சபரிமலைக்கு கன்னி சாமிகள் செல்வதற்கு முன் வழிபட வேண்டிய கன்னி பூஜைகள்

Siva
2
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவில் இருந்து சபரிமலைக்கு கன்னி சாமிகள் செல்வதற்கு முன் வழிபட வேண்டிய கன்னி பூஜைகள் பற்றிய பதிவுகள் :

முதல்முறையாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களை கன்னி சாமிகள் என்று அழைப்பார்கள். நித்திய பிரம்மச்சாரி கோலத்தில் காட்சியளிக்கும் ஐயப்பன் நாம் மாலையிட்ட நாளிலிருந்து சபரிமலைக்கு எப்போது வருவோம் என்று நம் வருகைக்காக காத்திருப்பதாக ஐதீகம்.

நம் வேண்டுதலை முன்வைத்து மாலையிட்டு 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசித்து வந்தால் நம் கவலைகள் நீங்கி வேண்டுதல் நிறைவேறும்.

கன்னி சாமிகள் சபரிமலைக்கு செல்வதற்கு முன் தங்கள் வீட்டில் கன்னி பூஜை மற்றும் பஜனைகள் செய்ய வேண்டும்.

வீட்டில் பெரிய பூஜை அறை இருந்தால் அங்கு செய்யலாம் அல்லது வீட்டின் கிழக்குப் பகுதியில் சிறியதாக ஒரு அலங்காரமண்டபம் அமைத்து அதில் ஐயப்பன் திருவுருவப்படத்தை வைத்து, இருப்பிடமும் இரு குத்து விளக்குகள் ஏற்றி, தினமும் மலர் மாலைகளை அணிவித்து காலை மற்றும் மாலை வேலைகளில் அவல், பெரி மற்றும் பழங்களை படைத்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும்.

தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் குளித்து விட்டு அதன் பின் விளக்கேற்றி கற்பூர ஆரத்தி காட்டி சரண கோஷம் பாட வேண்டும்.

கன்னி பூஜை :

மாலையிட்ட இந்த 48 நாட்களுக்குள் ஒரு நாளை தேர்வு செய்து உறவினர்கள் நண்பர்கள் மற்றும் உடன் மாலையிட்டவர்களை அழைத்து குருசாமியின் உதவியுடன் கன்னி பூஜை செய்ய வேண்டும்.

குருசாமி பூஜைகள் செய்ய உடன் இருப்பவர்கள் அனைவரும் அருகில் அமர்ந்து கைகளை தட்டி முதலில் கணபதி பாடலில் தொடங்கி முருகன் பாடல், ஐயப்பன் பாடல், அம்மன் பாடல், சிவன் பாடல், மஹாவிஷ்ணு பாடல், நாகராஜா பாடல் என வரிசையாக பாடி கடைசியாக பதினெட்டாம் படி காவலாளியான கருப்பசாமி பாடலை பாட வேண்டும். முக்கியமாக உங்கள் ஊர் அருகில் உள்ள கடவுள்களை பாடல்களும் இடம்பெற வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி பாடல்களை ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக பாடி முடித்த பின், இறுதியில் தீபாராதனைக்கு முன் மங்களம் பாடி பஜனையை நிறைவு செய்ய வேண்டும்.

இந்த தீப ஆராதனைக்கு பிறகு ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஐயப்பனுக்கு ஆழி பூஜை என்னும் முக்கிய பூஜை செய்து இந்த கன்னி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

ஆழி பூஜை :

பஜனைகள் செய்து தீபாராதனை முடிந்ததும் ஒரு தாம்பூலத்தில் விபூதியை நிரப்பி அதை சுற்றி மலர்களால் அலங்கரிக்க வேண்டும். அதன் நடுப்பகுதியில் கற்பூரத்தை வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

வீட்டிற்கு வெளியே வாசல் பகுதியில் அல்லது சாதகமான ஒரு இடத்தின் மையப்பகுதியில் இந்த ஆழியை வைத்து மாலையிட்ட அனைவரும் அதனை சுற்றி சரண கோஷம் பாட வேண்டும். அந்த ஆழியில் ஏற்றப்பட்டுள்ள கற்பூர தீபம் அணையும் வரை இந்த சரண கோஷத்தை தொடரவும்.

தீபம் அணைந்ததும் அனைவரும் பூஜையை நிறைவு செய்து குருசாமி இடம் பிரசாதம் வாங்கிக் கொள்ளவும். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கி இந்த கன்னி பூஜையை முடிவு செய்யவும்.

Post a Comment

2 Comments
  1. மிகவும் அருமையான இந்த தகவலை பகிர்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  2. நான் வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தகவல்.

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
Post a Comment
To Top