ஆலயங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தின் சிறப்புகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆலயங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தின் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

கோவில்களில் காணப்படும் கொடிமரத்தில் புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி தாமிரம் மற்றும் தங்க தகடுகளால் மறைக்கப்பட்டு மேலே மூன்று அடுக்குகளால் அமைக்கப்படுகிறது.

இந்த கொடிமரத்தை சமஸ்கிருதத்தில் “துவஜஸ்தம்பம்” என்று அழைக்கப்படுகிறது. கோவில் கோபுரத்திற்கும் சந்நிதானத்திற்கும் இடையே 13 மீட்டர் இடைவெளி விட்டு கொடி மரம் அமைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு கோவிலுக்கும் மாறுபடும்.

சிவன் கோவில்களில் உள்ள கொடிமரம்,நந்தி மூலவரை நோக்கி இருக்குமாறு அமைக்கப்படுகிறது. கொடி மரத்தின் அடிப்பகுதி அகலமாகவும் சதுரமாகவும் இருக்கும்.

கொடிமரம் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் இவர்களின் தொழில்களை உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது. கொடி மரம் ராஜகோபுரத்தை விட உயரம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும்.

கொடிமரத்தில் மேலே உள்ள உலோக தகடுகள் இடி மின்னல் தாக்குதலில் இருந்து ஆலயத்தை பாதுகாக்கும். ஒரு ஆலயத்தை முழுமை அடைய செய்வது அந்த ஆலயத்தில் உள்ள கொடிமரம் தான்.

கடவுளை காண முடியாவிட்டாலும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கொடி மரத்தை வணங்குவது அவசியம். கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடிமரத்தை வணங்கினால் இறைவனை வணங்கியதற்கு சமமாகும்.

கோவில் திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றுவது எதற்காக என்றால், திருவிழாவிற்கு வரும் பக்தர்களை உயர்நிலை அடைய செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் புரிய போகிறார் என்பதாகும்.

திருவிழா நாட்களில் அந்த ஊர் முழுவதையும் தன் கட்டுக்குள் இறைவன் வைத்திருப்பதை
உணர்த்தும் விதமாக கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. இறைவனை அடைந்தால் அழிவற்ற, ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருக்கலாம் என்று நினைத்து,கொடி மரத்தை வணங்க வேண்டும். மேலும் ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு வாகனம் இருப்பது வழக்கம்.

அதன்படி, அந்த வாகனத்தின் உருவத்தையே அந்தந்த கடவுளின் திருவிழாவின் போது கொடியில் வரைந்து ஏற்றுவது நடைமுறையாகும். அவ்வாறு பார்க்கையில்,

விநாயகருக்கு -- மூஞ்சூறு.
முருகனுக்கு -- மயில்சேவல்.
சிவபெருமானுக்கு -- நந்தி.
அம்மனுக்கு -- சிங்கம் அல்லது சூலம்.
சாஸ்தாவுக்கு -- குதிரை.
பைரவருக்கு -- நாய்.
பெருமாளுக்கு -- கருடன்.

நாகர் கோவிலில் உள்ள நாகராஜர் கோவிலில் இருக்கும் பெருமாளுக்கு மட்டும் ஆமை சின்னம் உள்ளது. (பாம்புக்கும், கருடனுக்கும் பகை என்பதால் இங்கு மட்டும் ஆமை உள்ளது) துவஜஸ்தம்பம் எனப்படும் திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top