கீதையில் குறிப்பிட்டுள்ள பதினெட்டு வித குணங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கீதையில் குறிப்பிட்டுள்ள பதினெட்டு வித குணங்கள் பற்றிய பதிவுகள் :

பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றால் தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

1 காமம்:

பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது என்பதை கீதையின் முதல் அத்யாயம் நமக்கு விளக்குகிறது.

2 குரோதம்:

கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும் என்பதை கீதையின் இரண்டாவது அத்யாயம் நமக்கு விளக்குகிறது.

3 லோபம்:

பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது என்பதை கீதையின் மூன்றாவது அதிகாரம் நமக்கு விளக்குகிறது.

4 மதம்:

யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும் அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான் என்பதை கீதையின் நான்காவது அதிகாரம் நமக்கு விளக்குகிறது.

5 மாத்ஸர்யம்:

மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம் அதுவே அவனை அழித்துவிடும் என்பதை கீதையின் ஐந்தாவது அதிகாரம் விளக்குகிறது.

6 டம்பம் (வீண் பெருமை):

அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது என்பதை கீதையின் ஆறாவது அதிகாரம் விளக்குகிறது.

7 அகந்தை:

‘தான்’ என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேறவே முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை. இதனால் ஏற்படும் தீமைகளை கீதையின் ஏழாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.

8 சாத்வீகம்:

விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும். இதனை கீதையின் எட்டாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.

9 ராஜஸம்:

அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது இதனை கீதையின் ஒன்பதாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.

10 தாமஸம்:

அற்ப புத்தியை பற்றி நிற்பது மதி மயக்கத்தால் வினை செய்வது. அப்படி செய்யப்படும் வினையால் ஏற்படும் துன்பம் போன்றவற்றை கீதையின் பத்தாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.

11 ஞானம்:

எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு பற்றி இந்த அத்யாயம் தெளிவாக விளக்குகிறது.

12 மனம்:

நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும் எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும். அது எப்படி என்பதைத் தான் கீதையின் பன்னிரெண்டாவது அத்யாயம் விளக்குகிறது.

13 அஞ்ஞானம்:

உண்மைப் பொருளை அறிய மாட்டாது. மூடி நிற்கும் இருளை விளக்கி மெய் ஞானத்தை அடைய வழி வகை செய்கிறது இந்த அத்யாயம்.

14 கண்:

ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது இந்த அத்யாயம்.

15 காது:

ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும். அது எப்படி என்பதை இந்த அத்யாயம் எடுத்துரைக்கிறது.

16 மூக்கு:

ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும். அத்துடன் பக்தியில் ஆழ்ந்து முக்தி பெரும் வழியை இந்த அத்யாயம் எடுத்துக் கூறுகிறது.

17 நாக்கு:

கடுஞ் சொற்கள் பேசக்கூடாது. அது பற்றிக் கூறுகிறது இந்த அத்யாயம்.

18 மெய்:

இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top