கார்த்திகை மாத பரணி தீபம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கார்த்திகை மாத பரணி தீபம் பற்றிய பதிவுகள் :

கார்த்திகை மாதம் என்றாலே நினைவிற்கு வருவது தீபம் தான். இந்த நாளில் மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளிலும், கோவில்களிலும் விளக்கு ஏற்றி சிவனை வழிபடுவது வழக்கம்.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. 

அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜை செய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, 'ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்" தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.

தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திருநாளில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ் மாதம் கார்த்திகை 20ஆம் தேதி (டிசம்பர் 6) செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளது. 

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் (மஹா தீபம்), விஷ்ணு தீபம், நாட்டுக்கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என ஐந்து தீபங்கள் ஏற்றப்படும்.

பரணி தீபம் என்றால் என்ன?

கார்த்திகை தீபத்திற்கு முந்தைய நாள் அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் 'பரணி தீபம்" என்று பெயர் பெற்றது. 

படைத்தல், காத்தல், அழித்தல், அளித்தல், அருளல் என்ற சிவனின் ஐந்து அம்சங்களையும் காட்டும் விதமாகவே பரணி தீபம் காட்டப்படுகிறது.

ஐந்து பெரிய அகல் விளக்குகளில் நிறைய நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது வழக்கம். ஐந்து என்பது பஞ்சபூதங்களை குறிக்கிறது. 

பஞ்ச பூதங்களுக்கு தலைமையாக விளங்கும் அருணாச்சலேஸ்வரரை வழிபடவே இவ்வாறு ஏற்றப்படுகிறது. கோவில்களில் அதிகாலையில் ஏற்றப்படும் தீபம் மிகவும் விசேஷமானது. ஆனால் நாம் வீடுகளில் காலையில் ஏற்றுவதை விட மாலையில் ஏற்றி வழிபடலாம். 

சிவபெருமானை வேண்டி வணங்கக்கூடிய பரணி தீபத்தை வீட்டில் ஏற்றுவதால் பாவங்கள் அழிக்கப்படும் என்பது ஐதீகம்.

விளக்கேற்றும் நேரம்:

மாலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை.

ஒருவர் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளிலிருந்து விமோசனம் பெற, கார்த்திகை மாத பௌர்ணமி அன்று ஏற்றக்கூடிய பரணி தீபத்தை வீட்டிலும் முறையாக ஏற்றி வழிபடலாம். பரணி தீபத்தன்று ஐந்து புதிய மண் அகல் விளக்குகளை ஏற்றுவது தான் விசேஷம். 

ஒரு தாம்பூலத் தட்டில் மலர்களைப் பரப்பி அதன் மேல் மஞ்சள், குங்குமம் இட்ட அகல் விளக்குகளை வைத்து, நெய் ஊற்றி, தீபம் ஏற்றி வழிபடலாம். பரணி தீபத்தன்று ஏற்றும் விளக்கானது எண்ணெய்யை தவிர்த்து நெய்யால் ஏற்றினால் மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top