்றீர்களா? என்று கேட்டு விட்டு செல்லும் நடைமுறை இந்த கோவிலில் இருக்கிறது.

அப்படி யாரேனும் பசியாக உள்ளேன் என்று சொன்னால் அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்று அவருக்கு உணவிட்டு பின் தான் கோவில் நடையை சாத்த வேண்டும். இதை ஈசனின் கட்டளையாகவே இன்றும் பின்பற்றுகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top