கார்த்திகை பௌர்ணமி மற்றும் தேவ தீபாவளி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கார்த்திகை பௌர்ணமி மற்றும் தேவ தீபாவளி பற்றிய பதிவுகள் :

கார்த்திகை மாத பௌர்ணமியானது அனைத்து மாதங்களை விடவும் சிறப்பான ஆன்மீக சாதனைகளுக்கு ஏற்புடைய நாள். அந்தர்முக சாதனைகள், தியானம், அர்ச்சனை, ஜபம் அனைத்திற்கும் பௌர்ணமி மிக உகந்தது. 

கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் கடைப்பிடிப்பது மிக உயர்வானது. அப்படி மாதம் முழுவதும் விரதம் இருக்க இயலாதவர்கள் குறைந்தது 5 நாட்களாவது விரதம் இருக்க வேண்டும். 

கடவுளுக்கு அர்ச்சனை, வழிபாடு செய்து பௌர்ணமியன்று பிரத்யேகமாக உபவாச நியமங்களோடு அவரவர் உடல்நிலையை கவனத்தில் கொண்டு உபவாசமோ, ஏகபக்தமோ, ஆகார நியமத்தோடு  ஜபம், தியானம், வழிபாடுகள் போன்றவை செய்ய வேண்டும். 

கார்த்திகை பௌர்ணமி தியானத்திற்கு முக்கியமான திதி. கார்த்திகை மாதமும் பௌர்ணமி திதியும் சிவன், விஷ்ணு, சக்தி மூன்று கடவுளருக்கும் முக்கியமானது. அதனால் சரத் பூர்ணிமாவான இன்று அம்பிகையை வழிபடுவது சிறந்தது.

ஐப்பசி, கார்த்திகை இரு மாதங்களும் அம்பிகையின் வழிபாட்டிற்கு சிறப்பானது. ‘சாம்பவி சாரதாராத்யா…’ என்று போற்றி வழிபடுகிறோம். சரத் ருதுவில் வழிபடப்படுபவள் என்று கூறும்போது ஐப்பசி, கார்த்திகை இரு மாதங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இன்று பகலில் உபவாசமிருந்து இரவில் கண்விழித்து நிருத்தியம், கீதம், வாத்யங்களால் கீர்த்தனை செய்து நாராயணனை சேவிக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. இவ்வாறு செய்வதால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கிறது.

இன்று அருணோதயத்தில் சிவனை வழிபட்டு ப்ராத: காலத்தில் சிறப்பாக வழிபடுவோருக்கு பல ஆண்டுகள் சிவ பூஜை செய்த பலன் கிடைக்கும். இது கார்த்திகை பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய சிவ வழிபாடு. ஏனென்றால் கார்த்திகை நட்சத்திரம் அக்னி நட்சத்திரம். இது யக்ஞ அக்னியோடு தொடர்புடையது. சாக்ஷாத் ருத்ரனே யக்ஞ அக்னி.

கார்த்திகை மாதம் சிவனுக்கு ப்ரீதியாக இருப்பதற்கு காரணம், யக்ஞ அக்னியாக, யக்ஞ பலனை அளிப்பவராக பரமேஸ்வரன் விளங்கும் தெய்வீக நட்சத்திரம் கிருத்திகா நட்சத்திரம். பரமசிவனே ஒரு மஹா அக்னி லிங்கமாக உதித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. 

சிவனின் சொரூபமே அக்னி. அக்னி என்றால் படைப்பு அனைத்திற்கும் முதலில் தோன்றிய தேஜஸ் என்று பொருள். இது பஞ்சபூதங்களில் இருக்கும் அக்னி மட்டுமே அல்ல. பஞ்சபூதத்தில் உள்ள அக்னியில் சிருஷ்டிக்கு முதலில் தோன்றிய பரஞ்சோதியை சிந்தனை செய்து வழிபடுகிறோம். தீபத்தை ஏற்றி அதில் பரஞ்சோதியை வழிபடுகிறோம்.

ஏற்றும் வரை அது ஒளி. ஏற்றி வழிபடும் போது அது பரஞ்ஜோதி ஆகிறது. அந்த தீப ஒளியில் பரமேஸ்வரனை தரிசனம் செய்கிறோம். பரமேஸ்வரனை ஜோதி வடிவில் வழிபடுகிறோம். இந்த வழிபாடும் தியானமும் சிறிது சிறிதாக அந்தர்முக பாவனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

கார்த்திகை பௌர்ணமியன்று தேவதைகளின் திருப்திக்காக விசேஷமாக தீபங்கள் ஏற்றவேண்டும். தீபங்களைப் பார்த்து தேவதைகள் மகிழ்ச்சி அடைவர். ஏனென்றால் தேவதைகள் ஜோதி ஸ்வரூபங்கள். தேவதைகள் திருப்தி அடைந்து தீபமேற்றியவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், சம்பத்து அனைத்தையும் அருளுவர்.

தீபத்தால் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும் என்று சாத்திரம் உரைக்கிறது. ஒரு கோரிக்கையை மனதில் நினைத்து அது நிறைவேறுவதற்கு ஒரு தீபத்தை ஏற்றி இறைவனுக்கு நிவேதனம் செய்யும் போது கட்டாயம் அபீஷ்ட சித்தியைப் பெற முடியும். ஏனென்றால் தீபத்தை ஆதாரமாகக் கொண்டே தேவதைகள் விளங்குவர்.

தீபத்தை ஏற்றிய உடனே தொல்லை கொடுக்கும் துஷ்ட சக்திகள் விலகி விடும் என்பது சாத்திரங்கள் தெரிவிக்கும் உயர்ந்த செய்தி. அதனால்தான் கார்த்திகை பௌர்ணமிக்கு பிரதானமாக ‘தீப பௌர்ணமி’ என்ற பெயர் உள்ளது. இதுவும் மற்றுமொரு தீபாவளியே! ஐப்பசியில் கொண்டாடும் அமாவாசை தீபாவளி ‘பித்ரு தீபாவளி’. இது ‘தேவ தீபாவளி’. தேவதைகள் மகிழும் பண்டிகை தீப கார்த்திகை.

காசி மஹா க்ஷேத்திரத்தில் இந்த கார்த்திகை பௌர்ணமியன்று படித்துறைகள் அனைத்திலும் தீபமேற்றி தேவதைகளின் கடவுளான பரமேஸ்வரனை வழிபடுகிறார்கள். இன்றைய தினம் தேவதைகள் கூட தீபங்களால் சிவனை வழிபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top