சித்திரை திருவோணம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சித்திரை திருவோணம் பற்றிய பதிவுகள் :

சிவபெருமான் அக்னி ரூபமானவர். எனவேதான் அவரைக் குளிர்விக்க தினமும் அபிஷேகம் செய்துவழிபடுவர். லிங்கத்தின் மீது ஜலதாரை வீழ்ந்தவண்ணம் இருக்கும். நடராஜருக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.

சித்திரைத் திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி ஆகிய நாள்களில் இந்த அபிஷேகங்கள் நடைபெறும். சித்திரைத் திருவோண நாளான இந்த நாளில் சிதம்பரத்தில் நடராஜப்பெருமானுக்குக் கோலாகலமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

சிதம்பரம் கோயில் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆனந்த நடராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது. வேண்டும் வரங்களை உடன் அருள்வது. தரிசித்தால் முக்தி தருவது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவது. சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தரும் ஸ்தலம் சிதம்பரம். சிதம்பர ரகசியம்.

சிவபெருமானுக்கும் ஐந்து என்ற எண்ணுக்கும் அநேக தொடர்புகள் உள்ளன. பஞ்சாக்ஷரம் ஐந்து எழுத்து. நடராஜர் செய்யும் செயல்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து. பஞ்ச பூதங்களுக்கும் அதிபதியாக அமந்த ஸ்தலங்கள் ஐந்து. மகேஸ்வரனின் சக்தி ரூபங்கள் ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகிய ஐந்து.

சிதம்பர ஸ்தலத்தின் முக்கிய பிரகாரங்கள் ஐந்து. ஈஸ்வரனின் முகங்கள் ஐந்து. பரமேஸ்வரனின் முகங்கள் ஐந்து. சித்தாந்தக் கலைகளின் ஐந்திற்கும் நாயகராக விளங்குபவர். பஞ்சாங்கம் என்பது ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது. 1.திதி, 2.வாரம், 3. நக்ஷத்திரம், 4. யோகம், 5. கரணம். 

அண்டத்தின் பரம்பொருள் நடராஜப் பெருமான். அடிமுடி காணமுடியாதவர். அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருப்பவர். அவரன்றி அணுவும் அசையாது. சிவபெருமான் அண்டத்தின் பால்வெளியில் அமைந்த நவக்ரஹங்களையே மாலையாக அணிந்தவர். சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் சன்னிதியில், பஞ்சாக்ஷர படிக்குக் கீழே, தினமும் பஞ்சாங்கம் படிக்கப்படுவது ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வருகிறது. நக்ஷத்திரங்களும், ராசி மண்டலங்களும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் கட்டளைக்கிணங்க இயங்குகின்றன.

தேவர்கள் வழிபடும் சிவ மூர்த்தம் நடராஜர். தினமும் ஆறுகால பூஜைகள் செய்து அவர்கள் அவரை வழிபடுகிறார்கள். நமக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளுக்குச் சமம். அப்படியிருக்க அவர்கள் அபிஷேகம் செய்யும் ஆறு காலங்களே இந்த ஆறு தினங்கள் என்கின்றன புராணங்கள். தேவர்கள் வழிபடும் காலத்தில் நாமும் நடராஜப்பெருமானை அபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என்று வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top